பிரசாத் ஸ்டுடியோவில் இளையராஜா தியானம் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி
சென்னை: இசையமைப்பாளர் இளையராஜா, பிரசாத் ஸ்டூடியோவில் தான் இசையமைத்த அறையில் தியானம் செய்து கொள்ள அனுமதியளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 40 ஆண்டு காலம் இசையமைக்க பயன்படுத்திய பிரசாத் ஸ்டூடியோவில் இருந்து வெளியேற கூறியதை எதிர்த்து இளையராஜா சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கு நிலுவையில் உள்ளது.
இதனிடையே பிரசாத் ஸ்டூடியோவில் உள்ள தனக்கு சொந்தமான பொருட்களை எடுக்க அனுமதி கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் இளையராஜா மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி சதீஷ்குமார் முன் விசாரணைக்கு வந்தபோது, சிவில் நீதிமன்றத்தில் உள்ள வழக்கையும், காவல் துறையிடம் அளித்த புகாரையும் வாபஸ் பெறுவதாக உத்தரவாத மனு தாக்கல் செய்தால் அவரை ஸ்டூடியோவுக்குள் அனுமதிக்கலாம் என ஸ்டூடியோ நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதன் அடிப்படையில் இளையராஜா தரப்பில் உத்தரவாத மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி சதீஷ்குமார் முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, இளையராஜா தரப்பில் உத்தரவாத மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதை பதிவு செய்த நீதிபதி, பிரசாத் ஸ்டூடியோவுக்குள் நுழையவும், இசையமைத்த அறையில் தியானம் செய்யவும் இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு அனுமதியளித்து உத்தரவிட்டார். தியானம் மேற்கொள்ளும் போது, இளையராஜாவுக்கு சொந்தமான பொருட்களை பிரசாத் ஸ்டூடியோ நிர்வாகம், தனது சொந்த செலவில் எடுத்துச் சென்று ஒப்படைக்க வேண்டும் எனவும் உத்தரவிட்ட நீதிபதி, பொருட்களின் பட்டியலை சரி பார்க்க வழக்கறிஞர் லட்சுமி நாராயணனை நியமித்தும் உத்தரவிட்டார்.
கஞ்சா மணியும் காவல்துறையும்.. பெற்ற தந்தையை எகிறி எகிறி உதைத்த மகன்கள்.. 2020ல் கடலூர் டாப் 10!
எந்த தேதியில் இளையராஜா, பிரசாத் ஸ்டூடியோவுக்கு செல்வது குறித்து இரு தரப்பினரும் முடிவு செய்து கொள்ளலாம் எனவும், காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இளையராஜா ஸ்டூடியோவுக்குள் இருக்கலாம் எனவும், ஸ்டூடியோவுக்குள் செல்லும் இளையராஜாவுடன், அவரது உதவியாளர்கள் மூன்று பேரை மட்டும் அனுமதிக்கலாம் எனவும் இரு தரப்பு வழக்கறிஞர்கள் உடன் செல்லலாம் எனவும் நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.
மேலும், சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் தடுக்க போதுமான போலீஸ் பாதுகாப்பை வழங்க வேண்டும் என சென்னை காவல் ஆணையருக்கு உத்தரவிட்ட நீதிபதி, இளையராஜாவின் வழக்கை முடித்து வைத்தார்.