சாதி ரீதியான பாகுபாடுகளை தடுக்க.. கிராம பஞ்சாயத்துகளில் சிசிடிவி கேமரா..தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
சென்னை: தமிழ்நாடு முழுவதும் உள்ள கிராம பஞ்சாயத்துகளில் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு பதிலளிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ராஜகுரு என்பவர் பொதுநல வழக்கு ஒன்றைத் தொடர்ந்துள்ளார். அதில் தமிழ்நாட்டில் பஞ்சாயத்துகளில் தலித் தலைவர்கள் பாரபட்சமாகச் சாதி ரீதியான பாகுபாடுகளுடன் நடத்தப்படுவதாகத் தெரிவித்துள்ளார். கடந்த 1997ஆம் ஆண்டு முதல் 6 பஞ்சாயத்துத் தலைவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

தலித் தலைவர்கள் உள்ள பஞ்சாயத்துக்களில் சாதிரீதியான பாகுபாடு நடைபெறுவதாகவும், குறிப்பாக தலித் தலைவர்கள் தேசியக்கொடி ஏற்ற அனுமதிக்கப்படுவதில்லை, பஞ்சாயத்து அலுவலகங்களில் அவர்களுக்கு இருக்கைகள் வழங்கப்படுவதில்லை, ஆவணங்களைப் பார்ப்பதற்கு அனுமதிக்கப்படுவதில்லை, பெண் பஞ்சாயத்துத் தலைவர்கள் பாலியல் ரீதியான துன்புறுத்தலுக்கு ஆளாவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே தமிழ்நாட்டிலுள்ள பஞ்சாயத்து அலுவலகங்களில் சிசிடிவி கேமரா பொருத்த உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். கடந்த 2012ஆம் ஆண்டு தமிழ்நாட்டிலுள்ள உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் சிசிடிவி கேமரா பொருத்தப்பட வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீப் பேனர்ஜி ,நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் இது குறித்து தமிழக அரசு நான்கு வாரத்துக்குள் பதிலளிக்குமாறு உத்தரவிட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications