வடிவேலு தொடர்ந்த வழக்கு.. சிங்கமுத்துவுக்கு ரூ.2,500 அபராதம் விதித்தது சென்னை ஐகோர்ட்!
சென்னை: நடிகர் வடிவேலு தொடர்ந்த அவதூறு வழக்கில் சிங்கமுத்துவுக்கு ரூ.2,500 அபராதம் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தன்னைப் பற்றி நடிகர் சிங்கமுத்து அவதூறாக பேசியதற்காக ரூ.5 கோடி மான நஷ்டஈடு கோரி நடிகர் வடிவேலு வழக்கு தொடர்ந்திருந்தார்.

வடிவேலுவும், சிங்கமுத்துவும் ஒரு காலத்தில் பல திரைப்படங்களில் ஒன்றாக நடித்தனர். வடிவேலுவின் பல காமெடி காட்சிகளை சிங்கமுத்து எழுதினார். அவை மக்கள் மத்தியில் பெரியளவில் ஹிட் அடித்தன. சிங்கமுத்து நடிப்பு தவிர ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வந்தார். வடிவேலுவுக்கும் பல சொத்துகள் வாங்கி கொடுத்தார். இதில் அவர் தன்னை மோசடி செய்துவிட்டதாக வடிவேலு குற்றம்சாட்டினார். இதனால் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இந்த நிலையில் சிங்முத்து யூடியூப் சேனல்களுக்கு அளித்த பேட்டியில் வடிவேலு பற்றி பேசி இருந்தார். இதையடுத்து தன்னை பற்றி அவதூறாக பேசியதற்காக 5 கோடி ரூபாயை மான நஷ்டஈடாக சிங்கமுத்து தர வேண்டும் என்றும், தன்னை பற்றி அவதூறாக பேச அவருக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார் வடிவேலு.
பொதுமக்கள் மத்தியில் தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசியதற்காக ரூ.5 கோடியை மான நஷ்ட ஈடாக வழங்க நடிகர் சிங்கமுத்துவுக்கு உத்தரவிட வேண்டும். தன்னைப் பற்றி அவதூறாக பேச சிங்கமுத்துவுக்கு தடை விதிக்க வேண்டும் எனக் கோரியிருந்தார் நடிகர் வடிவேலு.
இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், சிங்கமுத்து பதிலுரை தாக்கல் செய்யாததால் அவர் வடிவேலு பற்றி அவதூறாகப் பேச தடை விதிக்கப்பட்டது. ஒருதலைப்பட்சமாக விதிக்கப்பட்ட தடை உத்தரவை நீக்க வேண்டும் என சிங்கமுத்து தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்நிலையில், நடிகர் வடிவேலு குறித்து அவதூறாக பேசியது தொடர்பான வழக்கில் நடிகர் சிங்கமுத்துக்கு ரூ.2,500 அபராதம் விதித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. நடிகர் வடிவேலு ரூ.5 கோடி மான நஷ்டஈடு கோரியிருந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றம், சிங்கமுத்து அபராதம் செலுத்த உத்தரவிட்டுள்ளது.
அவதூறு வழக்கில் ஒருதலைபட்சமாக வழங்கிய தடை உத்தரவை நீக்கி சிங்கமுத்துவுக்கு அபராதம் விதித்தது சென்னை உயர்நீதிமன்றம். வடிவேலுக்கு எதிராக இனிமேல் அவதூறு கருத்தை தெரிவிக்க மாட்டேன் என்று நடிகர் சிங்கமுத்து தரப்பில் உத்தரவாத மனு தாக்கல் செய்யப்பட்டது.












Click it and Unblock the Notifications