கொரோனா அலை.. அடையாள பங்கேற்பாக கும்பமேளா இருக்கட்டும்.. சாதுக்களுக்கு மோடி கோரிக்கை
சென்னை: கும்பமேளா திருவிழா கொரோனா வைரஸுக்கு எதிராக இந்த நாடு நடத்தும் போரின் அடையாளப் பங்கேற்பாக இருக்க வேண்டும், என்று, பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்த ஆண்டு கும்பமேளா திருவிழா 30 நாட்கள் நடத்திக்கொள்ள அகாதாக்கள் முடிவு செய்திருந்தனர். ஆனால், நாட்டில் கொரோனா வைரஸ் 2-வது அலை தீவிரமாகப் பரவி வரும் நிலையில், ஹரித்துவார் கும்பமேளாவில் கடந்த வாரத்தில் 43 லட்சம் பக்தர்கள் வந்து புனித நீராடியுள்ளனர்.
முகக்கவசம் அணியாமலும், சமூக விலகலைக் கடைப்பிடிக்காமலும் புனித நீராடியதால் தொற்று பரவியதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. கும்பமேளாவுக்கு வந்தவர்களிடையே நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் முதல் கட்டமாக 2,171 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
கொரோனாவால் மத்தியப் பிரதேச மகா நிர்வானி அஹாராவின் தலைவர் சுவாமி கபில் தேவ் கடந்த 13ம் தேதி உயிரிழந்தார்.
இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி ஒரு ட்வீட்டில், ஜுனா அகாராவின் சுவாமி அவ்தேஷானந்த் கிரியிடம் தொலைபேசியில் பேசியதாகவும், இரண்டு ஷாஹி ஸ்னான்" (புனித குளியல்) நடந்திருப்பதாகவும், இந்த ஆண்டு கும்பமேளா நாடு நடத்தும் கொரோனாவுக்கு எதிரான போரின் அடையாளமாக இருக்க வேண்டும் என்றும் நான் வேண்டுகோள் விடுத்தேன்." என்று பிரதமர் மோடி இந்தியில் ட்வீட் செய்துள்ளார்.
அதாவது அடையாளம் என்ற வகையில் மட்டும் கும்பமேளாவை கொண்டாடுங்கள் என்பது மோடி கோரிக்கையாகும்.
பிரதமர் மோடியின் ட்வீட்டுக்கு பதிலளித்த சுவாமி அவ்தேஷானந்த்: "பிரதமர் மோடியின் வேண்டுகோளை நாங்கள் மதிக்கிறோம். உயிர்களைக் காப்பாற்றுவது புனிதமானது. அனைத்து கொரோனா நெறிமுறைகளையும் பின்பற்ற வேண்டும் என்று சாதுக்களை நான் கேட்டுக்கொள்கிறேன்." என்று தெரிவித்துள்ளார்.