ஓபிசி தேர்வர்களுக்கு ஏற்பட்ட கதி! விண்ணப்ப காலத்தை நீட்டிக்க மறுத்த எய்ம்ஸ்.. சு.வெங்கடேசன் ஆதங்கம்!
சென்னை: ஓபிசி தேர்வர்களுக்கு உள்ள சிரமத்தை சுட்டிக்காட்டியும், INI CET தேர்வுக்கான விண்ணப்ப காலத்தை நீட்டிக்க எய்ம்ஸ் மறுப்பது சரியல்ல என மதுரை எம்.பி சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் ஓபிசி சாதி சான்றிதழ் வழங்குவதில் உள்ள சிரமத்தை சுட்டிக்காட்டி, INI CET தேர்வுகளுக்கான விண்ணப்பத்திற்கு கூடுதல் அவகாசம் கேட்டு எய்ம்ஸ் தேர்வுக் கட்டுப்பாட்டு ஆணையருக்கு மதுரை எம்.பி சு.வெங்கடேசன் கடிதம் எழுதியிருந்தார். அதற்கு பதிலளித்துள்ள எய்ம்ஸ், தேர்வு அட்டவணையை நீட்டிக்க இயலாது எனத் தெரிவித்துள்ளது.

இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள சு.வெங்கடேசன் எம்.பி, ஓபிசி தேர்வர்களுக்கு விண்ணப்ப கால நீட்டிப்பு மறுப்பு சரியல்ல என தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "INI - CET தேர்வுகளுக்கான விண்ணப்பத்திற்கு கூடுதல் அவகாசம் கேட்டு கடிதம் 12.04.2023 அன்று "எய்ம்ஸ்" தேர்வுக் கட்டுப்பாட்டு ஆணையருக்கு கடிதம் எழுதி இருந்தேன். தமிழ்நாட்டில் ஓபிசி சாதி சான்றிதழ் வழங்குவதில் உள்ள கால அளவு தேர்வர்களுக்கு சிரமத்தை உண்டு பண்ணுவதை குறிப்பிட்டு இருந்தேன்.
ஓபிசி சாதி சான்றிதழில் உள்ள வருமான வரம்பு (Creamy layer) காரணமாக ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் 1 லிருந்தே வழங்கப்படுவதால் தேதி நீட்டிப்பு கேட்டு இருந்தேன். ஏப்ரல் 10 அன்று கடைசித் தேதி இருந்ததால் பல விண்ணப்பதாரர்கள் சிரமப்பட்டார்கள். இதற்கு பதில் அளித்துள்ள "எய்ம்ஸ்" தேர்வுப் புல இணை டீன் டாக்டர் நவீன் கே. விக்ரம் 27.06.2023 தேதியிட்ட கடிதம் மூலம் பதில் எழுதியுள்ளார்.
அதில், 1) ஏப்ரல் 10, 2023 கடைசித் தேதி முடிந்த பின்னரே நாடாளுமன்ற உறுப்பினரின் கடிதம் கிடைத்தது.
2) உச்ச நீதிமன்றம் சில காலக் கெடுகளை விதித்துள்ளதால் தேர்வு அட்டவணையை நீட்டிக்க இயலாது.
3) மொத்தம் விண்ணப்பித்தவர்கள் 59520 ஓபிசி விண்ணப்பதாரர்கள் 17835 மொத்தம் தேர்வு பெற்றவர்கள் 31432 ஓ.பி.சி தேர்வு பெற்றவர்கள் 10921. என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பதில் ஏற்கத்தக்கது அல்ல. 1) எனது கடிதம் தாமதம் என்பது காரணமாக இருக்க இயலாது. எனது கவனத்திற்கு ஒரு பிரச்சினை கொண்டு வரப்படும் போதுதான் அதை எடுக்க முடியும். மேலும் விண்ணப்ப தேதி முடிந்து இரண்டாவது நாளே எழுதினேன். அதற்கு பிறகு ஒரு வாரம் நீட்டிப்பு தந்திருந்தால் கூட தேர்வுக்கு முன்பு 20 நாள் அவகாசம் இருந்திருக்கும்.
2) இது தனிப்பட்ட தேர்வர்களுக்கு கேட்கப்பட்ட சலுகை அல்ல. ஒரு சமூகக் குழுவுக்கு ஏற்படுகிற நியாயமான பிரச்சினைக்கு கேட்கப்பட்ட கால நீட்டிப்பு. நீதிமன்றம் முன்பாக விளக்கம் அளிக்க முடியும்.
3) ஓ.பி.சி தேர்வு பெற்றவர்கள் எண்ணிக்கையை தருவது இட ஒதுக்கீடு நிரப்பப்பட்டு விட்டது என்ற சித்திரத்தை தருகிற நோக்கத்தை கொண்டது. இது இட ஒதுக்கீட்டின் சாரம் குறித்த தவறான புரிதல். சில விண்ணப்பங்கள் திறந்த போட்டியில் கூட இடம் பெற்றிருக்கிற வாய்ப்பு உண்டு. இன்னொன்று விண்ணப்பிக்க இயலாதவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுகிற பிரச்சனை இது.
ஆகவே எய்ம்ஸ் இந்த காரணங்களை கருத்தில் கொண்டு எதிர் காலத்திலாவது அட்டவணையை உரிய வகையில் தயாரிக்க வேண்டும் என்று மீண்டும் கடிதம் எழுதியுள்ளேன்" என சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications