சென்னை தீவுத்திடலில் பொருட்காட்சியை 28-ம் தேதி துவங்கலாம் - ஹைகோர்ட் உத்தரவு
சென்னை: சென்னை தீவுத்திடலில் சுற்றுலா மற்றும் வர்த்தக பொருட்காட்சியை வரும் 28-ம் தேதி முதல் துவங்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை தீவுத்திடலில் 47-வது சுற்றுலா பொருட்காட்சி நடத்துவதற்கான டெண்டரில் பங்கேற்க அளித்த விண்ணப்பத்தை நிராகரித்ததை எதிர்த்து, பெங்களூருவைச் சேர்ந்த 'ஃபன் வேர்ல்ட்' (Fun World) என்ற நிறுவனத்தின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில் அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "கடந்த 2017-ம் ஆண்டு சுற்றுலா பொருட்காட்சியின்போது தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்திற்கு செலுத்த வேண்டிய ரூ.3 லட்சம் பாக்கி தொகையை செலுத்தாததால், டென்டரில் கலந்து கொள்ளும் தகுதியை அந்த நிறுவனம் இழந்து விட்டது. எனவே அதன் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது" என விளக்கம் அளித்தார். இதை பதிவு செய்து கொண்ட தனி நீதிபதி, அந்த வழக்கை 50 ஆயிரம் ரூபாய் அபராதத்துடன் தள்ளுபடி
செய்து உத்தரவிட்டிருந்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து 'ஃபன் வேர்ல்டு' நிறுவனத்தின் சார்பில் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவானது, பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பாரத சக்கரவர்த்தி அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, டெண்டரில் வெற்றி பெற்ற நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டு பொருட்காட்சி அமைப்பதற்கான பணிகள் துவங்கி விட்டதாகவும், டிசம்பர் 28-ம் தேதி முதல் பொருட்காட்சி துவங்க உள்ளதாகவும் அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
இதை ஏற்றுக் கொண்டு, பொருட்காட்சியை திட்டமிட்டபடி துவங்க அனுமதியளித்த நீதிபதிகள், ரூ.50 ஆயிரம் அபராததுக்கு மட்டும் தடை விதித்து, மேல்முறையீட்டு மனுவுக்கு பதில் அளிக்குமாறு அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஜனவரி 5-ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.












Click it and Unblock the Notifications