Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கும்பகோணம் மகாமகமும் கரூர் பிரச்சாரமும்! வரலாற்றின் கருப்பு பக்கம்! மக்களை பற்றி நினைக்காத தலைவர்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கரூரில் விஜய் பேச்சை முடிக்கும் முன்பே ஒவ்வொருவராக கூட்டத்தில் கீழே மயக்கமுற்று விழ துவங்கிவிட்டார்கள்.. விஜய்யின் வாகனத்தை சுற்றிலும் அத்தனை பேரும் மயங்கியதுமே பதற்றமும், அசௌகரியமும் சேர்ந்து கொண்டது.. இதையடுத்து 30க்கும் மேற்பட்ட உயிர்கள் பறிபோய்விட்டன.. ஒரு சாதாரண அரசியல் பிரச்சார கூட்டத்தில் இத்தனை பேர் அடுத்தடுத்து பலியாகியிருப்பது நாடு முழுவதும் ஏற்படுத்தி வருகிறது. இன்றைய சோக நிகழ்வு, அன்றைய கும்பகோணம் மகாமகம் சம்பவத்தையும் நமக்கு நினைவூட்டி செல்கிறது.

1992ம் ஆண்டு பிப்ரவரி 18 அன்று தமிழகமே நிலைகுலைந்து போய்விட்டது. கும்பகோணத்தின் கறுப்பு பக்கத்தில் இன்றுவரை கரைபடிந்து கிடக்கிறது அந்த மகாமகம் சம்பவம்.

kumbakonam mahamagam Karur

மறைந்த முதல்வர் ஜெயலலிதா முதன்முறையாக முதல்வராக பதவியேற்று அப்போதுதான் ஏறக்குறைய ஒருவருடம் ஆகியிருந்தது.. கும்பகோணத்தில் மகாமக நிகழ்ச்சியும் வந்தது..

கும்பகோணம் - மகாமகம்

12 வருடங்களுக்கு ஒருமுறை நடக்கும் நிகழ்ச்சி என்பதால், தமிழகம் முழுவதும் ஏராளமான பக்தர்கள் கும்பகோணத்தில் குவிந்ததுடன், மகாமக குளத்தில் நீராட ஆவலாக காத்துக்கொண்டிருந்தனர்.. லட்சக்கணக்கில் குவிந்த பக்தர்களின் கூட்ட நெரிசலை சரி செய்ய எந்த நடவடிக்கையும் காவல்துறை மேற்கொள்ளவில்லை. அதற்கான திட்டமிடலும் முன்கூட்டியே கையாளப்படவில்லை.

இந்நேரத்தில்தான், திடீரென முதல்வர் ஜெயலலிதா, மகாமகம் குளத்தில் குளிப்பது என்ற தன்னுடைய விருப்பத்தை அதிகாரிகளிடம் சொல்லவும், அதிகாரிகள் திகைத்து போனார்கள்..

மறைந்த முதல்வர் ஜெயலலிதா

காரணம், அங்குள்ள பக்தர்களை ஒழுங்குபடுத்துவதற்கான திட்டங்களை முன்கூட்டியே அதிகாரிகள் திட்டமிட்டிருந்த நிலையில், முதல்வர் திட்டமிடப்படாத அறிவிப்பால் குழம்பிப்போனார்கள்.. எனினும், அடுத்த நிமிடமே முதல்வரின் பாதுகாப்பில் அத்தனை அதிகாரிகளும் கவனத்தை குவித்தனர்.

ஜெயலலிதா குளிப்பதற்காகவே குளியலறைகள் கட்டப்பட்டன.. முதலமைச்சர் குளத்தில் நீராடும் வரை வேறு யாரும் நீராடக்கூடாது என்று அறிவிப்பும் வெளியானது.. இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த லட்சக்கணக்கான பக்தர்கள், இதற்காக 12 வருடங்கள் காத்து கிடந்தோம்? என்று அதிருப்தியடைந்து, காவல்துறையின் அறிவிப்பையும் தூக்கியெறிந்து நீராட வந்துவிட்டனர்...

இரட்டிப்பான கூட்டம்

அந்த மகாமக குளத்தில் 40 ஆயிரம் பேர் வரைதான் குளிக்க முடியும். ஆனால் அதை விட இரண்டு மடங்கு கூட்டம் குழுமிவிட்டதால் போலீசார் சமாளிக்க முடியவில்லை,.

மேலும், ஏற்கனவே குளிக்க வந்த பக்தர்கள் ஜெயலலிதாவைப் பார்க்கும் ஆவலில் கலையாமல் நின்று விட்டனர். இதனால் கூட்டம் அதிகரிக்க ஆரம்பித்தது.

காலை 11 மணிக்கு, சரியாக தீர்த்தவாரி நேரத்தில், தனக்கென கட்டப்பட்டிருந்த குளியலறை பகுதிக்கு வந்தார் ஜெயலலிதா... குளக்கரைக்கு வந்த ஜெயலலிதா படிக்கட்டில் நின்றபடி பக்தர்களை நோக்கி கை அசைத்தார். இதனால் கூட்டத்தினர் ஆரவாரத்துடன் முண்டியடித்தனர்.

குளத்தில் இறங்கிய ஜெயலலிதா

அப்போது தீர்த்தவாரி ஆரம்பம் என்று அறிவித்து வானத்தை நோக்கி 3 முறை வால்டர் தேவாரம் சுட்டார்.. ஏற்கனவே நெரிசலில் சிக்கி தவித்து கொண்டிருந்த பக்தர்கள், துப்பாக்கி சத்தத்தை கேட்டு பதறியடைத்து கொண்டு சிதறி ஓட துவங்கினார்கள்.

இதனால் பக்தர்கள் நீராடிவிட்டு வந்தவர்களால் வெளியேற முடியவில்லை. ஏற்கனவே குளத்தில் இறங்கியவர்களால் மறுபடியும் கரையேற வழி இல்லாமல் குளத்துக்குள்ளே நின்று கொண்டிருந்தார்கள்..

மேலும், பாங்கூர் தர்மசாலா கட்டடத்தின் வெளிப்புறம் இருந்த கிரில் வைத்த கட்டைச்சுவர் மீது பலர் ஏறி ஜெயலலிதாவை பார்க்க முயன்றனர். அதில் இரும்பு கிரில் சுவரோடு சாய்ந்தது அங்கேயே சிலர் நசுங்கி இறந்தனர். இதனால் கூட்டத்தில் பெரும் பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டது.

இதனிடையே தனியாக ஒதுக்கப்பட்ட இடத்தில் ஜெயலலிதாவும், சசிகலாவும் நீராடினார்கள்.. அவர் தலையில் இவர் தண்ணீர் ஊற்ற, இவர் தலையில் அவர் தண்ணீர் ஊற்ற அமோகமாக நடந்தேறியது புனித நீராடல்.. ஆனால், கூட்ட நெரிசலில் மிதிபட்டே 48 பக்தர்கள் உயிரிழந்தனர். இதில் பலரது உயிர் அந்த குளத்திலேயே போனது.

இதில் அதிர்ச்சி என்னவென்றால், இவ்வளவு அசம்பாவிதங்களும் ஜெயலலிதாவின் காதுக்கு போகாதவாறு அதிகாரிகள் பார்த்து கொண்டனர்.. முதல்வரின் பாதுகாப்பிலேயே முழு கவனத்தையும் செலுத்தியிருந்ததுடன், புனித நீராடலுக்கு பிறகு அவர்களை பாதுகாப்புடன் அதிகாரிகள் அங்கிருந்து அழைத்து சென்றனர்.. ஜெயலலிதா சென்னைக்கு சென்ற பிறகுதான் நடந்த விவரத்தை சொல்லியிருக்கிறார்கள்.

