டாஸ்மாக் கடை மோதல்களுக்கு இது தான் காரணம்... இதைச் சரி செய்தால் எல்லாம் சரியாகும்.. ஈஸ்வரன் யோசனை..!
சென்னை: சட்ட ஒழுங்கு சீர்கெடுவதற்கான ஆரம்ப இடமாக டாஸ்மாக் திகழ்வதாகவும் இதனால் இதை முறைப்படுத்த வேண்டிய அவசியம் எழுந்துள்ளதாகவும் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சித் தலைவர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அரசின் விதிமுறைகள் டாஸ்மாக் மற்றும் மதுபான பார்களில் முறையாக கடைபிடிக்கப்படுகிறதா என்பதை உரிய அதிகாரிகள் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இதனிடையே இது தொடர்பாக அவர் அரசுக்கு அளித்துள்ள யோசனை விவரம் பின்வருமாறு;

டாஸ்மாக் ஊழியர்
காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட கடை எண் 4109-ல் விற்பனையாளர் துளசிதாஸ் கொல்லப்பட்டு இருக்கிறார். அதே கடையில் பணியாற்றிய மற்றொரு விற்பனையாளர் ராமு படுகாயம் அடைந்து இருக்கிறார்.மதுபான விற்பனை நிலையங்கள் தான் சட்ட ஒழுங்கு சீர்கெடுவதற்கான ஆரம்ப இடமாக பல குற்றங்களில் அமைந்து விடுகிறது. மதுபான கடைகளில் பல்வேறு செயல்பாடுகள் கடந்த 10 ஆண்டுகளாக முறைபடுத்தபடாதது தான் இதற்கான காரணம்.

விற்பனை பணம்
டாஸ்மாக் கடையில் வேலை பார்க்கும் விற்பனையாளர்கள் அன்றைய விற்பனையான பணத்தை பாதுகாப்பான முறையில் உடனடியாக செலுத்துவதற்கான வழிமுறைகள் தேவை.பல இடங்களில் பணத்திருட்டிற்காகவும் குற்றசெயல்கள் நடக்கின்றன.டாஸ்மாக் கடையில் மது விற்பனைக்கு ரசீது தரப்படுவது இல்லை.ஆதலால் இடத்திற்கும், சூழ்நிலைக்கும் தகுந்தவாறு அதிகப்படியான விலைக்கு விற்கப்படுகிறது.இதனால் வாக்குவாதம் ஏற்பட்டு முடிவில் பிரச்சனை ஏற்படுகிறது.

வழிகாட்டு நெறிமுறை
மதுபான கடைகளில் வாடிக்கையாளர்களுக்கு நன்றாக தெரிகின்ற வகையில் விலைப்பட்டியல் வைப்பதை உறுதி செய்ய வேண்டும். டாஸ்மாக் ஊழியர்களுக்கு நியாயமான சம்பளம் வழங்கப்பட வேண்டும். டாஸ்மாக் கடைகளை ஒட்டி இருக்கின்ற மதுபான பார்கள் தேவையான இடவசதி கொண்டு நாகரிகமான இடமாக இருக்க வேண்டும்.டாஸ்மாக் நிர்வாகம் இதற்கான வழிகாட்டி நடைமுறைகளை வரையறுக்க வேண்டும்.

கோரிக்கை
மேற்கண்டவற்றிற்கு அரசினுடைய உத்திரவு தெளிவாக இருந்தாலும் அது சரியாக கடைபிடிக்கப்படுகிறதா என்பதை சம்பந்தப்பட்ட அதிகாரி உறுதி செய்ய வேண்டும். உயிரிழந்த டாஸ்மாக் ஊழியர் துளசிதாஸ் குடும்பத்திற்கும் படுகாயமடைந்த ராமுவின் குடும்பத்திற்கும் உரிய உதவிகளை உடனடியாக செய்ய வேண்டும்.மாநிலத்திலுள்ள ஒவ்வொரு டாஸ்மாக் கடையும் காவல் துறையின் தீவிர கண்காணிப்பின் கீழ் கொண்டுவர நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.












Click it and Unblock the Notifications