ஈஷா யோகம் மையம் மீதான நில அபகரிப்பு புகார்... யார் தவறு செய்தாலும் நடவடிக்கை - சேகர்பாபு
யார் தவறு செய்தாலும் அது எங்களது கவனத்திற்கு வந்தால் திமுக ஆட்சியில் நிச்சயம் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.
சென்னை: யார் எங்கு தவறு செய்தாலும் அது எங்களது கவனத்திற்கு வந்தால் திமுக ஆட்சியில் நிச்சயம் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார். ஈஷா யோகம் மையம் மீதான நில அபகரிப்பு புகார் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு இவ்வாறு பதிலளித்துள்ளார்.
சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் 3 வேளையும் இலவச உணவு வழங்கும் திட்டத்தை அமைச்சர் சேகர் பாபு இன்று தொடக்கி வைத்தார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரோனா நோய் தொற்று இரண்டாவது அலையில் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பு போக்க முதல்வர் முழு ஊரடங்கு பிறப்பித்துள்ளார்.

ராஜீவ் காந்தி மருத்துவமனை வாயிலில் இலவச உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதே போல் மற்ற அரசு மருத்துவமனை அருகிலும் உணவு வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்றார்.
வைரஸ் பரவலை தடுக்க அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தாலும் கட்சி சார்பில் நோய் தடுப்பு பணிகளில் ஈடுபட முதல்வர் உத்தரவிட்டுள்ளார். முதல்வரின் உத்தரவின் படி திமுகவினர் செயல்படுவார்கள் என்றும் சேகர்பாபு கூறினார்.
திமுக ஆட்சி வெளிப்படையான ஆட்சியாக இருக்கும் என தெரிவித்த அவர் இந்துசமய அறநிலையத்துறையில் நடைபெறும் பணிகள் எந்த வித ஒளிவு மறைவும் இன்றி வெளிப்படையாக நடைபெறும் என்றார்.
அப்போது அமைச்சரிடம், ஈஷா யோகம் மையம் மீதான நில அபகரிப்பு புகார் குறித்து என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அமைச்சர் சேகர் பாபு, எங்கு, யார் தவறு செய்தாலும் அது எங்களது கவனத்திற்கு வந்தால் திமுக ஆட்சியில் நிச்சயம் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
ஶ்ரீரங்கம் ஜீயர் நியமனத்தை இந்து அறநிலைய துறையே ஏற்று நடத்தும் என தகவல் வெளியான நிலையில் இன்று மாலை ஶ்ரீரங்கம் ஜீயர் தேர்வு தொடர்பாக இந்து அறநிலைய துறை சார்பில் கூட்டம் நடைபெற உள்ளது. அந்த கூட்டத்திற்கு பிறகு ஶ்ரீரங்கம் ஜீயர் நியமனம் தொடர்பாக ஆலோசிக்கப்படும் என்றும் கூறினார்.












Click it and Unblock the Notifications