திமுக ஆட்சிக்கு வந்த பிறகு 1,339 கோயில்களில் குடமுழுக்கு! இந்து சமய அறநிலையத்துறை புதிய பரிமாணம்!
சென்னை: திமுக ஆட்சிக்கு வந்த பிறகு 1,339 திருக்கோயில்களில் குடமுழுக்கு விழாக்கள் நடத்தப்பட்டுள்ளதாகவும் 1,000 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழமையான கோயில்களை புனரமைக்க 2 ஆண்டுகளில் ரூ.200 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளதாகவும் இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு விடுத்துள்ள செய்திக்குறிப்பு வருமாறு;
''தமிழ்நாட்டின் கலைச் செல்வங்களாக–பண்பாட்டுப் பேழைகளாகத் திகழும் திருக்கோவில்களின் பராமரிப்பிலும், மக்கள் மனம் மகிழும் வகையில் திருக்கோவில் விழாக்களைத் தவறாமல் எழுச்சியோடு நடத்துவதிலும் முதல்வர் ஸ்டாலின் சிறப்புக் கவனம் செலுத்தி வருகிறார். இதன் காரணமாக, முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்ற 2021 மே திங்கள் முதல் இதுவரை 1339 திருக்கோயில்களுக்குக் குடமுழுக்கு விழாக்கள் நடத்தப்பட்டுள்ளன.''

''ஆயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட திருக்கோயில்களைப் புனரமைப்பு செய்வதற்காக இரண்டு ஆண்டுகளில் ரூ.200 கோடி அரசு மானியமாக வழங்கப்பட்டுள்ளது. இந்த 200 கோடி ரூபாயுடன் நன்கொடையாளர்கள் வழங்கிய ரூ.104.84 கோடி ரூபாயையும் சேர்த்து மொத்தம் ரூ.304.84 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தற்போது 197 திருக்கோயில்களில் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன.''
''கிராமப்புறத் திருக்கோயில்களுக்கும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளில் உள்ள கோயில்களுக்கும் வழங்கப்பட்ட நிதி ரூ.1 லட்சம் என்பது ரூ.2 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் உதவிபெறும் கோயில்கள் எண்ணிக்கை ஆண்டுக்கு 1000 என்பது 1250 என உயர்த்தப்பட்டு இரண்டு ஆண்டுகளில் 2500 திருக்கோயில்களுக்கு ரூ.100 கோடி கூடுதலாக அரசு மானியம் அளிக்கப்பட்டுள்ளது.''
''இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள திருக்கோயில்களில் ஒருகால பூஜை கூட செய்ய நிதிவசதியில்லாத 12,959 திருக்கோயில்களுக்கு வழங்கப்பட்ட வைப்பு நிதி தலா ரூபாய் ஒரு லட்சம் என்பதை ரூ.2 லட்சமாக உயர்த்தி ரூ.130 கோடி அரசு மானியமாக வழங்கப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளில் புதிதாக 2,000 திருக்கோயில்கள் ஒருகால பூஜை திட்டத்தில் கூடுதலாகச் சேர்க்கப்பட்டு, தற்போது மொத்தம் 17,000 திருக்கோயில்கள் பயன்பெற்று வருகின்றன. இத்திட்டத்திற்காக மட்டும் அரசு ரூ.200 கோடி மானியமாக வழங்கியுள்ளது. ''












Click it and Unblock the Notifications