மழையின் அடுத்த “ஆட்டம்”.. இன்றுமுதல் “ஸ்டார்ட்”.. 20ம் தேதி “உச்சகட்டம்” -நாள் குறித்த வானிலை மையம்
சென்னை: வங்கக்கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் என்றும், அடுத்த 48 மணி நேரத்தில் அது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெரும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
இதுகுறித்து வெளியிட்ட அறிக்கையில், "கேரள பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
வரும் 17 ஆம் தேதி தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அடுத்த 2 நாட்கள்
18 ஆம் தேதி தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 19 ஆம் தேதி தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

கனமழைக்கு வாய்ப்பு
20 ஆம் தேதி கடலோர தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களிலும் உள் தமிழக மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

மழை நிலவரம்
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்): ராஜபாளையம் (விருதுநகர்) 12, ஆயிக்குடி (தென்காசி) 9, சிவகிரி (தென்காசி) 7, கருப்பாநதி அணை (தென்காசி) 6, தென்காசி, வத்திராயிருப்பு (விருதுநகர்) தலா 5, செங்கோட்டை (தென்காசி), பாபநாசம் (திருநெல்வேலி), நாகுடி (புதுக்கோட்டை), பிலவாக்கல் (விருதுநகர்), கழுகுமலை (தூத்துக்குடி) தலா 3, பார்வூட் (நீலகிரி), ஸ்ரீவில்லிபுத்தூர் (விருதுநகர்), சங்கரன்கோவில் (தென்காசி), வால்பாறை PTO (கோயம்புத்தூர்), சோலையார் (கோயம்புத்தூர்) தலா 2, ஸ்ரீவைகுண்டம் (தூத்துக்குடி), மேட்டுப்பாளையம் (கோயம்புத்தூர்), நீடாமங்கலம் (திருவாரூர்), சாத்தான்குளம் (தூத்துக்குடி), கீழ் கோதையார் ARG (கன்னியாகுமரி), ஆவுடையார்கோயில் (புதுக்கோட்டை), பாம்பன் (ராமநாதபுரம்), மணிமுத்தாறு அணை ARG (திருநெல்வேலி), பேராவூரணி (தஞ்சாவூர்) தலா 1.

காற்றழுத்த தாழ்வு நிலை
இன்று அந்தமான் கடல் பகுதிகளில் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள அந்தமான் கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும், இது அதற்கடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் வலுபெறக்கூடும்." என தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications