சீமான் முதலில் அறிவித்த தென்சென்னை 'நாம் தமிழர்' வேட்பாளர் நாச்சியாள் சுகந்தி அதிமுகவில் ஐக்கியம்!
சென்னை: நாம் தமிழர் கட்சியின் தென்சென்னை லோக்சபா தொகுதி வேட்பாளராக அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானால் கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட பத்திரிகையாளரும் ஆவணப் பட இயக்குநருமான நாச்சியாள் சுகந்தி, அதிமுகவில் இணைந்துள்ளார்.
பத்திரிகையாளர் நாச்சியாள் சுகந்தி பல்வேறு ஊடகங்களில் பயணித்தவர். கடந்த சில ஆண்டுகளாக நாம் தமிழர் கட்சியின் மிக தீவிரமான ஆதரவாளராக செயற்பட்டு வந்தார். தொலைக்காட்சி விவாதங்களிலும் நாம் தமிழர் கட்சியின் ஆதரவாளராக பங்கேற்றார்.

ஆனால் திடீரென நாம் தமிழர் கட்சியினருடன் முரண்பட்டு, தாம் நாம் தமிழர் கட்சியின் அடிப்படை உறுப்பினராக கூட இல்லை; பாஜகவை கடுமையாக திமுக அல்லது அதிமுக எதிர்த்தால் அந்த இரு கட்சிகளையும் ஆதரிப்பேன் எனவும் நாச்சியாள் சுகந்தி கூறியிருந்தார். இப்படி நாச்சியாள் சுகந்தி அறிவித்த சில நாட்களிலேயே சென்னை பொதுக் கூட்டம் ஒன்றில் பேசிய சீமான், 2024 தேர்தலில் தலைநகர் சென்னையில் 3 பெண்களுக்கு வாய்ப்பு கொடுப்போம். ஒருத்தி மத்திய சென்னையில் என் பாத்திமா நிப்பா.. வட சென்னையில் என் தங்கச்சி இளவஞ்சி நிப்பா.. தென் சென்னையில் என் தங்கச்சி நாச்சியாள் சுகந்தி நிப்பா. தலைநகரில் 3 பெண்கள் போட்டி. இதுதான் நடக்கும் என அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார். அப்போது நாம் தமிழர் கட்சியில் நாச்சியாள் சுகந்திக்கு கடும் எதிர்ப்பும் எழுந்ததாக சமூக வலைதளங்களில் செய்திகள் பகிரப்பட்டன.
இதனைத் தொடர்ந்து நாம் தமிழர் கட்சி ஆதரவு நிலையில் இருந்து விலகி நின்ற நாச்சியாள் சுகந்தி, அண்ணா திமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து தம்மை அதிமுகவில் இணைத்துக் கொண்டார்.
இது தொடர்பாக சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள நாச்சியாள் சுகந்தி, இரண்டு கோடி தொண்டர்களையுடைய அதிமுகவில் என்னை இணைத்துக்கொண்டேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார். நாச்சியாள் சுகந்திக்கு அதிமுகவில் இதுவரை எந்த பதவியும் கொடுக்கப்படவில்லை.
இன்னொரு பக்கம் நாச்சியாள் சுகந்தி, அதிமுகவில் இணைந்ததை நாம் தமிழர் கட்சியினர் கடுமையாகவும் விமர்சித்து வருகின்றனர். அதில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தின் போது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தி படுகொலைகளை நிகழ்த்தியதை மையமாக வைத்து அதிமுக ஆட்சிக்கு எதிராக ஆவணப் படம் எடுத்தவர் நாச்சியாள் சுகந்தி என்பதையும் நாம் தமிழர் கட்சியினர் சுட்டிக்காட்டி விமர்சித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications