கடன் தொல்லையால் விபரீத முடிவு; மனைவி, 2 குழந்தைகளை கொன்று வங்கி அதிகாரி தற்கொலை : சென்னையில் சோகம்
சென்னை போரூரில் உள்ள தனியார் வங்கியில் உயர் அதிகாரியாக பணியாற்றிய ஒருவர் தனது மனைவியை கிரிக்கெட் மட்டையால் அடித்து கொலை செய்து தனது இரு மகன்களையும் பனியன் துணியால் கழுத்தை இறுக்கியும் கொலை செய்து, பின்னர் தான் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். ஆன்லைனில் பணத்தை இழந்ததால் சோக முடிவா என போலீஸார் விசாரணை நடத்துகின்றனர்.

தனியார் வங்கி அதிகாரி
பெருங்குடி பெரியார் சாலையில் உள்ள தனியார் உள்ள ஃபாலிங் வாட்டர் தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் 7 வது தளத்தில் வசித்து வந்தவர் மணிகண்டன்(36). இவருக்கு தாரா (35) என்கிற மனைவியும், தரன் என 10 வயதில் மகனும், தாஹன் என ஒரு வயதில் ஒரு மகனும் இருந்தனர். மணிகண்டன் போரூரில் உள்ள பிரபல தனியார் வங்கியில் துணைத்தலைவர் அந்தஸ்த்தில் பணியாற்றி வந்துள்ளார். மாதம் 2.5 லட்ச ரூபாய்க்கு மேல் சம்பளம் என வசதியாக வாழ்ந்து வந்துள்ளனர்.

கடன் தொல்லையால் மன உளைச்சல்
கடந்த ஒரு வருடமாக போரூர் அபார்ட்மெண்டில் வாடகைக்கு குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவரது சொந்த ஊர் கோயம்புத்தூர் மாவட்டம் ஆகும். இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களாக மணிகண்டன் வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். மணிகண்டன் அவரது நண்பர்கள் சிலரிடம் அதிகமாக கடன் வாங்கியதாகவும் அதிக கடன் சுமையால் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

சோகமான புத்தாண்டு இரவு
இந்நிலையில் கடந்த 31 ஆம் தேதி இரவு வீட்டில் இருந்த மணிகண்டனுக்கும் அவரது மனைவி தாராவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதன் பின்னர் அவர்கள் மறுநாள் புத்தாண்டை ஒட்டி நேற்று வெளியில் வரவில்லை. வீடு பூட்டியே இருந்துள்ளது. பின்னர் இன்று காலை அக்கம்பக்கத்தினர் சந்தேகத்தின் பேரில் துரைப்பாக்கம் போலீஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

3 பேரை கொன்று தற்கொலை செய்த கணவன்
உடனடியாக சம்பந்தப்பட்ட பெருங்குடி அபார்ட்மெண்டுக்கு வந்த போலீஸார் கதவை தட்டியும் மணிகண்டன் கதவை திறக்காததால் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது கட்டிலில் மனைவி தாரா, மகன்கள் இருவரும் பிணமாக கிடந்ததும், தூக்கில் தொங்கியபடி மணிகண்டன் பிணமாக கிடந்ததைக் கண்டனர். உடனடியாக அவர்கள் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

வசதி இருந்தும் கடன் தொல்லை
பின்னர் போலீஸார் நடத்திய விசாரணையில் மணிகண்டன் அதிக கடன் சுமையால் தத்தளித்துள்ளதாகவும், நண்பர்கள், தெரிந்தவர்கள் வட்டத்தில் அதிக தொகையைஅ கடனாக பெற்றதாகவும் அதை திருப்பித்தர முடியாமல் கடன் கொடுத்தவர்களுக்கு பதில் சொல்ல முடியாமல் கடன் தொல்லையால் அவதி பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

கணவன் கோபம் குடும்பம் சிதைந்தது
சில காரணங்களால் கடந்த 2 மாதங்களாக வேலைக்கும் செல்லாமல் வீட்டில் இருந்ததாகவும் இதனால் கணவன் மனைவிக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், மனைவி கண்டித்ததால் ஆத்திரத்தில் மனைவியை கிரிக்கெட் மட்டையால் தலையில் அடித்துக் கொலை செய்துவிட்டு தனது இரண்டு மகன்களையும் பனியன் துணியால் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு கிச்சனில் உள்ள கொக்கியில் வேஷ்டியால் தனக்குத் தானே தூக்கு மாட்டியும் இறந்துள்ளது தெரியவந்தது.

ஆன் லைன் விளையாட்டில் பணத்தை இழந்தாரா?
மிகப்பெரிய பொறுப்பில் வங்கியில் வசதியான சம்பளத்துடன் பணியாற்றிய மணிகண்டனுக்கு வசதிக்கு குறைச்சல் இல்லாதபோது அதிக அளவு கடன் ஏன் வாங்க வேண்டும், வேலைக்கு செல்லாமல் இருந்ததன் காரணம் என்ன? பணத்தை இழக்கும் அளவுக்கு ஆன்லைன் விளையாட்டில் மூழ்கி இருந்தாரா? அல்லது வேறு வழியில் பணத்தை இழந்தாரா? என போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். புத்தாண்டு இரவில் மனைவி, 2 குழந்தைகளை கணவனே கொன்று தற்கொலை செய்துக்கொண்டது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications