நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பு...அனுமதி அளித்த அதிகாரி மீது குற்ற நடவடிக்கை எடுக்க ஹைகோர்ட் உத்தரவு
நீர்நிலைகளை ஆக்கிரமிக்கவில்லை என விண்ணப்பதாரரிடம் உத்தரவாதம் பெற்ற பிறகே, குறிப்பிட்ட நிலத்துக்கு கட்டிட ஒப்புதலோ அனுமதியோ வழங்கப்பட வேண்டுமென தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை: நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பு செய்த நிலங்களுக்கு கட்டிட ஒப்புதலோ, அனுமதியோ வழங்கியிருந்தால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கையுடன், குற்ற நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீர்நிலைகளை ஆக்கிரமிக்கவில்லை என விண்ணப்பதாரரிடம் உத்தரவாதம் பெற்ற பிறகே, குறிப்பிட்ட நிலத்துக்கு கட்டிட ஒப்புதலோ அனுமதியோ வழங்கப்பட வேண்டுமென தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் பல்வேறு நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிய வழக்குகளை, பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வு விசாரித்தது.
உயர் நீதிமன்ற உத்தரவின்படி, தமிழக தலைமைச் செயலாளர் தாக்கல் செய்த அறிக்கையில், நீர் நிலைகள் அடையாளம் காணப்பட்டுள்ளதால், அவற்றில் உள்ள ஆக்கிரமிப்புகளை குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள் அகற்றப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இந்த அனைத்து வழக்குகளிலும் இன்று தீர்ப்பளித்த நீதிபதிகள், நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.
மேலும், ஆக்கிரமிப்புகளை தவிர்க்க பதிவுத்துறையினர், நீர்நிலை நிலங்களை பதிவு செய்ய கூடாது என உத்தரவிட்ட நீதிபதிகள், நீர்நிலைகளை ஆக்கிரமிக்கவில்லை என விண்ணப்பதாரரிடம் உத்தரவாதம் (Declaration) பெற்ற பிறகே, குறிப்பிட்ட நிலத்துக்கு சொத்துவரி வசூலிக்க வேண்டும் எனவும் தீர்ப்பளித்தனர்.
அதேபோல, ஆக்கிரமிப்பு அல்ல என உத்தரவாதம் பெறாமல் மின் இணைப்போ, குடிநீர் இணைப்போ வழங்க கூடாது என உத்தரவிட்ட நீதிபதிகள், அனுமதி கோரும் கட்டிடம் நீர்நிலைகளில் இல்லை என உறுதி செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.
நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பு செய்த நிலங்களுக்கு கட்டிட ஒப்புதலோ, அனுமதியோ வழங்கியிருந்தால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கையுடன், குற்ற நடவடிக்கையும் எடுக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.












Click it and Unblock the Notifications