பள்ளி, கல்லூரி அருகே ஸ்டேஷனரி, ஸ்நாக்ஸ் கடை தவிர வேறு எதுவும் இருக்கக்கூடாது.. சென்னை ஐகோர்ட் அதிரடி
சென்னை: பள்ளி மற்றும் கல்லூரிகளில் இருந்து 100 மீட்டருக்குள் ஸ்டேஷனரி மற்றும் தின்பண்ட கடைகள் தவிர, வேறு எந்த கடைகளும் இருக்கக் கூடாது எனவும், போதைப் பொருளைக் கட்டுப்படுத்துவதில் காவல் துறையினரின் நடவடிக்கைகளை மேற்பார்வையிட போதை பொருள் தடுப்பு அதிகாரி ஒருவரையும், சிபிஐ அதிகாரி ஒருவரையும், அரசு அதிகாரிகள் அடங்கிய சிறப்பு கண்காணிப்புக் குழுவை அமைக்க மத்திய, மாநில அரசுகளுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
சென்னையில் பெரும்பாக்கம், துரைப்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தக் கோரியும், போதைப் பொருட்கள் புழக்கத்தை கட்டுப்படுத்த கோரியும் பெண்ணுரிமை இயக்கம் சார்பில் தொடரப்பட்ட வழக்கு, நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார் மற்றும் பி.பி. பாலாஜி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது போதைப்பொருட்கள் தடுப்பு சட்டவிதிகளை நடைமுறைப்படுத்தி, போதை பொருட்கள் புழக்கத்தை கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு அரசின் உள்துறை இணை செயலாளர் தரப்பில் அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன் ஆஜராகி சென்னை உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.
அதில், போதைப் பொருட்கள் விற்பனையை தடுக்க ஏடிஜிபி பதவியில் உள்ள அதிகாரியின் கீழ் போதைப்பொருட்கள் தடுப்பு அமலாக்க பிரிவும், போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவும் இணைந்து ஒரே அணியாக செயல்பட வேண்டும் என்று டிஜிபி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதில், காவல்துறையில் பல்வேறு பதவிகளில் உள்ள 2100 பேர் மாநில அளவிலான போதைப் பொருள் தடை அமலாக்கப்பிரிவிலும், மாவட்ட மற்றும் நகரங்களில் நூண்ணறிவு பிரிவிலும் விசாரணை குழுக்களாக செயல்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாராயம் காய்ச்சி விற்பனை செய்வது, கள்ளச்சாரயம் எடுத்து செல்வது போன்றவற்றைக் கட்டுப்படுத்த 101 போதைப்பொருள் தடை அமலாக்கப் பிரிவு ஏற்கனவே செயல்பட்டு வருவதாகவும், அதில் கூடுதல் காவல் பணியாளர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்ற உத்தரவின் படி மாநில அளவிலான உயர் மட்ட சிறப்புப் பிரிவு, மாவட்ட மற்றும் நகர அளவிலான உயர் மட்ட சிறப்பு பிரிவு, தாலுகா அளவிலான உயர் மட்ட சிறப்பு பிரிவு மற்றும் சிறப்பு புலனாய்வு குழுக்கள் போதைப்பொருட்கள் புழக்கத்தை கட்டுப்படுத்த அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
மாவட்ட அளவிலான உயர்மட்ட சிறப்புப்பிரிவின் தலைமையகத்தில் கூடுதல் எஸ்.பி ஒருவர், டிஎஸ்பி ஒருவர், ஆய்வாளர் 2, உதவி ஆய்வாளர் 4 பேர், மற்ற பதவியில் உள்ளவர்கள் 20 பேர் என மொத்தமாக 28 பேர் பணியாற்றுவார்கள், இதுமட்டுமல்லாமல் 9 நகரங்கள் மற்றும் 38 மாவட்ட அளவிலான உயர்மட்ட சிறப்பு பிரிவில் மொத்தமாக 35 ஏடிஎஸ்பிக்களும், டிஎஸ்பிகளும், 82 ஆய்வாளர்களும்,79 உதவி ஆய்வாளர்கள், 1267 மற்ற பதவியில் இருப்பவர்கள் என மொத்தம் 1465 பேர் பணியாற்றவார்கள். இது போக 14 மாவட்டங்களில் சிறப்பு புலனாய்வு பிரிவில் மொத்தமாக 144 காவல்துறை அதிகாரிகள் போதை பொருட்கள் புழக்கத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டில் மட்டும் 4530 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, 296 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 42 கடலோர காவல்நிலையங்கள் மூலம் குமரி முதல் சென்னை வரை 1000கிமீ தூரத்திற்கு போதைப்பொருட்கள் நடமாட்டத்தை 24 அதி நவீன படகுகள் மூலம் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
பள்ளி கல்லூரி மாணவ மாணவியர், இளைஞர்கள் போதை பொருட்களுக்கு அடிமையாவதை தடுக்க தமிழக அரசு “எனக்கு வேண்டாம்” லோகோவையும், அதன் போதை தடுப்பு டோல் ப்ரி உதவி எண் 10581 அறிவித்திருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இது போக மாதம் ஒரு முறை மாவட்ட ஆட்சியர் தலைமையில் போதை பொருட்கள் ஒழிப்பு தொடர்பாக ஒருங்கிணைப்பு கூட்டங்களும் நடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை பதிவு செய்த நீதிபதி, பள்ளி மற்றும் கல்லூரிகளில் இருந்து 100 மீட்டருக்குள் ஸ்டேஷனரி மற்றும் தின்பண்ட கடைகள் தவிர, வேறு எந்த கடைகளும் இருக்கக் கூடாது எனவும், போதைப் பொருளைக் கட்டுப்படுத்துவதில் காவல் துறையினரின் நடவடிக்கைகளை மேற்பார்வையிட போதை பொருள் தடுப்பு அதிகாரி ஒருவரையும், சிபிஐ அதிகாரி ஒருவரையும், அரசு அதிகாரிகள் அடங்கிய சிறப்பு கண்காணிப்புக் குழுவை அமைக்க மத்திய, மாநில அரசுகளுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும், சிறப்பு கண்காணிப்பு குழுவில் இடம்பெற உள்ள அதிகாரிகளின் விவரங்களை சீலிட்ட கவரில் தாக்கல் செய்ய மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை 21 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.












Click it and Unblock the Notifications