"பெண்களுக்கு மாதம் ரூ.1000!" சென்னை மக்களே கவனம்.. மேயர் பிரியா சொன்ன முக்கிய தகவல்
சென்னை: மகளிர் உரிமை தொகை திட்டத்தைச் செயல்படுத்தத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், இது குறித்து மேயர் பிரியா சில முக்கிய தகவல்களைத் தெரிவித்துள்ளார்.
கடந்த சட்டசபைத் தேர்தலில் திமுக குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் உரிமை தொகை வழங்கப்படும் என்ற வாக்குறுதியை முன்வைத்தது. இது அப்போதே மக்களிடையே மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது.
திமுக ஆட்சி அமைந்தது முதலே பலரும் இது குறித்து கேள்வி எழுப்பிய நிலையில், வரும் செப். மாதம் முதல் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று கடந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.

மகளிர் உரிமை தொகை: இதற்கிடையே இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவது குறித்து சில நாட்களுக்கு முன்பு முதல்வர் ஸ்டாலின் கலெக்டர்கள் உடன் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினர். இதில் அவர் சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். அதில் இந்தத் திட்டத்திற்குக் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். மேலும், தகுதியான பயனாளிகள் இத்திட்டத்தில் பயனடைவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
அதைத் தொடர்ந்து யாரெல்லாம் இத்திட்டத்திற்குத் தகுதி பெறுவார்கள், யாரெல்லாம் தகுதி பெற மாட்டார்கள் என்பது குறித்த விரிவான அறிவிப்பு வெளியானது. இதற்கான விண்ணப்ப முகாம் ரேஷன் கடைகளில் நடத்தப்படும் என்றும் கூறப்பட்டிருந்தது. இதற்கிடையே நேற்றைய தினம் கிருஷ்ணகிரியில் பேசிய அமைச்சர் சக்கரபாணி, "மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் 21 வயது நிரம்பிய பெண்களுக்கு வரும் 20 முதல் ரேசன் கடை பணியாளர், வீடுகளுக்கே சென்று விண்ணப்பப் படிவத்தை வழங்க உள்ளார்கள்.
இதில் விண்ணப்பிக்கும் போது பெண்களின் செல்போன் எண்ணுக்கு ஒடிபி ஒன்று அனுப்பப்படும். இதனால் பெண்கள் தங்கள் மொபைலை உடன் எடுத்துச் செல்ல வேண்டும். மேலும், விண்ணப்பிக்கும் போது, ஆதார், ரேஷன் அட்டை, பாஸ்புக், மின்சார கட்டண ரசீது ஆகியவற்றை கண்டிப்பாக எடுத்துச் செல்ல வேண்டும்" எனக் கூறியிருந்தார்.
மேயர் பிரியா: இதற்கிடையே மகளிர் உரிமை தொகை விண்ணப்பம் தொடர்பாகச் சென்னை மேயர் பிரியா சில முக்கிய தகவல்களைத் தெரிவித்துள்ளார். சென்னையில் எப்போது முதல் கலைஞர் உரிமை தொகைக்கான விண்ணப்பிக்கலாம் என்பது குறித்து அவர் தகவல்களைப் பகிர்ந்துள்ளார். மகளிர் உரிமை தொகை விண்ணப்பம் செய்ய ஜூலை 24ஆம் தேதி முதல் முகாம் நடத்தப்படும் என்று மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.
அதாவது மகளிர் உரிமை தொகை திட்டத்திற்குத் தகுதியான பெண்கள் விண்ணப்பிக்க ஏதுவாக சென்னையில் வரும் 24ஆம் தேதி முதல் சென்னை மாநகராட்சி சார்பில் முகாம் நடத்தப்பட இருக்கிறது என்பதையே மேயர் பிரியா தெரிவித்துள்ளார். இதில் விண்ணப்பிப்பது தொடர்பாக பல்வேறு நிபந்தனைகளும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நிபந்தனைகள்: இத்திட்டத்தில் ஒரு குடும்ப அட்டைக்கு ஒருவர் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். ரூ. 2.5 லட்சத்திற்கும் மேல் ஆண்டு வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு இது கிடைக்காது. மத்திய மற்றும் மாநில அரசு நிறுவனங்களில் பணிபுரிவோர் இதில் தகுதி பெற மாட்டார்கள். சொந்த பயன்பாட்டிற்காக கார், ஜீப், டிராக்டர் உள்ளிட்ட 4 சக்கர வாகனங்கள் வைத்திருப்போரும் விண்ணப்பிக்க முடியாது.
ஆண்டுக்கு 50 லட்சத்திற்கும் மேல் விற்பனை செய்து ஜிஎஸ்டி செலுத்தும் தொழில் நிறுவனங்களின் உரிமையாளர்கள் இதில் விண்ணப்பிக்க முடியாது. ஏற்கனவே முதியோர் ஓய்வூதியம், விதவை ஓய்வூதியம், அமைப்பு சாரா நல வாரிய ஓய்வூதியம் போன்ற சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியம் பெறுவோர், அரசிடம் இருந்து பென்சன் பெறும் குடும்பங்கள் இந்தத் திட்டத்திற்குத் தகுதி பெற மாட்டார்கள்.
3600 யூனிட் மேல் மின்சாரம் பயன்படுத்தும் குடும்பத்தில் இருக்கும் குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படாது. 5 ஏக்கருக்கும் குறைவான நிலத்தை வைத்திருக்க வேண்டும்.












Click it and Unblock the Notifications