காவல் துறை உயரதிகாரிகள் வீட்டில் ஆர்டர்லியே இல்லையா? நம்ப முடியலையே! நீதிபதிகள் கேள்வி
சென்னை: தமிழகத்தில் காவல் துறை அதிகாரிகளின் வீடுகளில் ஆர்டர்லிகள் இல்லை என்பதை ஏற்க முடியவில்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் காவல் துறை அதிகாரிகள் வீட்டில் ஆர்டர்லிகள் வைக்கக் கூடாது என டிஜிபி சுற்றறிக்கைக்கு பாராட்டும் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் அரசுத் துறை உயர் அதிகாரிகளின் வீடுகளில் தூய்மைப் பணி, தோட்டப் பணி மற்றும் இதர வீட்டு வேலைகளில் கீழ்நிலை பணியாளர்களை ஈடுபடுத்தும் 'ஆர்டர்லி' முறை, பல்வேறு துறைகளில் நடைமுறையில் இருந்து வந்தது.

இந்த நிலையில் காவல் துறையில் ஆர்டர்லி முறையை ஒழிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் 2022 ஆம் ஆண்டு உத்தரவிட்டது. இந்த உத்தரவை அதிகாரிகள் முழுமையாக அமல்படுத்தவில்லை என நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம் , சி.குமரப்பன் அமர்வு குற்றம்சாட்டியிருந்தது.
இந்த நிலையில் இந்த வழக்கு விசாரணையின் போது மாநில அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆஜரானார். அவர் தமிழக டிஜிபி சார்பில் அறிக்கை தாக்கல் செய்தார்.
தமிழகத்தில் தற்போது பணியில் உள்ள அல்லது ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரிகளின் வீடுகளில் ஒருவர் கூட ஆர்டர்லியாக இல்லை என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இது ஆச்சரியமளிப்பதாக நீதிபதிகள் கூறினர்.
அதற்கு தலைமை வழக்கறிஞர், "ஆம் இதுவரை ஒருவர் கூட ஆர்டர்லியாக இல்லை. ஒரு வேளை யாராவது பணியில் இருப்பதாக புகார் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தார்.
அப்போது நீதிபதிகள் கூறுகையில், தமிழக சிறைத் துறை போலவே காவல் துறையிலும் ஆர்டர்லி முறை முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும். சக ஊழியரை ஆர்டர்லியாக வீட்டு வேலை செய்ய பயன்படுத்துவது சட்டப்படி குற்றம்.
அது போல் பணியில் இருப்பதாக கூறிவிட்டு தனிப்பட்ட வேலைகளில் ஈடுபடும் போலீஸாரையும் போலீஸ் அதிகாரிகளையும் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக என்ன நடைமுறை பின்பற்றப்படுகிறது என்பது குறித்து இன்று தெரிவிக்க வேண்டும் என கூறி நீதிபதிகள் விசாரணையை ஒத்தி வைத்னர்.
அப்போது "யாரையும் ஆர்டர்லியாக பயன்படுத்தக் கூடாது" என சுற்றறிக்கை அனுப்பப்பட்டதாக டிஜிபி தெரிவித்தார். அப்போது "தமிழகத்தில் காவல் துறை அதிகாரிகளின் வீடுகளில் ஆர்டர்லிகள் இல்லை என்பதை ஏற்க முடியவில்லை" என நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும் டிஜிபிக்கு பாராட்டையும் தெரிவித்தனர். இந்த வழக்கு ஜனவரி 8ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications