மறக்கமுடியாத சென்னை..ருசியான சாட்..பட்டாணி சுண்டல்..குளுமையா குல்பி வரை.. ருசியால் கட்டிப்போடும்
சென்னை: சிற்றுண்டி பிரியர்களுக்காகவே சென்னையில் பல சாலையோர கடைகள் உள்ளன. மெரீனா கடற்கரையில் உள்ள கடைகளில் விற்பனை செய்யப்படும் தேங்காய் மாங்காய்,பட்டாணி சுண்டல் கலந்து சாப்பிடுவது தனி சுவை. இரவு நேர குல்பியின் ருசிக்கு பலரும் அடிமை. சென்னையை விட்டு சொந்த ஊருக்கு வந்து விட்டாலும் ஒவ்வொரு முறையும் தமிழக தலை நகரத்தை நினைக்கும் போது அந்த உணவின் ருசி நாவின் ஓரத்தில் வந்து போவது உண்மைதான்.
Recommended Video
வந்தாரை வாழ வைக்கும் சென்னை பெருநகரத்தில் பல ஊர்களைச் சேர்ந்த மக்கள் வசிப்பதால் பல வித உணவுகளையும் இங்கே ருசிக்கலாம். 383வது பிறந்தநாள் கொண்டாடும் சென்னையில் கடற்கரையில் விற்பனை செய்யப்படும் பட்டாணி சுண்டல், சாட் உணவுகள், ருசியான பஜ்ஜிகளை சாப்பிட்டே பலரது வயிறு நிரம்பி விடும்.
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் அறுபத்து மூவர் திருவிழாவின் போது மாட வீதிகளில் கிராமங்களில் கிடைக்கும் கமர்கட் முதல் ரவா லட்டு வரைக்கும் விற்பனை செய்யப்படும்.
அதுசரி மெட்ராஸ் டே ஏன் ஆகஸ்ட் 22-ந் தேதி கொண்டாடப்படுகிறது? சுவாரசிய வரலாற்று பின்னணி இதுதான்!
சென்னை மாநகரம்
சென்னைப்பட்டணம் ஆங்கிலேயர் வருகைக்குப் பிறகு மெட்ராஸ் ஆக மாறி பின்னர் மீண்டும் சென்னையாக மாறியது. பெயர் மாறினாலும் மனிதர்கள் மாறுவதில்லை அவர்கள் தயாரிக்கும் உணவின் ருசியும் மாறுவதில்லை. பல நூற்றாண்டு கால வரலாறு கொண்ட சென்னைக்கு எத்தனையோ சிறப்புகள் இருந்தாலும் அங்குள்ள சாலையோர கடைகளில் விற்பனை செய்யப்படும் சிற்றுண்டிகள், சாட் உணவுகளின் ருசி அலாதியானது.
சாட் உணவுகளின் ருசி
பானி பூரி, பேல் பூரி, தயிர்பூரி, பாவ் பாஜி, வடை பாவ்,சமோசா, கட்லெட் , சன்னா மசாலா என இந்தியாவின் பல பகுதிகளில் பிரபலமாக விற்பனை செய்யப்படும் அனைத்து வகையான சாட் சிற்றுண்டிகளையும் சென்னையில் உள்ள சாலையோர கடைகளில் நாம் ருசிக்க முடியும். கால மாற்றத்தினால் பர்கர்,பீட்சா, சாண்ட் விச், சாலட் என விதம் விதமாக சாப்பிட்டாலும் சாட் உணவுகளின் சுவைக்கு ஈடு இணையில்லை என்றே சொல்ல வேண்டும்.
மெரீனாவின் பட்டாணி சுண்டல்
மெரீனா கடற்கரையில் காற்று வாங்க செல்பவர்கள் வறுத்த கடலை, வேக வைத்த பட்டாணி அதில் தேங்காய் மாங்காய் துருவல் சேர்த்த சுண்டல் சாப்பிடாமல் வீடு திரும்ப மாட்டார்கள். சுடச்சுட மக்காச்சோளம் வண்டிகளில் விற்றுக்கொண்டிருப்பார்கள் ஜில்லென்ற கடல் காற்றுக்கு இதமாக சில சோளக்கதிர்களை கொறித்து சாப்பிடுவார்கள் சிலர். தள்ளுவண்டி கடைகளில் விற்பனையாகும் சாட் உணவுகள், சென்னா மசாலா, பஜ்ஜி, வடைகள் என விதம் விதமாக மக்களின் டேஸ்டுக்கு ஏற்ப உணவின் வகைகளும் மாறும்.
மயிலாப்பூர் டேஸ்
சென்னைவாசிகள் விதம் விதமான உணவை மக்கள் ருசிக்க வேண்டும் என்பதற்காகவே ஆண்டுதோறும் 3 நாட்கள் 'மயிலாப்பூர் டேஸ்' திருவிழா கொண்டாடுவார்கள். தெருவோரங்களில் விற்பனை செய்யப்படும் அனைத்து வகையான உணவுகளையும் ஒரே இடத்தில் ருசிக்கலாம். அதற்காகவே திருவிழாவை ரசிக்க வருவார்கள். பங்குனி மாதத்தில் அறுபத்து மூவர் திருவிழா நடைபெறும் 10 நாட்களும் கடைவீதி களைகட்டும்.
