சரித்திரத்தின் குப்பைக் கூடைகளில் பாஜகவின் தவறான கொள்கைகள் தூக்கி வீசப்படும்- கே.எஸ்.அழகிரி ஆவேசம்
சென்னை: மத்திய பாரதிய ஜனதா கட்சியின் தவறான கொள்கைகள் சரித்திரத்தின் குப்பைக் கூடைகளில் தூக்கி வீசப்படும் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
மத்திய பா.ஜ.க. அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சிகள் நாடு முழுவதும் இன்று முதல் 30-ந் தேதி வரை ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டங்கள் நடத்துவதாக அறிவித்துள்ளன. இதனையொட்டி தமிழகம் முழுவதும் பெட்ரோல் டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வு, புதிய வேளாண் திருத்த சட்டம், குடியுரிமை திருத்த சட்டம், பெகாசுஸ் உளவு பார்த்தல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்ற வகையில் மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சிகள் சார்பாக வீடுகளில் கருப்பு கொடி ஏற்றும் போராட்டம் இன்று நடைபெற்றது
இதனையொட்டி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமை அலுவலகமான சென்னை சத்திய மூர்த்தி பவனில் கே.எஸ். அழகிரி கருப்பு கொடி ஏற்றி பேசியதாவது: புதிய வேளாண் திருத்த சட்டம் , குடியுரிமை திருத்த சட்டம் உள்ளிட்ட மத்திய அரசின் மக்கள் விரோத சட்டங்களுக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய முதல்வர் ஸ்டாலினை மனதார பாரட்டுகின்றேன் இதுதான் மக்கள் அரசு.
7 ம் வகுப்பில் எனக்கு பென்ஸ் கார் வாங்கி கொடுத்தார் என் தந்தை.. ரெய்டு குறித்து கே சி வீரமணி!
இன்றைய போராட்டம் அரசியல் போராட்டம் அல்ல. இந்திய வரலாற்றை காப்பாற்றுவதற்கான போராட்டம். முன்னாள் பிரதமர் நேரு, இந்தியா முழுவதும் ஏராளமான பொதுத்துறை நிறுவனங்களை உருவாக்கி பல லட்சம் கோடி ரூபாய் வருமானம் ஈட்டினார். இந்தியாவில் ஜனநாயகத்தையும் சோசியலிசத்தையும் கொண்டுவந்தவர் ஜவஹர்லால் நேரு. ஏகாதியபத்தியத்திற்கு எதிரான கருவியாக காங்கிரஸ் கட்சி இருந்தது. தற்போது பொதுத் துறை நிறுவனங்களை விற்பனை செய்து வருகின்றார் மோடி.
தனியார்மயமாக்கல்
நாட்டிற்கு வருமானம் வராத நிறுவனங்களை தான் காங்கிரஸ் கட்சி விற்பனை செய்தது. ஆனால் வருமானம் ஈட்டி வருகின்ற ரயில்வே துறை, காப்பீட்டு நிறுவனம், நிலக்கரி சுரங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களை விற்பனை செய்து வருகின்றது பாஜக அரசு. விரைவில் மக்கள் விரோத பாஜக அரசு கொண்டுவந்த தவறான கொள்கைகள் தூக்கி வீசப்படும். இவ்வாறு கே.எஸ்.அழகிரி பேசினார்.
பொதுத்துறை அழிப்பு
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த கே எஸ் அழகிரி, கடந்த மாதம் 20-ந் தேதி நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் முடிவெடுத்ததன் படி இன்று தமிழகத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தமிழகம் முழுவதும் கறுப்புக்கொடி ஏற்றி ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறோம். இந்தியாவின் பொருளாதாரம் ஜனநாயக சோசியலிசம் என்று சொல்லக்கூடிய ஒரு கலப்பு பொருளாதாரம். இதில் பொதுத்துறை மற்றும் தனியார் துறை இரண்டும் உண்டு.. தற்போது பொதுத் துறைகளை திட்டமிட்டு அழிக்கிறார்கள்.
ஜியோவுக்காக செயல்படும் அரசு
லாபகரமாக செயல்படும் பொதுத் துறைகளை விற்கிறார்கள். தனியார் துறைகளில் கூட இவர்களுக்கு வேண்டாதவர்களை அழிக்கின்றார்கள்.. உதாரணத்திற்கு ஏர்செல்-ஐ ஒழித்தார்கள்.. அடுத்ததாக ஏர்டெல்லை தற்போது அழிக்க திட்டம் தீட்டியுள்ளார்கள். இவர்களது நோக்கம் ஜியோவை மட்டுமே 130 கோடி மக்களும் பயன்படுத்த வேண்டும் என்பதே ஆகும்.
கொள்ளையடிக்க ஜிஎஸ்டி
ஆனால் காங்கிரஸ் மற்றும் அதன் தோழமை கட்சிகள் இதனை எதிர்ப்போம். அனைவருக்கும் சமமான வாய்ப்பு அளிக்க ஏற்பாடு செய்வோம்.. சரித்திரத்தின் குப்பைக் கூடைகளில் இன்று பாரதிய ஜனதா கொண்டு வந்துள்ள தவறான கொள்கைகள் தூக்கி வீசப்படும். ஜிஎஸ்டி காங்கிரஸ் கொண்டு வந்தது அதை எதற்காக கொண்டு வந்தோம் என்றால் வரி விகிதம் குறைவாகவும் சமமாகவும் இருக்கவேண்டும் என்ற எண்ணத்தில் கொண்டு வந்தது. ஆனால் அதனையே வியாபாரிகளையும் பொதுமக்களையும் கொள்ளையடிப்பதற்காக பாரதிய ஜனதா பயன்படுத்துகிறது.
கல்வி மாநில உரிமை
தேங்காய் எண்ணெய், பெண்கள் அதிக அளவில் பயன்படுத்தும் ஒரு பொருள். அதற்கு 18 சதவீத வரி விதிப்பது தேங்காய் உற்பத்தியாளர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும். மத்திய அரசு அதை மாற்றிக்கொள்ள வேண்டும். தமிழகத்தின் சிறப்பு என்னவென்றால் ஏழு ஆண்டுகள் மோடி செய்ய முடியாத ஒன்றை தமிழகத்தில் 100 நாட்களில் ஸ்டாலின் செய்துள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின். பெட்ரோலின் விலையில் 3 ரூபாய் குறைத்துள்ளார்.. இதை பின்பற்றி பிரதமர் மோடி வரியை படிப்படியாக குறைத்தால் நமது பொருளாதாரம் மேம்படும். மக்கள் பயனடைவார்கள். கல்வி என்பது மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் சமமான உரிமை உள்ள இலாகா. நமது கருத்துக்களை தீர்மானம் மூலமாக மத்திய அரசுக்கு வழங்க இருக்கின்றோம். நீதிமன்றத்திற்கும் சென்றுள்ளோம். மத்திய அரசு இதனை பரிசீலிக்கவில்லை என்றால் தமிழகத்தில் வேறு நிலையை எடுப்போம் என்றார்.