தமிழ்நாட்டில் அமைச்சர் குடும்பத்தினருக்கே பாதுகாப்பில்லாத சூழல்! எல்.முருகன் குற்றச்சாட்டு!
சென்னை: தமிழ்நாட்டில் அமைச்சரின் பேரன், பேத்தி நிம்மதியாக ஒரு சினிமா கூட பார்க்க முடியாத சூழல் நிலவுவதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
அண்மையில் ஜிகர்தண்டா படம் பார்க்கச் சென்ற அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் மகன் மற்று பேரன் மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்திய நிலையில் எல்.முருகன் இந்தக் குற்றச்சாட்டை இப்போது முன் வைத்திருக்கிறார். செய்தித் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அதேபோல் சென்னையில் திமுக பிரமுகரின் மகன் கொலை செய்யப்பட்ட நிகழ்வையும் சுட்டிக்காட்டிய எல்.முருகன், திமுக ஆட்சியில் திமுகவினருக்கே பாதுகாப்பற்ற சூழல் தான் உள்ளது எனக் கூறியுள்ளார். சென்னையில் 5 சவரண் தங்கச் சங்கிலியை அணிந்துக்கொண்டு ஒரு பெண் தனியாக செல்ல முடியுமா என்றும் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு மோசமாக உள்ளது என்றும் எல்.முருகன் அடுக்கடுக்காக தமிழக அரசை குற்றஞ்சாட்டினார்.
தாம் எதையுமே மிகைப்படுத்திச் சொல்லவில்லை என்றும் குற்றச்செயல்களை தடுப்பதில் உளவுத்துறை தோல்வியடைந்து விட்டதாக தெரிவித்துள்ளார். முதலமைச்சர் ஸ்டாலின் செயல்படுகிறாரா என்பதே கேள்விக்குறியாக இருப்பதாகவும் தமிழ்நாட்டில் எஸ்.சி./எஸ்.டி. மாணவர்கள் விடுதி மோசமான நிலையில் இருப்பதாகவும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். முதலமைச்சரே போய் பார்க்காவிட்டாலும் பரவாயில்லை, துறையின் அமைச்சரையாவது போய் எஸ்.சி./எஸ்.டி. மாணவர்கள் விடுதியை பார்க்கச் சொல்ல வேண்டும் என எல்.முருகன் கூறினார்
தன்னுடன் இரண்டு கிராமங்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வர வேண்டும் என்றும் அங்கு ஒரே சுடுகாட்டில் அனைத்து சாதியை சேர்ந்தவர்களையும் அடக்கம் செய்ய கிராம மக்கள் ஒப்புக்கொண்டால் தமிழ்நாட்டில் சமூக நீதி ஆட்சி நடப்பதாக தாம் ஒப்புக் கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.
கூட்டணி விவகாரத்தை பொறுத்தவரை தன்னால் தனிப்பட்ட முறையில் எந்தக் கருத்தும் சொல்ல முடியாது என்றும் தேசியத் தலைமை தங்களுக்கு என்ன அறிவுறுத்துகிறதோ அதன் படி செயல்படுவது தான் தங்களின் கடமை எனவும் அதிமுக -பாஜக கூட்டணி குறித்த கேள்விக்கு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications