மாறும் வானிலை.. நாளை உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி.. கொட்டப்போகும் மழை..மீனவர்களுக்கு வார்னிங்
சென்னை: கிழக்கு திசை மாறுபாட்டின் காரணமாக இன்று தமிழகம், புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது எனவும், நாளை அந்தமான் அருகே உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக டிசம்பர் 7 ம் தேதி முதல் கனமழைக்கு வாய்ப்புள்ளது எனவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும் சூறாவளியால் இன்று முதல் 3 நாட்கள் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. அக்டோபர் இறுதியில் துவங்கிய பருவமழை முதல் 2 வாரம் வெளுத்து வாங்கியது. அதன்பிறகு ஓய்வு எடுத்தது.
தற்போது மீண்டும் கடந்த ஒருவாரமாக வடகிழக்கு பருவமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்நிலையில் தான் டிசம்பர் 7 ம் தேதி முதல் தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

காற்றழுத்து தாழ்வு மண்டலம்
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது: தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி நாளை (டிசம்பர் 5) உருவாகக்கூடும். இது அதற்கடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக, தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் வலுவடையக் கூடும்.

7 முதல் கனமழை வாய்ப்பு
இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து டிசம்பர் 8ல் வட தமிழகம், புதுச்சேரி மற்றும் அதையொட்டிய தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளின் அருகில் நிலைபெற உள்ளது. இதனால் டிசம்பர் 7ம் தேதி முதல் தமிழகத்தில் கனமழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன.

இன்று மிதமான மழை
மேலும் தற்போது தமிழகத்தை நோக்கி கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு உள்ளது. இதன் காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் இன்று (டிசம்பர் 4) சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. இதற்கிடையே இன்று காலை முதல் பல மாவட்டங்களில் இதமான காலநிலை நிலவி வருகிறது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை
மேலும் இன்று அந்தமான் கடல் பகுதிகள் மற்றும் அதையொட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசலாம். அதேபோல் நாளை மற்றும் நாளை மறுநாள் 65 கிலோமீட்டர் வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக் கூடும். எனவே இந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.












Click it and Unblock the Notifications