சிக்கிய ரௌடியின் கூட்டாளி.. சென்னையில் கூலிப்படை கும்பல் தலைவன் அரும்பாக்கம் ராதாவின் கூட்டாளி கைது!
சென்னை: கூலிப்படை தலைவனும், ஆயுள் தண்டனை கைதியுமான அரும்பாக்கம் ராதாவின் கூட்டாளியான வழக்கறிஞர் கிஷோர் இன்று கைது செய்யப்பட்டார். ராதாவின் சட்டவிரோத செயல்களுக்கு கிஷோர் உடந்தையாக இருந்தது விசாரணையில் தெரியவந்த நிலையில் இன்று கிஷோர் சென்னை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னையில் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு காலகட்டத்திலும் சில ரௌடிகள் கோலோச்சி வருகின்றனர். மிரட்டல், கட்டப் பஞ்சாயத்து, பிரச்சனைக்கு உரிய சொத்து விவகாரங்களில் தலையிடுவது, அரசியல்வாதிகளுக்கு உதவுவது என்று கேங்காக பிரிந்து தங்கள் செல்வாக்கை வளர்த்து அதன் மூலம் பணம் சம்பாதிப்பது இந்த ரௌடிகளின் வழக்கம். பல சமயங்களில் இந்த ரௌடிகளுக்குள்ளேயே மோதல் ஏற்பட்டு, ஒருவரை ஒருவர் மாற்றி மாற்றிக் கொல்வதும் அரங்கேறும்.

சென்னையில் முக்கிய புள்ளியாக வலம் வந்த ரௌடி அரும்பாக்கம் ராதா. ரௌடி பினுவுக்கு ஆரம்பகால கூட்டாளியாக இருந்த அரும்பாக்கம் ராதா பின்னர், சிடி மணியுடன் கைகோர்த்து செயல்பட்டார். தனக்குக் கீழே கூலிப்படையை வைத்திருந்த ராதா, தனக்கு கிடைக்கும் ஆர்டர்களுக்கு தந்து கூலிப்படையை அனுப்பி வந்தார். பல கொலை வழக்குகளிலும் சம்பந்தப்பட்டிருந்தார் ராதா. 9 கொலை வழக்குகள் உட்பட 40க்கும் மேற்பட்ட வழக்குகள் அரும்பாக்கம் ராதாகிருஷ்ணன் மீது உள்ளதாக கூறப்படுகிறது.
அரும்பாக்கம் ராதா, வடசென்னை ஏரியாவின் முக்கிய தாதாவான நாகேந்திரனின் ஆள் என்றும் கூறப்படுகிறது. இந்த ரவுடி நாகேந்திரன் தான், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் A1-ஆக இருப்பவர். ராதாவுக்கு, அரும்பாக்கம், சூளைமேடு, கோயம்பேடு, அமைந்தகரை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வியாபாரிகளிடம் இருந்து மாதம் பல லட்ச ரூபாய் மாமூல் செல்வதாகவும் கூறப்படுகிறது.
தற்போது ரௌடி அரும்பாக்கம் ராதா வேலூர் சிறையில் ஆயுள் தண்டனைக் கைதியாக இருக்கிறார். இந்நிலையில், ராதாவின் கூட்டாளிகள் 12 பேர் சில மாதங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டனர். வழக்கறிஞர் உள்பட 3 பேரை கொலை செய்ய திட்டம் தீட்டிய 12 பேரையும் துப்பாக்கி முனையில் கைது செய்தது சென்னை மேற்கு அதிதீவிர குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸ்.
அரும்பாக்கம் ராதாவின் கூலிப்படை கும்பலைச் சேர்ந்த மெர்லின் விஜய்யிடம் போலீசார் நடத்திய விசாரணையில் ராதாவின் சட்டவிரோத செயல்களுக்கு வழக்கறிஞரான கிஷோர் உடந்தையாக இருந்தது அம்பலமானது. இதைத்தொடர்ந்து, வழக்கறிஞர் கிஷோரை தேடி வந்த போலீசார் இன்று அவரைக் கைது செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications