விவசாயிகளே ரெடியா.. ஏக்கருக்கு ரூ.400 மானியம்.. பயறு விதைகள் வழங்குகிறது வேளாண்மைத்துறை
பயறு சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில் வேளாண்மைத்துறை வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பு
சென்னை: ஏக்கர் ஒன்றுக்கு ரூ.400 மானியத்தில் பயறு விதைகள் வழங்கப்படுவதாகவும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி விவசாயிகள் பலன் அடையுமாறு வேளாண்மைத் துறை அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பயறு சாகுபடி மேற்கொள்ளும் விவசாயிகள் உழவன் செயலியில் தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ளலாம் என்றும் கூடுதல் விபரங்களுக்கு உங்கள் பகுதி வேளாண் விரிவாக்க அலுவலர்களை அணுகலாம் எனவும் அவர் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக விடுக்கப்பட்டுள்ள செய்திக்குறிப்பின் விவரம் வருமாறு;

விவசாயிகளின் வருமானம்
விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க தமிழ்நாடு அரசு கடந்த இரண்டு ஆண்டுகளில் வேளாண்மைக்கென தனி நிதிநிலை அறிக்கையினை தாக்கல் செய்து, பல்வேறு நலத்திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறது. இதன் தொடர்ச்சியாக, குறைந்த நாட்களில், குறைந்த நீரில், அதிக வருவாய் ஈட்டக்கூடிய பயறு வகைப்பயிர்களின் சாகுபடியினை உயர்த்த, தரமான பயறு விதை விநியோகம், பயறு விதை உற்பத்தி மானியம், தொழில்நுட்பச் செயல்விளக்கம் என பயறு சாகுபடியை ஊக்குவிப்பதற்காக, ரூ.101 கோடி மதிப்பில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

வேளாண் மானியக் கோரிக்கை
வேளாண்மை-உழவர் நலத் துறை அமைச்சர், 2022-23 ஆம் ஆண்டின் வேளாண்மை துறை மானியக் கோரிக்கையில் "சம்பா நெல் அறுவடைக்குப்பின், உளுந்து, பச்சைப்பயறு 10 லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்திட ஏக்கருக்கு ரூ.400 வீதம் மானியம் வழங்குவதற்காக, 2022-23 ஆம் ஆண்டில் ரூ.40 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். இதன்மூலம் தமிழகத்தின் பயறு உற்பத்தி 2 லட்சம் மெட்ரிக் டன் அளவுக்கு உயரும் என்பதுடன், 12 லட்சம் விவசாயிகள் பயன் பெறுவர்" என்று அறிவித்தார்.

திட்டத்தின் நோக்கம்
நெல் அறுவடைக்குப்பின் மண்ணில் எஞ்சியுள்ள ஈரத்தை திறம்பட பயன்படுத்தி உளுந்து, பாசிப்பயறு சாகுபடி செய்தால், விவசாயிகளுக்கு கூடுதல் வருமானம் கிடைக்கும் என்பதுடன், மண் வளமும் அதிகரிக்கும். நஞ்சைத்தரிசில் பயறு சாகுபடி நெடுங்காலமாக விவசாயிகள் மேற்கொண்டு வந்தாலும், பல்வேறு காரணங்களினால் இப்பரப்பு குறைந்து கொண்டே வருகிறது. எனவே, நஞ்சைத்தரிசில் உளுந்து சாகுபடி செய்வதன் முக்கியத்துவம் குறித்து விவசாயிகளிடம் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தி, 50 சதவிகித மானியத்தில் பயறு விதைகளை வழங்கிடுவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.

விழிப்புணர்வு முகாம்
சம்பா நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ள கிராமங்களில் கடந்த டிசம்பர் மாதம் முதல், பல்வேறு பயிற்சிகளும், விழிப்புணர்வு முகாம்களும் நடத்தப்பட்டன. மேலும், துண்டுபிரசுரங்கள், விளம்பர பலகைகள், சுவர் விளம்பரங்கள், கையேடுகள், உள்ளூர் தொலைக்காட்சி மற்றும் குறும்படங்கள் வாயிலாகவும் நஞ்சைத்தரிசில் பயறு சாகுபடியின் முக்கியத்துவம் எடுத்துரைக்கப்பட்டு வருகிறது. உற்பத்தி செய்யப்படும் பயறு வகைகளை விலை ஆதரவுத் திட்டத்தின் கீழ், ஒன்றிய அரசு அறிவித்துள்ள குறைந்தபட்ச ஆதரவு விலையான உளுந்து கிலோவுக்கு ரூ.66/-, பாசிப்பயறு கிலோவுக்கு ரூ.77.55/- விலையில் கொள்முதல் செய்வதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது.

திட்டப்பலனை எவ்வாறு பெறுவது?
நெல் தரிசில் பயறு சாகுபடி மேற்கொள்ள விவசாயிகள் உழவன் செயலியில் தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ளலாம். சிறு, குறு விவசாயிகள், பெண் விவசாயிகள், ஆதிதிராவிடர், பழங்குடியின விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். கூடுதல் விபரங்களுக்கு உங்கள் பகுதி வேளாண் விரிவாக்க அலுவலர்களை அணுகலாம். எனவே, தொடர்ந்து நெற்பயிரை சாகுபடி செய்து வரும் விவசாயிகள், நெல் அறுவடைக்குப்பின், குறைந்த நாளில் குறைந்த செலவில் அதிக இலாபம் ஈட்டுவதற்காக அரசு அறிமுகப்படுத்தியுள்ள இத்திட்டத்தில் நெல் விவசாயிகள் அனைவரும் இணைந்து பயனடையுமாறு மாண்புமிகு வேளாண்மை-உழவர் நலத்துறை அமைச்சர்எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications