சூப்பர் நியூஸ்.. குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000.. மார்ச் 1 இல் தொடக்கமா? முன்னோட்டம் தயாராமே!
சென்னை: குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ 1000 வழங்குவது எப்போது என்பது குறித்த உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகியுள்ளன.
எந்த தேர்தலாக இருந்தாலும் தேர்தல் அறிக்கைதான் எப்போதுமே கதாநாயகன். திமுகவின் இலவச கலர் டிவி குறித்த தேர்தல் அறிக்கையும் திட்டமும் பெரும் வரவேற்பை கொடுத்தது. இந்த தேர்தல் அறிக்கையால் கடந்த 2006 ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்தது.
இதையடுத்து 2011 ஆம் ஆண்டு தேர்தலின் போது அதிமுக தன்னுடைய தேர்தல் அறிக்கையில் இலவச மிக்ஸி, கிரைண்டர், ஃபேன் திட்டத்தை அறிவித்தது. அந்த தேர்தலில் அமோக ஆதரவை அதிமுக பெற்றது. எனவே தேர்தல் அறிக்கை ஒரு கட்சியின் 5 ஆண்டுக்கான பட்ஜெட் மாதிரி என சொல்லலாம்.
பொங்கல் 2023: ரூ 1000 பரிசுத் தொகை பெற வங்கிக் கணக்கு கட்டாயம்.. தமிழக அரசு புதிய உத்தரவு
வாக்குறுதிகள்
அந்த வகையில் கடந்த 2021 ஆம் ஆண்டு திமுக 500-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை அளித்து தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. அதில் முக்கியமானது குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ 1000 வழங்குவது ஆகும். இந்த திட்டம் இல்லத்தரசிகளிடம் பெரும் வரவேற்பை பெற்றது. திமுக ஆட்சிக்கு வந்ததும் நகர பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம், கொரேனா நிவாரணம் ரூ 4000, ஆவின் பால் விலை குறைப்பு உள்ளிட்ட திட்டங்களுக்கு முதல் கையெழுத்தை முதல்வர் ஸ்டாலின் போட்டார்.
மகளிருக்கு இலவச பேருந்து
இந்த நகர பேருந்துகளில் மகளிருக்கு இலவசம் என்ற திட்டத்தால் பெண்களுக்கு மாதம்தோறும் ரூ 1000 வரை குடும்ப பட்ஜெட்டில் மிச்சமாவதாக பெருமிதம் தெரிவித்திருந்தனர். அது போல் மாதந்தோறும் ரூ 1000 திட்டம் வழங்கினால் மாதந்தோறும் ரூ 2000 குடும்ப பட்ஜெட்டில் இருக்கும் என பெண்கள் இரட்டிப்பு மகிழ்ச்சி கொண்டிருந்தனர்.
திமுக ஆட்சி
இந்த நிலையில் திமுக ஆட்சி பொறுப்பேற்று ஓராண்டுக்கு மேல் ஆகியும் அந்த 1000 ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் இன்னமும் தொடங்கப்படவில்லை. இது குறித்து அதிமுக, பாஜக, மநீம, பாமக உள்ளிட்ட கட்சிகள் கேள்வி எழுப்பியிருந்தன. தமிழக அரசின் நிதி நிலைமை சரியானதும் திட்டம் தொடங்கி வைக்கப்படும் என அரசு தரப்பில் கூறப்பட்டிருந்தது.
ரூ 1000 திட்டம்
இந்த நிலையில் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ 1000 திட்டம் ஒன்று முதல்வர் ஸ்டாலினின் பிறந்த நாளான மார்ச் 1 ஆம் தேதியோ அல்லது முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளான ஜூன் 3ஆம் தேதியோ தொடங்கி வைக்கப்படவுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. அதாவது பொங்கல் பரிசுத் தொகையை ரேஷன் கார்டுதாரர்களின் வங்கிக் கணக்கில் செலுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
வங்கிக் கணக்கு
வங்கிக் கணக்கு இல்லாத 1.40 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு கூட்டுறவு வங்கிகளில் இன்னும் ஒரு வாரத்திற்குள் வங்கிக் கணக்கை தொடங்க கூட்டுறவு துறை அதிகாரிகளுக்கு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சண்முகசுந்தரம் உத்தரவிட்டுள்ளார். எனவே பொங்கல் பண்டிகைக்கு ரூ 1000 தொகையானது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.
மாதம் ரூ 1000 உரிமைத் தொகை
இது குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ 1000 உரிமைத் தொகைக்கான முன்னோட்டமாக பார்க்கப்படுகிறது. அதாவது பொங்கல் பண்டிகை முடிந்தவுடன் உரிமைத் தொகை திட்டத்தை தொடங்க அரசு முடிவு செய்துள்ளதாம். ஒன்று மார்ச் 1 ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளன்றோ இல்லாவிட்டால் ஜூன் 3 இல் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளன்றோ வழங்கப்படும் என தெரிகிறது.
40 தொகுதிகளும் நமதே
2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளும் நமதே என்ற திட்டத்துடன் திமுக வியூகம் வகுத்து வருகிறது. கடந்த 2019 ஆம் ஆண்டை போல் திமுக கூட்டணியின் அமோக வெற்றியை தடுக்க அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள் திட்டமிட்டு வருகின்றன. எனவே திமுக தேர்தல் அறிக்கையை நிறைவேற்றவில்லை என்ற அவப்பெயர் அரசுக்கு கிடைக்காமல் இருக்க அடுத்த ஆண்டு மார்ச் அல்லது ஜூன் மாதம் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ 1000 திட்டம் வழங்கலாம் என தெரிகிறது. இந்த தொகையானது ரேஷன்கார்டுதாரர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என தெரிகிறது.