எம்.டெக். படிப்புகளில் நடப்பாண்டில் மட்டும் 69% இடஒதுக்கீடு- அண்ணா பல்கலை.க்கு ஹைகோர்ட் யோசனை
சென்னை: சென்னை அண்ணா பல்கலைகழகத்தில் எம்.டெக் படிப்புகளில் இந்த ஆண்டு மாநில அரசின் இட ஒதுக்கீட்டு முறையை பின்பற்றி மாணவர் சேர்க்கை நடத்தி, அடுத்தாண்டு முதல் மத்திய அரசு இட ஒதுக்கீடு முறையை பின்பற்றலாம் என சென்னை உயர் நீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தில், எம்.டெக்., பயோடெக்னாலஜி, எம்.டெக்., கம்ப்யூட்டேஷனல் டெக்னாலஜி ஆகிய இரு பட்ட மேற்படிப்புகளுக்கும் இந்த ஆண்டு மாணவர்கள் சேர்க்கை இல்லை என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்தது. இதனை எதிர்த்து இப்படிப்புக்கு நுழைவுத்தேர்வு எழுதி விண்ணப்பித்துள்ள மாணவிகள் சித்ரா மற்றும் குழலி உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்குகள் நீதிபதி பி.புகழேந்தி முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மாணவர்களின் நலன் சம்மந்தப்பட்ட இந்த விவகாரத்தில் எவ்வாறு தீர்வு காணப்போகிறீர்கள் என்றும், இந்த படிப்பை பல்கலைக்கழகம் தொடர்ந்து நடத்த என்ன செய்வது என்றும் நீதிபதி கேள்வி எழுப்பினார்.
அதேபோல, இந்த ஆண்டு மாநில அரசின் இட ஒதுக்கீட்டு முறையை பின்பற்றி மாணவர் சேர்க்கை நடத்தி, அடுத்தாண்டு முதல் மத்திய அரசு இட ஒதுக்கீடு முறையை பின்பற்றலாம் என யோசனை தெரிவித்த நீதிபதி, 45 மாணவர்களை சேர்ப்பதால் எந்த சிக்கலும் ஏற்படாது என்றார்.
இந்த வழக்கு எம்.டெக் படிப்பில் இருந்து இட ஒதுக்கீடு பிரச்சனைக்கு திசை மாறி செல்வதாகவும், உச்சநீதிமன்ற தீர்ப்பு வரும் வரை 69% இட ஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டதா எனவும் கேள்வி எழுப்பினார். இந்தாண்டு எம்.டெக் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை அண்ணா பல்கலைகழகமே நடத்தும் நிலையில், இதில் மத்திய அரசின் இட ஒதுக்கீடு பின்பற்றப்பட்டால் அது பல்கலைகழகத்தை இக்கட்டான சூழ்நிலைக்கு கொண்டு செல்லும் என்றும் தெரிவித்தார்.
இந்த விவகாரத்தில் தீர்வு காணவும் என்றும் எம்.டெக் படிப்புகளில் மாணவர் சேர்க்கையை தொடங்குவது குறித்தும் பிப்ரவரி 18-ம் தேதி அனைத்து தரப்பினரும் விளக்கமளிக்கவும் நீதிபதி புகழேந்தி உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications