"ஆடிக்காற்றில் பறந்த அம்மி".. ஒரு மாவட்ட கவுன்சிலரை கூட வெல்லாத பாமக.. கலைந்து போன பெரிய திட்டம்!
சென்னை: தமிழ்நாட்டில் நடந்து முடிந்த 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் 1 மாவட்ட கவுன்சிலரை கூட வெல்லாமல் பாமக மாபெரும் தோல்வியை சந்தித்துள்ளது. பல்வேறு திட்டங்களை மனதில் வைத்து உள்ளாட்சி தேர்தலில் தனித்து களமிறங்கிய பாமகவிற்கு பெரிய பின்னடைவை இந்த தேர்தல் முடிவுகள் கொடுத்துள்ளது.
காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் நடந்த இடைத்தேர்தலுக்கான முடிவுகள் முழுமையாக வெளியாகி உள்ளது. மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் , ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் , பஞ்சாயத்து தலைவர், பஞ்சாயத்து கவுன்சிலர் ஆகிய பதவிகளை தேர்வு செய்ய இந்த தேர்தல் நடந்தது.
அந்த 6 பேருக்கு நன்றி.. 'எல்லோரையும் புரிஞ்சுக்கிட்டேன்'.. வேட்பாளரின் வித்தியாசமான நோட்டீஸ்!
140 மாவட்ட கவுன்சிலர்கள் பதவிக்கு நடந்த தேர்தலில் 138 இடங்களில் திமுக வென்றுள்ளது. 2 இடங்களில் மட்டுமே அதிமுக வெற்றி பெற்றுள்ளது. வேறு எந்த கட்சியும் மாவட்ட கவுன்சிலர்கள் பதவிகளை வெல்லவில்லை. ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்கு தேர்தல் நடந்த 1,381 இடங்களில் 1,118 இடங்களை திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் பெற்றுள்ளன. திமுக மட்டும் தனியாக 974 இடங்களை வென்றுள்ளது. அதிமுக கூட்டணி 220 ஒன்றிய இடங்களை வென்றுள்ளது. அதிமுக தனியாக 212 இடங்களை வென்றுள்ளது. பா.ம.க. 47 இடங்களை ஒன்றிய கவுன்சிலில் பெற்றுள்ளது.
பாமக தோல்வி
இந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் பாமக மாபெரும் தோல்வியை தழுவி இருக்கிறது. இதில் மொத்தம் 140 இடங்களுக்கான மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு போட்டிகள் நடந்தது. இதில் அனைத்திலும் பாமக தனித்து போட்டியிட்டது. இதில் ஒன்றில் கூட பாமக வெற்றிபெறவில்லை. அதன்படி மாவட்ட கவுன்சிலர் பதவிக்கான தேர்தலில் பெற்ற இடங்கள் சதவிகித வாரியாக, திமுக - 90.85% இடங்கள், அதிமுக - 1.31%இடங்கள், காங்கிரஸ் - 5.23%இடங்கள், பாமக உள்ளிட்ட மற்ற அனைத்து கட்சிகளும் ஒரு இடங்களை கூட பெறவில்லை.
ஒன்றிய கவுன்சிலர்
1,381 இடங்களில் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கான தேர்தல்கள் நடந்தது. ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கான தேர்தலில் பெற்ற இடங்கள் சதவிகித வாரியாக திமுக - 68.26% இடங்கள், அதிமுக - 14.84% இடங்கள், காங்கிரஸ் - 2.32% இடங்கள், பாஜக - 0.56% இடங்கள், சிபிஐ - 0.21% இடங்கள், சிபிஐஎம் - 0.28% இடங்கள், தேமுதிக - 0.07% இடங்கள், சிபிஐஎம் - 0.28% இடங்கள் பெற்றன.
இதில் பாமக 1200க்கும் அதிகமான ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்கு போட்டியிட்டது அதில், பாமக வென்ற இடங்கள் வெறும் 47. பாமக மொத்தம் 3.4 சதவிகித ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கான இடங்களை பெற்றது.
மூன்றாவது பெரிய கட்சி
மொத்தமாக தேர்தல் முடிவுகள் படி பார்த்தால் பாமக ஒரு மாவட்ட கவுன்சிலர் இடங்களை கூட பெறவில்லை. ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கான தேர்தலில் மூன்றாவது பெரிய கட்சி என்றாலும் பாமக வெறும் 47 இடங்களை பெற்றுள்ளது. அதிலும் ராணிப்பேட்டையில்தான் பாமக 17 ஒன்றிய கவுன்சிலர் இடங்களை பெற்றுள்ளது. மற்ற 8 மாவட்டங்களில் சேர்த்து மொத்தமாக வெறும் 30 ஒன்றிய கவுன்சிலர் இடங்களை மட்டுமே பாமக வென்றுள்ளது.
எதிர்பார்ப்பு
ஊரக உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிட்டால் மாபெரும் வெற்றியை பெற முடியும் என்று நம்பி பாமக தனித்து களமிறங்கியது. ஏனென்றால் தேர்தல் நடந்த 9 மாவட்டங்களில் தென்காசி, நெல்லை தவிர்த்து மற்ற 7 மாவட்டங்களும் வடமாவட்டங்கள். அதிலும் கள்ளக்குறிச்சி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்கள் பாமக பாரம்பரியமாக வலுவாக இருப்பதாக கருதப்படும் மாவட்டங்கள். ஆனால் இந்த 7 மாவட்டங்களில் ஒரு மாவட்ட கவுன்சிலர் பதவியை கூட பாமகவால் பெற முடியவில்லை.
