துரைமுருகனையும், டி.ஆர்.பாலுவையும் மனதார வாழ்த்துகிறேன் -கே.எஸ்.அழகிரி
சென்னை: திமுக பொதுச்செயலாளராக பொறுப்பேற்கவுள்ள துரைமுருகன் மற்றும் பொருளாளராக பொறுப்பேற்கும் டி.ஆர்.பாலு ஆகிய இருவருக்கும் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது;
துரைமுருகன் தி.மு. கழகத்தின் பொதுச்செயலாளர் மற்றும் பொருளாளர் ஆகிய பொறுப்புகளுக்கான வேட்பு மனு 3.9.2020 அன்று தாக்கல் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து பொதுச்செயலாளர் பொறுப்புக்கு வேட்பு மனுவை திரு. துரைமுருகன் அவர்களும், பொருளாளர் பொறுப்புக்கு வேட்பு மனுவை தி.மு.கழக நாடாளுமன்ற குழுத் தலைவர் திரு. டி.ஆர். பாலு அவர்களும் தாக்கல் செய்தனர்.
இந்த வேட்பு மனுக்களுக்கு மாற்றாக வேறு எவரும் தாக்கல் செய்யாததால் இவர்கள் இப்பொறுப்புகளுக்கு தேர்வு பெறுவது உறுதியாகி விட்டது.
தி.மு. கழகத்தின் பொதுச்செயலாளர் பொறுப்பு என்பது தலைவருக்கு அடுத்த நிலையில் அதிக அதிகாரங்களைக் கொண்டதாகும். பேராசிரியர் க. அன்பழகன் அவர்கள் 40 ஆண்டுகளுக்கும் மேலாக அப்பொறுப்பை தொடர்ந்து வகித்து பெருமை சேர்த்திருக்கிறார்.
மகுடம் சூட்டிய திமுக- கொள்கை போராளியாக இணைந்து.. பொதுச்செயலாளராக உயர்ந்த துரைமுருகன்
அந்த பொறுப்பை ஏற்க இருக்கும் தி.மு. கழகத்தின் மூத்த தலைவர்களில் ஒருவரான திரு. துரை முருகன் அவர்களை மனதார வாழ்த்துகிறேன். அதேபோல, பொருளாளராக பதவி ஏற்கும் முன்னாள் மத்திய அமைச்சர் திரு. டி.ஆர். பாலு அவர்களையும் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வாழ்த்துகிறேன்.