கவிக்கோ விருது தொகை ரூ1 லட்சத்தை முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கினார் கவிஞர் அறிவுமதி
சென்னை: கவிக்கோ பொற்கிழி விருது தொகை ரூ1. லட்சத்தை முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு வழங்குவதாக அறிவித்தார் கவிஞர் (பாவலர்) அறிவுமதி.
கவிக்கோ அப்துல் ரகுமான் அறக்கட்டளை மற்றும் தமிழியக்கம் இணைந்து இன்று மாலை இணையவழியில் கவிக்கோ விருது வழங்கும் நிகழ்வை நடத்தியது. இந்த நிகழ்வுக்கு கவிக்கோ அறக்கட்டளை பொருளாளர் வெ. சோலை நாதன் தலைமை வகித்தார்.
இந்த நிகழ்வில் கவிக்கோ விருது 2019- ஒரு லட்சம் ரூபாய் பொற்கிழி, பாவலர் அறிவுமதிக்கு வழங்கப்பட்டது. வி.ஐ.டி. பல்கலைக் கழக வேந்தரும் தமிழியக்கத்தின் நிறுவனர்- தலைவருமான கோ. விசுவநாதன் இந்த கவிக்கோ விருதை பாவலர் அறிவுமதிக்கு வழங்கினார். கவிக்கோ அறக்கட்டளை செயலாளர் அயாஸ் பாஷா, அறிவுமதிக்கு பட்டயம் வழங்கினார்.
கவிக்கோ விருதை பெற்றுக் கொண்டு பேசிய பாவலர் அறிவுமதி, தமக்கு பொற்கிழியாக வழங்கப்பட்ட ரூ1 லட்சம் தொகையை முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு வழங்குவதாக அறிவித்தார். இந்த நிகழ்ச்சியில் தமிழியக்கத்தின் பொதுச்செயலாளர் அப்துல்காதர், தமிழியக்கத்தின் பொருளாளர் பதுமனார், தமிழியக்கத்தின் மாநில செயலாளர் மு. சுகுமார், தமிழியக்கத்தின் துணைச் செயலாளர் த. அன்பு, உறுப்பினர் பதிப்பாளர் எஸ்.எஸ். ஷாஜஹான் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பாவலர் அறிவுமதியின் இந்த அறிவிப்புக்கு சமூக வலைதளங்களில் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.