நீட் தேர்வுக்கு எதிராக மீண்டும் சட்டப் போராட்டம்தான் வழி.. அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு!
நீட் விலக்கு பெறுவதற்கான சட்ட ரீதியான நடவடிக்கைகளை அனைத்து கட்சிகளும் இணைந்து மேற்கொள்ள முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறியுள்ளார்.
சென்னை: நீட் விலக்கு மசோதாவை மத்திய அரசுக்கு ஆளுநர் அனுப்பாமல் இருப்பது சட்டசபை இறையாண்மைக்கு எதிரானது என்று அமைச்சர் மா சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். நீட் விலக்கு பெறுவதற்கான சட்ட ரீதியான நடவடிக்கைகளை அனைத்து கட்சிகளும் இணைந்து மேற்கொள்ள முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
தமிழக முதல்வர் தலைமையிலான அனைத்துக்கட்சி கூட்டம் இன்று நடைபெற்றது. சட்டசபையில் அங்கம் வகிக்கும் 13 கட்சிகளின் பிரதிநிதிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்று கருத்துக்களை தெரிவித்தனர்.
இக்கூட்டத்தில் திமுக சார்பில் அமைச்சர்கள் பொன்முடி, துரைமுருகன், மா.சுப்பிரமணியன், அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், பாஜக சார்பில் வானதி ஸ்ரீனிவாசன், காங்கிரஸ் சார்பில் செல்வப்பெருந்தகை, பாமக சார்பில் ஜி.கே.மணி, தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் வேல்முருகன் ஆகியோர் பங்கேற்ற நிலையில் பாஜக சார்பில் வந்திருந்த வானதி ஸ்ரீனிவாசன் வெளிநடப்பு செய்தனர்.

கூட்டாட்சித் தத்துவம்
நீட் தேர்வுக்கு எதிரான சட்டப்போராட்டம் குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டாட்சி தத்துவத்தை சீரழிக்கும் வகையில் உள்ள நீட் தேர்வு வசதி வாய்ப்புள்ளவர்களுக்கு சாதகமானது. நீட் தேர்வு விலக்கு மசோதாவை ஆளுநர் இன்னும் குடியரசு தலைவருக்கு அனுப்பாதது சட்டமன்றத்தின் மாண்பை சிதைக்கும் வகையில் உள்ளது. எனவே நீட் தேர்வுக்கு எதிராக சட்டப் போராட்டத்தை முன்னெடுப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

உரிமைப் பறிப்பு
அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், நீட் விலக்கு மசோதாவை தமிழக ஆளுநர் இன்னும் குடியரசுத்தலைவருக்கு அனுப்பாமல் இருப்பது பேரவை மாண்பை சிதைப்பதாக உள்ளது. மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான உரிமையை மாநில அரசிடம் இருந்து மத்திய அரசு பறித்துவிட்டது. நீட் நுழைவுத்தேர்வு பள்ளிக்கல்வியை அர்த்தமற்றதாக ஆக்குகிறது.

சட்ட ரீதியான போராட்டம்
கூட்டாட்சி தத்துவத்தை சீரழிக்கும் வகையில் உள்ள நீட் தேர்வு, வசதி வாய்ப்பு உள்ளவர்களுக்கு சாதகமானது. நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற சட்ட ரீதியாக போராட்டம் நடத்தப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நீட் தேர்வுக்கு எதிராக சட்ட போராட்டத்தை முன்னெடுப்பது என அனைத்துக்கட்சி கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

உள்துறை அமைச்சரை சந்திப்போம்
மூத்த சட்ட வல்லுநர்களுடன் கலந்தாலோசித்து அடுத்தகாத சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். நீட் தேர்வுக்கு எதிரான சட்டப்போராட்டம் தீர்மானத்துக்கு, அனைத்து கட்சி கூட்டத்தில் பாஜகவை தவிர மற்ற 12 கட்சிகளும் நீட் விலக்கிற்கு ஆதரவு அளித்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். நீட் விலக்கு குறித்து தமிழக ஆளுநர், மத்திய உள்துறை அமைச்சரை மீண்டும் சந்திக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
Recommended Video

மாணவர் சேர்க்கை எப்படி
நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் பெற ஆளுநரை அனைத்துக்கட்சிகள் சார்பில் சந்திக்க ஏற்பாடு செய்யப்படும் என்றும் குறிப்பிட்டார். நீட் தேர்வு, மாணவர்களின் மருத்துவ கனவை சிதைப்பதாக உள்ளது. மாநில அரசு நிதியில் இருந்து நடத்தப்படும் மருத்துவ கல்லூரிகளின் மாணவர் சேர்க்கை உரிமையை மத்திய அரசு பறித்து விட்டது. நடப்பாண்டு மருத்துவ மாணவர் சேர்க்கை கலந்தாய்வு திட்டமிட்டபடி நடைபெறும்












Click it and Unblock the Notifications