தமிழகத்தில் அனுமதியின்றி வைக்கப்பட்ட சிலைகள்.. தலைமைச் செயலாளருக்கு உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு
சென்னை: தமிழகத்தில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள சிலைகளை அகற்றுவது தொடர்பாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அமலபடுத்த எடுத்த நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக தலைமைச் செயலாளருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவை அவினாசி சாலை சந்திப்பில் அனுமதி பெற்று வைக்கப்பட்டிருந்த அண்ணா சிலையின் பீடத்தை அகலப்படுத்தி, முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர். ஜெயலலிதா சிலைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், உரிய அனுமதியின்றி அமைக்கப்பட்டுள்ள இச்சிலைகளை அகற்ற உத்தரவிடக் கோரி, கோவையைச் சேர்ந்த லோகநாதன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அந்த மனுவில், தமிழகத்தில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள சிலைகளை உச்ச நீதிமன்ற உத்தரவின்படி அப்புறப்படுத்த உத்தரவிட வேண்டும் எனக் கோரியுள்ளார்.

சிலை கூடாது
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வு, தலைவர்கள் மரியாதைக்கு உரியவர்கள்... எந்த அவமரியாதையும் அவர்களுக்கு ஏற்படுத்தவில்லை... ஆனால் அரசு நிலம் சிலைகள் அமைக்க பயன்படுத்த கூடாது என அறிவுறுத்தியது.

உயர்நீதிமன்றம்
மேலும், எதிர்காலத்தில் அனுமதியின்றி சிலைகள் அமைப்பதை தடுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க அரசை வலியுறுத்திய நீதிபதிகள், அனுமதியின்றி வைக்கப்படும் சிலைகளை அகற்றுவது தொடர்பாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை அமல்படுத்த வேண்டும் என்றும், அதற்காக அரசு எடுத்த நடவடிக்கை, பிறப்பித்த அறிவிப்புகள் குறித்து விரிவான அறிக்கையுடன், அரசின் நிலைபாட்டை தெரிவிக்க வேண்டும் என தலைமைச் செயலாளருக்கு உத்தரவிட்டு, விசாரணையை 6 வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.

அச்சத்தை போக்க முடியாது
முன்னதாக கடந்த அக்டோபர் 7ம் தேதி வழக்கு ஒன்றில் உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றம், தமிழகம் முழுவதும் பொது இடங்கள், நெடுஞ்சாலைகள் உள்ளிட்ட இடங்களில் உள்ள சிலைகளை 3 மாதங்களில் அடையாளம் கண்டு அகற்ற வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. பொது இடங்கள்,சாலைகளில் சிலைகள் வைப்பதை கட்டுக்குள் கொண்டுவர வேண்டும் இல்லையென்றால் மக்கள் மனதில் தற்போது நிலவும் அச்சத்தை போக்க முடியாது என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.

வசூலிக்க வேண்டும்
மேலும் தமிழகத்தில் தலைவர் பூங்கா உருவாக்கி சாலைகள் மற்றும் பொது இடங்களில் இருக்கும் தலைவர் சிலைகளை பூங்காவில் வைத்து பராமரிக்க வேண்டும் என உத்தரவிட்ட உயர்நீதிமன்றம், சிலைகள் பராமரிப்பதற்கான செலவுகளை சிலை வைக்க அனுமதி பெற்றவர்களிடம் வசூலிக்க வேண்டும் எனவும் சிலைகள் பராமரிப்பு தொகை செலுத்தாதவர்களிடம் இருந்து, அத்தொகையை வசூலிக்க சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டது. மேலும் இந்த உத்தரவுகளை அமல்படுத்தியது தொடர்பாக 6 மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்யவும் தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.












Click it and Unblock the Notifications