கொல்லப்பட்ட சுவாதியின் பெற்றோர் ரூ.3 கோடி இழப்பீடு கோரிய வழக்கு தள்ளுபடி- சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை: சென்னை நுங்கம்பாக்கம் ரயில்நிலையத்தில் கொலை செய்யப்பட்ட சுவாதியின் பெற்றோர் 3 கோடி ரூபாய் இழப்பீடு கோரிய வழக்கு தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
சென்னை நுங்கம்பாக்கம் ரயில்நிலையத்தில் சுவாதி (ஸ்வாதி) என்ற இளம்பெண் கடந்த 2016 ம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழகத்தில் மர்மம் விலகாத கொலை வழக்குகளில் சுவாதி கேஸும் ஒன்று.
புதுசா வெளியான பகீர் ஆதாரம்.. சுவாதி கொலை வழக்கில் கைதான ராம்குமார் கொல்லப்பட்டாரா? கிளம்பிய கேள்வி
சுவாதி கொலையால் பரபரப்பு
சுவாதியை இஸ்லாமிய பயங்கரவாதிகள் படுகொலை செய்ததாக ஒய்.ஜி.மகேந்திரன் உள்ளிட்டோர் சமூக வலைதளங்களில் முதலில் தெரிவித்தனர். பின்னர் இந்த கோணம் திடீரென மறைந்தது. அதேநேரத்தில் திருநெல்வேலி அருகே குக்கிராமத்தில் ராம்குமார் என்ற இளைஞர், சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டார். அவர் கைது செய்யப்பட்ட போதே கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றதாக கூறப்பட்டது.
ராம்குமார் மர்ம மரணம்
பின்னர் ராம்குமார் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கு குறித்து பல்வேறு கேள்விகள், சந்தேகங்கள் மிக தீவிரமாக எழுந்து கொண்டே இருந்தன. இந்நிலையில் திடீரென யாருமே எதிர்பாராத வகையில் சிறைக்குள் ராம்குமார் மின்சார வயரை கடித்து தற்கொலை செய்துகொண்டார் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இது மிகப் பெரும் சந்தேகங்களையும் அதிர்வலைகளையும் ஏற்படுத்தியது. அத்துடன் சுவாதி படுகொலை ஓயவில்லை. இப்படுகொலை தொடர்பாக திரைப்படங்களும் கூட எடுக்கப்பட்ட்டன.
இழப்பீடு கோரி வழக்கு
இந்நிலையில் தங்களின் மகள் சுவாதி இறப்பிற்கு உரிய இழப்பீடு வழங்க கோரி சுவாதியின் தாய் ரங்கநாயகி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், ரயில்வே நிர்வாகம் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படையின் அலட்சியம் காரணமாகவே சுவாதி கொலை செய்யப்பட்டார். எனவே ரயில்வே நிர்வாகம் தரப்பில் இழப்பீடாக 3 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.
பெற்றோர் மனு தள்ளுபடி
இந்த வழக்கு நீதிபதி ஆர்.சுப்ரமணியன் முன்பு விசாரணைக்கு வந்தது, அப்போது ரயில்வே துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜய் ஆனந்த், பயணிகளுக்கு ரயில்வே நிர்வாகம் உரிய பாதுகாப்பு வழங்கி வருகிறது என்றும், சுவாதி கொலை திட்டமிட்ட சம்பவம் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து இழப்பீடு கோரி சிவில் வழக்கு தாக்கல் செய்யலாம் என்று அறிவுறுத்திய நீதிபதி, இழப்பீடு கோரிய சுவாதியின் பெற்றோர் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.