அது புரோட்டோகால்.. நான்தான் தப்பா புரிஞ்கிட்டேன்.. பிடிஆர் வெளிநாட்டில் படிச்சவர்.. மதுரை சரவணன்
சென்னை: வெளிநாட்டில் படித்த அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசிய தமிழ் வார்த்தையை நான் தவறாக புரிந்து கொண்டேன் என மதுரை மாவட்ட பாஜக தலைவர் சரவணன் தெரிவித்துள்ளார்.
Recommended Video
ஜம்மு காஷ்மீரில் ராஜோரியில் வீரமரணமடைந்த மதுரை டி புதுப்பட்டி லட்சுமணனின் உடலுக்கு அரசு சார்பில் அஞ்சலி செலுத்த அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் காரில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது பாஜகவினர் சிலர் பிடிஆரின் கார் மீது காலணியை வீசினர். இது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை கைது செய்ய வேண்டும் என திமுகவினர் ஆங்காங்கே சாலை மறியல் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.

நள்ளிரவு
இந்த நிலையில் நேற்றைய தினம் நள்ளிரவில் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் வீட்டுக்கு சரவணன் சென்றார். அங்கு பிடிஆரிடம் நடந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்டார். இதையடுத்து செய்தியாளர்களிடம் சரவணன் பேசுகையில், நாங்கள் வீரமரணமடைந்த லட்சுமணனின் உடலுக்கு அஞ்சலி செலுத்த விமான நிலையம் சென்றோம்.

அமைச்சர் பிடிஆர் பழனிவேல்
அப்போது அங்கு வந்த அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், எங்களை பார்த்து,அவர்களுக்கு என்ன தகுதி இருக்கு, இங்கு ஏன் அஞ்சலி செலுத்த வந்தார்கள் என கேட்டார். இது எங்கள் காதுகளில் விழுந்தது. அப்போது என்ன தகுதி இருக்கு என கேட்டது என்னை தனிப்பட்ட முறையில் விமர்சித்ததாக தெரிந்தது.

விமர்சனம்
அதனால்தான் நானும் அவர் மீது விமர்சனத்தை வைத்தேன். ஆனால் பிறகு நன்கு யோசித்த போதுதான் தெரிந்தது, பிடிஆர் கூறியதை நான் தவறாக புரிந்து கொண்டுவிட்டேன். அவர் வெளிநாட்டில் படித்தவர், என்ன புரோட்டோகால் என கேட்க வந்த பிடிஆர், தமிழில் தகுதி என்ற வார்த்தையை பயன்படுத்தியிருக்கலாம் என புரிந்து கொண்டேன்.

தொடர மாட்டேன்
இனியும் பாஜகவில் தொடர மாட்டேன், மத அரசியல், வெறுப்பு அரசியல்தான் இங்கு உள்ளது. மருத்துவராக உள்ள நான் அனைவருக்கும் பொதுவானவராக இருத்தல் வேண்டும். இவர்களின் மத அரசியலுக்கு நான் துணை போககூடாது. சுயமரியாதைதான் முக்கியம் என தெரிவித்தார் சரவணன்.












Click it and Unblock the Notifications