பாஜகவை தோற்கடிப்பதே இலக்கு.. திமுக கூட்டணிக்குதான் ஓட்டு.. மதுரை ஜமாஅத் ஒருமித்த முடிவு
சென்னை: சிறுபான்மையினரின் நலனைக் காப்பதற்காக திமுக கூட்டணிக்கு இந்த சட்டசபை தேர்தலில் ஆதரவு வழங்குவது என்று மதுரை முஸ்லீம் ஜமாஅத் முடிவு செய்துள்ளது.
திமுக தலைமையில், காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் ஓர் அணியாக போட்டியிடுகின்றன.
அதிமுக தலைமையில் பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகள் ஓர் அணியாகவும் இந்த சட்டசபை தேர்தலில் போட்டியை சந்திக்கின்றன.

வேட்புமனு பரிசீலனை
அனைத்து கட்சியும் தங்கள் வேட்பாளர்களை அறிவித்துள்ளது. மார்ச் 20 ஆம் தேதியுடன் வேட்புமனு பரிசீலனை நிறைவடைந்துவிட்டது. அனைத்து தொகுதிகளிலும் பெரிய கட்சிகளின் வேட்பாளர்கள் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டு உள்ளன. சென்னை துறைமுகம் தொகுதியில் பாஜக வேட்பாளர் வேட்பு மனு மீதான புகார் பற்றி விசாரித்து ஞாயிற்றுக்கிழமை முடிவு எடுப்பதாக தேர்தல் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

ஜமாஅத் கூட்டம்
இந்த நிலையில் மதுரை ஜமாஅத் கூட்டம், மீனா நூறுதீன் மசூதியில் நடைபெற்றது. மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார தொகுதிகளில் போட்டியிடக் கூடிய திமுக மற்றும் அதன் தோழமை கட்சிகளின் வேட்பாளர்களை ஜமாஅத் உறுப்பினர்கள் மசூதிக்கு அழைத்திருந்தனர். அவர்களும் வருகை தந்தனர். திமுக வேட்பாளர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், தளபதி, சின்னம்மாள் ஆகியோர் அங்கு வருகை தந்திருந்தனர்.

சிறுபான்மையினர் பாதுகாப்பு
மதிமுக வேட்பாளர் பூமிநாதன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் பொன்னுத்தாய் ஆகியோரும் வருகை தந்து சிறுபான்மையினருக்கு தங்களது கூட்டணி ஆதரவாக இருப்பது தெரிவித்தனர். மேலும் தாங்கள் ஆட்சிக்கு வரும்போது சிறுபான்மையினருக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என்று உறுதியளித்தனர்.

ஒரே மாதிரி முடிவு
இந்த கூட்டத்தில் உரை நிகழ்த்திய மதுரை மாவட்ட முஸ்லிம் இயக்க ஜமாஅத் செயலாளர் காஜா மொய்தீன் பேசும்போது, திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு ஓட்டு போடுவது என்று ஜமாஅத் நிர்வாகிகள் ஒன்றாக சேர்ந்து முடிவெடுத்துள்ளோம். இது ஒருமித்த கருத்து. மதுரையில் 163 ஜமாத் உள்ளன . அனைவரும் ஒருமித்த குரலில் திமுக கூட்டணிக்கு ஆதரவளிக்க முடிவெடுத்துள்ளோம்.

பாஜகதான் இலக்கு
பாஜகவை தோற்கடிக்க வேண்டும் என்பதுதான் நமது இலக்கு. நம்மில் பலரும் பல கட்சிகளை சேர்ந்தவர்களாக இருப்போம். பல பல மதங்களைச் சேர்ந்தவர்களாக கூட இருப்போம். ஆனால் மதசார்பற்ற திமுக கூட்டணிக்கு ஆதரவு அளிப்பது நமது கடமை . சிறுபான்மையினரின் உரிமைகளை பாதுகாக்க இதுதான் அவசியம் என்று அவர் தெரிவித்தார்.

பாஜக கூட்டணி
பேரையூர் பகுதியை சேர்ந்த ஜமாஅத் நிர்வாகி ஒருவர் இந்த கூட்டத்தில் பேசும்போது, அதிமுகவின் முஸ்லீம் பிரிவில் நான் 30 வருடங்களுக்கு மேலாக இருக்கிறேன். எம்ஜிஆர் மீது மிகுந்த பாசம் கொண்டவராக இருந்தேன். அதிமுகவுக்கு எதிராக என்றுமே நான் வாக்களித்தது கிடையாது. ஆனால் இப்போது அவர்கள் பாஜகவுடன் கூட்டணி அமைத்துக் கொண்டு இருப்பதால் திமுக கூட்டணிக்கு ஆதரவளிக்க முடிவு செய்துள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications