கோர்ட்களில் மீண்டும் அம்பேத்கர் புகைப்படம்.. ஏற்றுக்கொண்ட சென்னை உயர்நீதிமன்றம்.. எப்படி?
சென்னை: நீதிமன்றங்களில் அண்ணல் அம்பேத்கரின் புகைப்படங்கள் அகற்றக்கூடாது என்ற தமிழ்நாடு அரசின் நிலைப்பாட்டினை சென்னை உயர்நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது.
முன்னதாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள நீதிமன்றகளில் மகாத்மா காந்தி மற்றும் திருவள்ளுவர் உருவப்படங்களை தவிர மற்ற எவரது படங்களையும் வைக்கக் கூடாது என அனைத்து நீதிமன்றங்களுக்கும் சென்னை உயர் நீதிமன்றம் சுற்றறிக்கை அனுப்பி இருந்தது.

டாக்டர் அம்பேத்கர் மற்றும் சம்மந்தப்பட்ட வழக்கறிஞர் சங்கங்களின் மூத்த வழக்கறிஞர்கள் ஆகியோரின் உருவப்படங்களைத் திறக்க அனுமதி கோரி பல்வேறு வழக்கறிஞர் சங்கங்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகளை நிராகரித்து, கடந்த ஏப்ரல் 11 ஆம் தேதி நடத்தப்பட்ட உயர் நீதிமன்ற அனைத்து நீதிபதிகள் அடங்கிய கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து அனைத்து மாவட்ட நீதிமன்றங்களுக்கும் உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் எம்.ஜோதிராமன் சுற்றறிக்கை அனுப்பி இருந்தார்.
அதில் ஆலந்தூரில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தின் நுழைவுவாயிலில் வைக்கப்பட்டுள்ள அம்பேத்கரின் படத்தை அகற்ற ஆலந்தூர் நீதிமன்ற வழக்கறிஞர்களிடம் வலியுறுத்தும்படி காஞ்சிபுரம் முதன்மை மாவட்ட நீதிபதிக்கு அறிவுறுத்தியுள்ளார்.
கடந்த காலங்களில் பல்வேறு இடங்களில் மோதல் மற்றும் சட்டம்-ஒழுங்கு பாதிப்பு ஆகியவற்றுக்கு வழிவகுக்கும் வகையில் தேசிய தலைவர்களின் படங்களும், சிலைகளும் வைக்கப்பட்ட சம்பவங்கள் சுட்டிக்கட்டி, மகாத்மா காந்தி மற்றும் திருவள்ளுவர் படங்களை தவிர மற்ற எவரது படங்களை வைக்க அனுமதிக்கக் கூடாது என 2008, 2010, 2011, 2013, 2019ஆம் ஆண்டுகளில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதை சுற்றறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல், அம்பேத்கரின் உருவப்படத்தை அகற்ற ஆலந்தூர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தை வற்புறுத்துமாறு காஞ்சிபுரம் முதன்மை மாவட்ட நீதிபதிக்கு கடந்த 2013-ம் ஆண்டு ஏப்ரல் 27-ம் தேதி முழு நீதிமன்றம் உத்தரவிட்டு, புதிதாக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு நீதிமன்றங்களில் அவரது படத்தை வைக்கக் கோரிய கடலூர் வழக்கறிஞர் கோரிக்கையை நிராகரித்தது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து மாவட்ட நீதித்துறை தலைவர்களும் அனைத்து நீதிபதிகள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்றும், அதை மீறுவோர் மீது தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலில் தகுந்த புகார் அளித்து நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று சுற்றறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் உயர்நீதிமன்ற பதிவாளரின் சுற்றறிக்கைக்கு பாமக நிறுவனர் ராமதாஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் உள்பட பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதேபோல் வழக்கறிஞர் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.சட்டம் இயற்றிய அம்பேத்கர் படத்தை நீதிமன்றங்களில் வைக்க அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தார்கள்.
இந்நிலையில், நீதிமன்றங்களில் அண்ணல் அம்பேத்கரின் புகைப்படங்கள் அகற்றக்கூடாது என்ற தமிழ்நாடு அரசின் நிலைப்பாட்டினை சென்னை உயர்நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தியில், நீதிமன்றங்களில் அண்ணல் அம்பேத்கர் புகைப்படம் அகற்றப்படம் என்று செய்தி பரவியதை தொடர்ந்து, தமிழக முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின் படி, சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி, மெட்ராஸ் உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி நீதியரசர் சஞ்சய் விஜயகுமார் கங்காபூர்வாலாவை சந்தித்து இதுகுறித்து ஆலோசனை மேற்கொண்டார்.
தலைமை நீதிபதி அவர்களிடம் அண்ணல் அம்பேத்கர் புகைப்படம் அகற்றப்படக்கூடாது என்ற தமிழ்நாடு அரசின் நிலைப்பாட்டினை சட்டத்துறை அமைச்சர் கடிதம் வழங்கி நேரில் தெரிவித்தார்.
தமிழக அரசின் நிலைப்பாட்டினை கேட்டறிந்த தலைமை நீதிபதி அவர்கள், நீதிமன்றங்களில் எந்த தலைவர்களின் புகைப்படதையும் அகற்ற உத்தரவிடவில்லை. தற்போது உள்ள நடைமுறையே தொடரும் என தெரிவித்தார். இத்தகவல் வழக்கறிஞர் மன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் தெரிவிக்கப்பட்டது" இவ்வாறு அரசின் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications