சஸ்பென்ஸ் வாக்கெடுப்பு! கடைசி நேரத்தில் ஆப்சென்ட் ஆன மதிமுக.. வைகோ போட்ட திடீர் பிளான் என்ன?
சென்னை: தமிழக சட்டசபையில் நடைபெற்ற பரபரப்பான நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் விஜய் தலைமையிலான அரசு தனது பெரும்பான்மையை அதிரடியாக நிரூபித்துள்ளது.. இந்த மிக முக்கியமான அரசியல் நிகழ்வின் போது, மதிமுகவைச் சேர்ந்த 2 சட்டமன்ற உறுப்பினர்கள் சபைக்கு வராமல் கூட்டத்தைப் புறக்கணித்தது பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.. இது தொடர்பாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ மிக முக்கியமான விளக்கத்தை அளித்துள்ளார்.. அது என்ன?
தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நேற்று சட்டசபையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் விஜய் தலைமையிலான அரசு தனது பெரும்பான்மையை நிரூபித்து வெற்றியை தக்க வைத்துள்ளது.

அரசியல் களம் மிகுந்த பரபரப்புடன் காணப்பட்ட நிலையில், எதிர்க்கட்சிகளின் வெளிநடப்பு மற்றும் எதிர்பாராத ஆதரவு எனப் பல திருப்பங்களுடன் இந்த வாக்கெடுப்பு அரங்கேறியது. இன்றைய நிகழ்வுகள் தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.
சட்டசபை கூடியவுடன் முதல்வர் விஜய் தனது அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தைக் கொண்டு வந்தார். அப்போது அவையில் பெரும் அமளி நிலவியது. பிரதான எதிர்க்கட்சியான திமுக உறுப்பினர்கள் இந்த தீர்மானத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டனர்.
வெளிநடப்பு + ஆதரவு
ஒருகட்டத்தில் திமுக எம்.எல்.ஏக்கள் அனைவரும் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். அவர்களைத் தொடர்ந்து, தேமுதிகவின் ஒரே ஒரு சட்டமன்ற உறுப்பினரான பிரேமலதா விஜயகாந்தும் வாக்கெடுப்பைப் புறக்கணித்து வெளியேறினார். இதனால் வாக்கெடுப்பு முடிவுகள் எப்படி அமையப்போகிறது என்ற பதற்றம் நிலவியது.
இந்த இக்கட்டான சூழலில், யாரும் எதிர்பாராத விதமாக அதிமுகவின் எஸ்பி வேலுமணி தலைமையிலான அணி முதல்வர் விஜய் அரசுக்கு ஆதரவு தெரிவித்தது. அவர்களின் ஆதரவு கிடைத்ததால் விஜய் அரசுக்குத் தேவையான பெரும்பான்மையை விடக் கூடுதல் பலம் கிடைத்தது.
வைகோ விளக்கம்
இறுதி நிலவரப்படி, 144 எம்.எல்.ஏக்கள் அரசுக்கு ஆதரவாக வாக்களித்ததை அடுத்து, முதல்வர் விஜய் தனது பெரும்பான்மையை அதிகாரப்பூர்வமாக நிரூபித்ததாக அறிவிக்கப்பட்டது. திமுகவின் கடும் எதிர்ப்பையும் மீறி அதிமுகவின் ஒரு பிரிவினரின் ஆதரவுடன் விஜய் அரசு தப்பித்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
அதேசமயம், இன்றைய மிக முக்கியமான இந்த வாக்கெடுப்பில் மதிமுகவின் இரண்டு எம்.எல்.ஏக்களான சீர்காழி செந்தில் செல்வன் மற்றும் கடையநல்லூர் திமு ராஜேந்திரன் ஆகியோர் கலந்துகொள்ளாதது பேசுபொருளானது. இது குறித்து சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விளக்கமளித்துள்ளார்..
6 மாதம் மதிமுக அமைதி காக்கும்
கட்சியின் மிக முக்கியமான நிர்வாகக் குழுக் கூட்டம் சென்னையில் நடைபெற்றதாகவும், அதில் பங்கேற்ற காரணத்தாலேயே தனது கட்சியின் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களும் இன்றைய சட்டசபை கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, "முதல்வர் விஜய் தனது பெரும்பான்மையை முறையாக நிரூபித்து விட்டது.. திமுகவை போலவே எங்களது கட்சியும் அடுத்த ஆறு மாதங்களுக்குத் தமிழக அரசின் செயல்பாடுகளைக் கவனித்து அமைதி காக்கும்" என்றார்..
அதிமுகவின் ஆதரவு மற்றும் மதிமுகவின் விலகல் என இன்றைய வாக்கெடுப்புப் பல புதிய அரசியல் கணக்குகளைத் தமிழகத்தில் உருவாக்கியுள்ளது. இதன் தொடர்ச்சியாகத் தமிழகத்தின் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் எப்படி இருக்கும் என்பதை தமிழக மக்கள் உன்னிப்பாகக் கவனித்து வருகிறார்கள்.
மதிமுக முக்கிய தீர்மானம்
முன்னதாக வைகோ தலைமையில் சென்னையில் நடைபெற்ற மதிமுகவின் நிர்வாகக் குழுக் கூட்டத்தில் மிக முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன..
தமிழகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலாக விளங்கும் சீமைக் கருவேல மரங்களை முழுமையாக அகற்றும் பணியை, வரும் ஜூன் 1ம் தேதி வைகோவின் சொந்த ஊரான கலிங்கப்பட்டியில் இருந்து தொடங்குவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், தமிழக விவசாயிகளின் பல்வேறு வாழ்வாதாரக் கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் ஜூன் 5ம் தேதி வாசுதேவநல்லூரில் வைகோ தலைமையில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தவும் இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.. அரசின் வெற்றி ஒருபுறம் இருந்தாலும், மக்கள் நலன் சார்ந்த இத்தகைய போராட்டங்களை முன்னெடுக்க மதிமுக திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது..!!












Click it and Unblock the Notifications