கும்பகோணம் கருப்பு பக்கம்

கும்பகோணத்தில் பல காலமாக மகாமகம் நடந்து வருகிறது என்றாலும், இதுவரை இப்படிப்பட்ட விபத்து நடந்ததில்லை.. அந்தவகையில் கும்பகோணம் சம்பவம் மிகப்பெரிய சோக வடுவாக அமைந்து விட்டது,..

இந்த நிகழ்வுக்கு பிறகு, தமிழ்நாட்டில் நடக்கும் மிகப்பெரிய அசம்பாவிதமாக இன்றைய கரூர் நிகழ்வு பார்க்கப்படுகிறது.. கூட்டத்தை கட்டுப்படுத்த போதுமான போதிய தடுப்பு நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று சொல்லப்படுகிறது.. அத்துடன் விஜய் பிரச்சார வேனை சுற்றி தடுப்பு வேலிகளையும் சரியாக வைக்கவில்லை என்கிறார்கள்..

கட்டுக்கடங்காத கூட்டம் என்பதால், காற்று வசதியும் குறைந்து, மூச்சுத் திணறலும் மக்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. இதுபோன்ற மாபெரும் கூட்டங்கள், மாநாடு என்றால், மருத்துவ வசதிகள் தயாராக வைத்திருக்க வேண்டும். ஆனால், கரூர் கூட்டத்தில்அப்படியான வசதிகள் செய்யப்பட்டிருந்ததா? என்று தெரியவில்லை..

கூட்டம் முடிந்து பொதுமக்கள் திரும்பி செல்லும்போது, வெளியேறும் வாயில்கள் போதுமானதாக இல்லையாம். இதனாலேயே ஒருவர் மீது ஒருவர் முட்டி மோதி கீழே மயங்கி விழுந்துள்ளனர்.

கண்ணீரில் மிதக்கும் கரூர்

இன்றைய கூட்டத்தை ஒழுங்குபடுத்துவதில் காவல்துறையின் குளறுபடிகளையும், தவெக மேலிடம் கட்டுப்பாடுகளை அறிவுறுத்தியும்கூட, அவைகளை அலட்சியப்படுத்திய தொண்டர்களையும் ஏற்கவே முடியாது.

அதுமட்டுமல்ல, விஜய் மட்டுமே ஒருநபர் கட்சியாக செயல்பட்டு வருவதும், தவெகவின் 2ம், 3ம் கட்ட தலைவர்கள் இல்லாததும், இதுபோன்ற குறைகளுக்கு காரணமாகிறது. அன்று விஜயகாந்த்துக்கு பண்ருட்டியார் துணையாக இருந்ததுபோல, இன்று விஜய்க்கு சீனியர்கள் யாரும் இல்லாதது அக்கட்சியின் பலவீனமாகவே உள்ளது.. சீனியர்கள் இருந்திருந்தால், முன்கூட்டியே சரியான திட்டமிடலை வழங்கியிருப்பார்கள்.

எப்படிப்பார்த்தாலும், இந்த துயர சம்பவம் தவெக கட்சிக்கு மிகப்பெரிய சவாலாக மாறியுள்ளது. அத்துடன், தேர்தல் வரவுள்ள நிலையில், இந்த மரணங்கள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் வாய்ப்பும் உள்ளது.

அடித்தட்டு மக்களின் வாக்குகளை பெற்று எப்படியாவது ஆட்சியை பிடிக்க நினைப்போர், அந்த மக்களின் பாதுகாப்பு பற்றியும் நலனை பற்றியும் கவலைப்படாமல் எடுக்கும் முடிவுகள்தான், இப்படியான விபரீதங்களை தந்துவிடுகின்றன.. இது அன்றைய ஜெயலலிதாவுக்கும், இன்றைய விஜய்க்கும் பொருந்தும் உண்மையாகும்...!!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+