வாக்கு வாங்கி
வடமாவட்டங்களில் வாக்குகள் விழும், வன்னியர்களின் வாக்குகள் விழும், 10.5% உள் ஒதுக்கீடு வாங்கிக்கொடுத்ததால் தனியாக போட்டியிட்டால் அதிக இடங்கள் கிடைக்கும் என்று பாமக நம்பியது. சட்டசபை தேர்தலில் பாஜக, அதிமுகவோடு கூட்டணி வைத்தால்தான் தோல்வி அடைந்தோம். இப்போது தனியாக போட்டியிட்டு வாக்கு வங்கியை உயர்த்தலாம் என்று பாமக நினைத்தது. இதில் அதிக வாக்குகளை பெற்றால் வர இருக்கும் நகராட்சி, மாநகராட்சி, பாராளுமன்ற தேர்தலில் அதிக இடங்களை கூட்டணி கட்சிகளிடம் டிமாண்ட் செய்யலாம் என்று பாமக நம்பியது.
தோல்வி
ஆனால் இப்போது ஒரு மாவட்ட கவுன்சிலர் இடங்களை கூட வெல்லாமல் பாமக படுதோல்வி அடைந்ததுதான் மிச்சம். பாரம்பரியமாக விழ வேண்டிய வாக்குகளும் விழவில்லை, வன்னியர் வாக்குகளும் விழவில்லை. காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியில் 9 மாவட்ட கவுன்சிலர் பதவிகளையும், விசிக 3 மாவட்ட கவுன்சிலர் பதவிகளையும் வென்றுள்ளது. ஆனால் பாமக தனித்து போட்டியிட்டு மாவட்ட கவுன்சிலர் பதவிகள் எதையும் பெறாமல் வீழ்ச்சி அடைந்துள்ளது.
திமுக மாபெரும் வெற்றி பாமக
கிட்டத்தட்ட திமுகவின் மாபெரும் வெற்றிக்கு பாமகவும் ஒரு காரணம் ஆகிவிட்டது என்றுதான் கூற வேண்டும். அதிமுகவோடு கூட்டணியில் இருந்தாலாவது பாமக கொஞ்சம் இடங்களை பெற்று இருக்கும். வடமாவட்டங்களில் கூட்டணியில் இருந்தால் பாமக அதிமுக இணைந்து சில இடங்களை கூடுதலாக பெற்று இருக்கும். திமுக வெற்றிபெற்ற இடங்கள் குறைந்திருக்கும். ஆனால் பாமகவோ தனித்து போட்டியிட்டு எதிர்க்கட்சிகளின் வாக்குகளை பிரித்து அது ஆளும் கட்சிக்கு சாதகமாக முடிந்துள்ளது.
அதிமுகவும் மிஸ் செய்தது
இதற்கு முன்பு பாமக எப்போதெல்லாம் தனித்து அல்லது மூன்றாவது கூட்டணி அமைத்து போட்டியிட்டதோ அப்போதெல்லாம் தோல்வி அடைந்து இருக்கிறது. ஆனால் அந்த தோல்விகளில் இருந்து பாடம் கற்காமல் மீண்டும் பாமக தனித்து போட்டியிட்டு தோல்வி அடைந்துள்ளது. அதிமுகவும் பாமக போனபின் பெரிதாக பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை தக்க வைக்க முயற்சி செய்யவில்லை. ஜெயலலிதா இருந்திருந்தால் பாமகவை இப்படி வெளியேற விட்டிருக்க மாட்டார். ஆனால் அதிமுகவின் தற்போதைய தலைவர்கள் யாரும் பாமகவை இழுத்து பிடிக்க முயற்சி செய்யவில்லை.
ஜெ காலத்து அதிமுக கிடையாது
விளைவு அதிமுகவும் படுதோல்வியை சந்தித்துள்ளது. பாமகவும் படுதோல்வியை சந்தித்துள்ளது. அதிக இடங்களை பெற்று வாக்கு வங்கியை அதிகரித்து வருங்கால கூட்டணியில் அதிக இடங்களை கேட்கலாம் என்ற நம்பிக்கையில்தான் பாமக இந்த தேர்தலில் தனித்து நின்றது. ஆனால் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் இருவரும் போட்ட கணக்கு தப்பாகி அது தற்போது பாமகவிற்கே எதிராக திரும்பி உள்ளது.
பாமக கனவு கலைந்தது
இனி கூட்டணி பேச்சுவார்த்தைங்களிலும் பாமக வட மாவட்ட வாக்குகளை காரணம் காட்டி அதிக இடங்களை பெற முடியாத இக்கட்டான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஆடிக்காற்றில் அம்மியே பறந்தது என்று சொல்வது போலத்தான், வடமாவட்டங்களில் பாமக பெரிய கை என்ற பிம்பத்தை இந்த தேர்தல் முடிவு நொறுக்கி உள்ளது என்றுதான் கூற வேண்டும். பாமக இப்போதே சுயபரிசோதனை செய்து, அடிப்படை கட்டமைப்பை சரி செய்வது மட்டுமே அக்கட்சி இழந்த பாரம்பரிய வாக்குகளை மீட்டெடுக்க உதவும்!