மசாலா கார பொரி
மயிலாப்பூர் வீதிகளில் மாலை நேரங்களில் தள்ளு வண்டி கடைகளில் இரும்பு சட்டியில் தட்டிக்கொண்டே சுடச்சுட வறுத்த கடலை விற்றுக்கொண்டு வருவார்கள். ஒரு பொட்டலம் 5 ரூபாய்தான் சுடச்சுட வாங்கி சாப்பிட சுவை சும்மா அள்ளும். சில தள்ளுவண்டிகளில் அரிசி பொரியில் மசாலா சேர்த்து கார பொரியாக கொஞ்சம் வறுத்த கடலை, ஓமப்பொடி, மசாலா, பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து கொடுப்பார்கள். பொரியோடு துருவிய காரட், நறுக்கிய பெரிய வெங்காயம், சேர்த்து சாஸ் சேர்த்து, சில மசாலாக்களை டப்பாவில் கொட்டி கலந்து கொடுப்பார்கள். அடடா அப்படியே நாவில் ருசி அள்ளும்.
கொழுக்கட்டை, உளுந்தங்கஞ்சி
இப்போதெல்லாம் சிற்றுண்டிகளில் சத்தானதையும் சென்னையில் விற்பனை செய்ய ஆரம்பித்து விட்டனர். மயிலாப்பூர் பாரதி மெஸ்சில் கொழுக்கட்டை, கார பணியாரம், இனிப்பு பணியாரம், உளுந்தங்கஞ்சி என சுவையான சத்தான சிற்றுண்டிகளை சாப்பிடவும் ருசிப்பிரியர்கள் தினசரியும் வந்து செல்கின்றனர்.
சென்னா மசாலா
சென்னையில் பெயர்போன மற்றுமொரு உணவு பதார்த்தம் சென்னா மசாலா. சென்னையில் எந்த பக்கம் திரும்பினாலும் அங்கு சென்னா மசாலா கடையை பார்க்க முடியும். அதே போல வேகவைத்த பட்டாணியில் மசாலா சேர்த்து அதில் பானி பூரி, சமோசா சேர்த்து சாஸ் சேர்த்து கலந்து கொடுப்பார்கள். மாலை நேரங்களில் 20 ரூபாய்க்கு வாங்கி சாப்பிட்டாலே வயிறு நிரம்பி விடும். அவித்த கொண்ட கடலையுடன் சாஸ் சேர்த்து ஓமப்பொடி கலந்து கொடுக்கப்படும் உணவு காரமும் இனிப்பும் கலந்து தனி சுவையோடு இருக்கும்.
பஜ்ஜி, வடை
சென்னையில் சாட் வகைகளுக்கு நிகராக, மாலையில் அதிகம் விற்பனையாகும் மற்றுமொரு சிற்றுண்டி வடை, பஜ்ஜி. கடலைமாவு கலவையில் வாழைக்காய், வெங்காயம், குடை மிளகாய், உருளைக்கிழங்கு என பலவகை பஜ்ஜிகள் பிளேட்களில் கார சட்னி வைத்து கொடுப்பது தனி ருசி. கோபி 65 பொறித்தது தட்டு தட்டாக பறக்கும். ரோட்டோர கடைகளில் குட்டி மசால்வடை, ஆனியன் போண்டா, மெதுவடைக்கு என பிரத்யோகமாக தயாரிக்கப்பட்ட வெங்காய சட்னி செம கூட்டணி. உருளைக்கிழங்கு கட்லெட் கூடவே சாஸ் சேர்த்து சாப்பிட்டால் அந்த ருசிக்கு ஈடு இணை ஏது. காலமாற்றத்தினால் இப்போது சிக்கன் சவர்மா, ப்ரைட் ரைஸ், எக் ரைஸ் என சின்னச்சின்ன கடைகள் முளைத்திருந்தாலும் விலை குறைவான சாலையோர உணவுகளுக்கு என்று இப்போது ருசிப்பிரியர்கள் பலர் இருக்கிறார்கள்.
லஸ்ஸி சர்பத்
என்னதான் விதம் விதமாக கூல்டிரிங்க்ஸ்கள் பாட்டில் பாட்டிலாக விற்பனை செய்யப்பட்டாலும் விலை அதிகமாக ஐஸ்கிரீம்களை பார்லர்களில் விற்பனை செய்யப்பட்டாலும் சாலையோர கடைகளில் விற்பனை செய்யப்படும் ரோஸ்மில்க், பாதாம் மில்க், ப்ரூட் மிக்சர், லஸ்சி, சர்பத், கடல்பாசி என குளுமை பிரியர்களுக்கு என கடைகள் ஆங்காங்கே கார்னர்கள் காத்துக்கொண்டிருக்கும்.
குல்பி ஐஸ்
இரவு நேரங்களில் குல்பி குல்பி என சின்ன தள்ளுவண்டியில் மண்பானையை வைத்துக்கொண்டு கிணி கிணி சத்தத்தோடு விற்றுக்கொண்டு குல்பி ஐஸ்காரருக்காக பலர் உறங்காமல் காத்திருப்பார்கள். நன்றாக காய்ச்சிய பாலுடன் முந்திரி, பாதம், பிஸ்தா கலந்து அதை குல்பி அச்சில் ஊற்றி கேட்பவர்களுக்கு 10 ரூபாய் முதல் 30 ரூபாய் வரை கொடுக்கும் காசுக்கு ஏற்ப சிறியதும் பெரியதுமாக எடுத்துக் கொடுத்து பலரது மனங்களை குளிர்வித்து விடுவார் குல்பி ஐஸ்காரர். இப்படி சென்னையில் விற்பனையாகும் எத்தனையோ ருசியான உணவுகளைப் பற்றி எழுதிக்கொண்டே போகலாம். நான் ருசித்து சாப்பிட்ட சில சிற்றுண்டிகள் சிலவற்றை எழுதியிருக்கிறேன். சென்னையில் உங்களுக்கு பிடித்தமான சிற்றுண்டிகள் விடுபட்டு போயிருந்தால் அதை நீங்கள் எழுதுங்கள்.