எடப்பாடி பழனிச்சாமி அவர்களே.. அவையில் பேசும்போது கைவசம் சரியான தகவல்களை வைத்திருங்கள்.. மா.சு. அட்வைஸ்
சென்னை: சட்டசபையில் பேசும் போது சரியான தகவல்களை தெரிந்து வைத்துக் கொண்டு பேசுவதுதான் நல்லது என எதிர்க்கட்சித் தலைவர் பழனிச்சாமியை அமைச்சர் மா சுப்பிரமணியன் சாடினார்.
சென்னையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நல்வாழ்வுக் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன், சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக ஆட்சிக் காலத்தில் 11 மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டது என பேசியிருந்தார்.
இது தொடர்பாக நான் நிறைய முறை விளக்கி பேசியிருக்கிறேன். 2011 ஆம் ஆண்டு சட்டசபையில் பிப்ரவரி மாதம் அன்றைய முதல்வர் கருணாநிதி, மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக் கல்லூரி என்ற மகத்தான திட்டத்தை கொண்டு வர முடிவு செய்தார்.

இடம் தேர்வு
இதையொட்டி 6 மருத்துவக் கல்லூரிகளுக்கான நிர்வாகத் தேர்வு, இடம் தேர்வு, நிதி ஒப்படைப்பு போன்ற பல்வேறு விஷயங்களை அன்றைக்கே செய்திருந்தார். இந்த கல்லூரிகளையெல்லாம் எங்கள் ஆட்சியில் கொண்டு வந்தோம் என தம்பட்டம் அடித்துக் கொள்வார்களே என ஏற்கெனவே நான் பேரவையில் தெரிவித்திருந்தேன்.

மீண்டும் பதிவு
நான் சொன்னதையே எதிர்க்கட்சித் தலைவர் மீண்டும் பதிவு செய்திருந்தார். மேலும் ஒரு மருத்துவக் கல்லூரிக்கு 150 மாணவர்கள் என்ற வீதத்தில் 11 மருத்துவக் கல்லூரிகளுக்கு 1,650 மாணவர்கள் சேர்க்கப்பட வேண்டும். அந்த மாணவர்களை இந்த ஆண்டே சேர்த்துக் கொள்ள வேண்டும் என சொல்லி, துறையின் செயலாளர், உயரதிகாரிகளுடன் டெல்லியில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சரையும் கல்வித் துறை அமைச்சரையும் சந்தித்து பேசியிருந்தோம்.

பிரதமருடன் முதல்வர் சந்திப்பு
பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் ஸ்டாலின் சந்தித்து இதுகுறித்து பேசியிருக்கிறார். அந்த வகையில் 11 மருத்துவக் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கை இந்த ஆண்டு வரும் என எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறோம். இவற்றையெல்லாம் எதையுமே தெரிந்து கொள்ளாமல் 5200 மாணவர்களின் மருத்துவ கனவு வீணாகி போனதாக தவறான தகவலை எடப்பாடி பழனிச்சாமி பதிவு செய்துள்ளார்.

நகலை பார்த்த மா.சு
அவரது பேச்சின் நகலையும் வாங்கி பார்த்தேன். எனவே சட்டசபையில் பேசும் போது அதுகுறித்த சரியான தகவலைத் தெரிந்து கொண்டு பேசினால் மட்டுமே அது சரியாக இருக்கும். எடப்பாடி பழனிச்சாமி இனிமேலாவது அதைச் செய்வார் என எதிர்பார்க்கிறோம் என மா சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார்.












Click it and Unblock the Notifications