‛தீயசக்தி’களை வேரோடு ஒழிப்போம்.. சூளுரைத்த எடப்பாடி பழனிச்சாமி.. பரபரத்த எம்ஜிஆர் பிறந்தநாள் விழா!
சென்னை: மறைந்த தமிழ்நாடு முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 106வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிச்சாமி அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிலையில் தான் ‛‛ தமிழகத்தில் தீயசக்திகளை வேரோடு ஒழித்து,கழக ஆட்சி மீண்டும் அமைப்பதற்கு இந்நன்னாளில் உறுதியேற்போம்'' என எடப்பாடி பழனிச்சாமி சூளுரைத்துள்ளார்.
திரைப்படங்களில் ஹீரோவாக நடித்து மக்களின் மனதை வென்றவர் எம்ஜிஆர். துவக்கத்தில் திமுகவில் செயல்பட்டு வந்தார். அதன்பிறகு திமுகவின் பொருளாளராக உயர்ந்தார். அண்ணா மறைவுக்கு பிறகு கருணாநிதி, நெடுஞ்செழியன் உள்ளிட்ட முக்கிய திமுக தலைவர்களுடன் முரண்பாடுகள் அதிகரித்தது.
இதையடுத்து கடந்த 1972இல் கட்சியில் இருந்து எம்ஜிஆர் இடை நீக்கம் செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து 1972 அக்டோபர் 18ல் அதிமுக கட்சியை எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி 1977ல் ஆட்சியை பிடித்தார். திரையுலகத்தில் கொடிகட்டி பறந்த எம்ஜிஆர் அரசியல் களத்திலும் ஜொலித்து முதல்வர் அரியணையில் அமர்ந்தார்.
இன்று எம்ஜிஆரின் 106வது பிறந்தநாள்.. ஈபிஎஸ், ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா தனித்தனியே மரியாதை!
அதிமுக கொண்டாட்டம்
இந்நிலையில் தான் மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 106வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழ்நாடு முழுவதும் அதிமுக கட்சியினர், எம்ஜிஆர் ரசிகர்கள் அவரது பிறந்தநாளை கொண்டாடி வருகின்றனர். எம்ஜிஆர் படங்கள், பேனர்கள் மற்றும் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. அதிமுக சார்பில் ஆண்டுதோறும் எம்ஜிஆர் பிறந்தநாள் விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும்.
சென்னை தலைமை அலுவலகத்தில்..
அதன்படி கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று காலை சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் எம்ஜிஆர் பிறந்தநாள் கொண்டாட முடிவு செய்யப்பட்டது. இதில் எம்பி, எம்எல்ஏக்கள் பங்கேற்க உள்ளனர். இதையொட்டி அதிமுக தலைமை அலுவலகம் வாழை மரங்கள், தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.
எடப்பாடி பழனிச்சாமி மரியாதை
இதையடுத்து அதிமுக தலைமை அலுவலகத்துக்கு எடப்பாடி பழனிச்சாமி வந்தார். அவருக்கு கட்சியினர் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். இதையடுத்து தலைமை அலுவலகத்தில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு அவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதையடுத்து கட்சி கொடியையும் எடப்பாடி பழனிச்சாமி ஏற்றி வைத்தார். எடப்பாடி பழனிச்சாமியுடன் அவைத்தலைவர் மதுசூதனன் உள்பட முக்கிய நிர்வாகிகள் உடனிருந்தனர்.
தீயசக்திகளை வேரோடு ஒழித்து
முன்னதாக எடப்பாடி பழனிச்சாமி தனது ட்விட்டர் பக்கத்தில் எம்ஜிஆரின் நினைவுகளை பகிர்ந்து கொண்டார். இதுபற்றி அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‛‛ஏழை எளியோர் பசிதீர்த்த வள்ளல், இடஒதுக்கீட்டை 49 சதவீதத்தில் இருந்து 68 சதவீதத்துக்கு ஏற்றிய சமூகநீதி காவலர், ஒப்பாரும் மிக்காரும் இல்லாத நம் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் பிறந்தநாளில் அவர் புகழை போற்றி, தமிழகத்தில் தீயசக்திகளை வேரோடு ஒழித்து,கழக ஆட்சி மீண்டும் அமைப்பதற்கு இந்நன்னாளில் உறுதியேற்போம். கலங்கரை விளக்கமாக இருந்து தமிழகத்தை கரை சேர்த்த காவியத் தலைவர், சத்துணவு திட்டம் தந்த சரித்திர நாயகர், வாழ்வு தந்த வள்ளல், புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்களின் பிறந்தநாளில் அவர்தம் பெரும் புகழையும் பெருமையையும் போற்றி வணங்குகிறேன்'' என தெரிவித்துள்ளார்.