கமல்ஹாசன் தலைமையில் மநீம நிர்வாகிகள் கூட்டம்! ‘யூ டர்ன்’ அடித்த புள்ளிகள்! திமுகவுடன் கூட்டணி உறுதி?
சென்னை : மக்கள் நீதி மய்யம் கட்சி, திமுக கூட்டணிக்கு தயாராகி வருவதாகக் கூறப்படும் நிலையில், மக்கள் நீதி மய்யத்தின் அவசர நிர்வாகக் குழு, செயற்குழு மற்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் கமல்ஹாசன் தலைமையில் நாளை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், மீண்டும் அரசியல் பாதையில் பயணிக்கத் தொடங்கி இருக்கிறார். 2024 லோக்சபா தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைக்க தயாராகி விட்டதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, கட்சியை பலப்படுத்த வேண்டி இருப்பதால், அடுத்தகட்ட பணிகள் பற்றி கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்த இருக்கிறார் கமல்ஹாசன்.

மநீம கூட்டம்
இதுக்குறித்து மக்கள் நீதி மய்யம் துணை தலைவர்கள் மௌரியா, தங்கவேலு ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சில முக்கிய நிகழ்வுகள் குறித்து தெரிவிப்பதற்காக நமது தலைவர், நம்மவர் கமல் ஹாசன் தலைமையிலான அவசர நிர்வாகக் குழு, செயற்குழு மற்றும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் வரும் 18-ஆம் தேதி (ஞாயிற்றுக் கிழமை) மதியம் 12 மணி அளவில் நமது தலைமை அலுவலகத்தில் நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்வில் அனைத்து நிர்வாகக் குழு உறுப்பினர்கள், செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் தவறாது கலந்துகொள்ளவேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளனர்.

கமல்ஹாசன் அரசியல்
நடிகர் கமல்ஹாசன், திமுக, அதிமுகவுக்கு மாற்றாக ஒரு சக்தியை உருவாக்கும் நோக்கில் அரசியலில் அடியெடுத்து வைத்தார். முதன்முதலாக கமல்ஹாசனின் 'மக்கள் நீதி மய்யம்' 2019 நாடாளுமன்றத் தேர்தலைச் சந்தித்தது. அந்த தேர்தலில் மநீம 2.6% வாக்குகளைப் பெற்றது. சில தொகுதிகளில் 1 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளை மக்கள் நீதி மய்யம் பெற்றது.

கமல் தோல்வி
இதையடுத்து, 2021 தேர்தலில் ஐஜேகே உள்ளிட்ட கட்சிகளின் கூட்டணி அமைத்துத் தேர்தலைச் சந்தித்தார் கமல்ஹாசன். அந்த தேர்தலில் மக்கள் நீதி மய்யம் 2.6% வாக்கையே பெற்றது. கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனும், பாஜகவின் வானதி சீனிவாசனிடம் தோல்வியைத் தழுவினார். இதையடுத்து, மக்கள் நீதி மய்யத்தைச் சேர்ந்த பலர், மாற்றுக் கட்சிகளுக்குத் தாவினர்.

அடுத்த அதிரடி
கமல்ஹாசனும், அரசியலில் தீவிரமாகச் செயல்படுவதைக் கைவிட்டார். சினிமாவில் கூடுதல் கவனம் செலுத்தத் தொடங்கினார். இது கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்நிலையில், கடந்த சில மாதங்களாக மீண்டும் அரசியல் பாதையிலும் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளார் கமல்ஹாசன். வரும் 2024 லோக்சபா தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைக்க கமல்ஹாசன் தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது.

யூ-டர்ன் போடும் நிர்வாகிகள்
இதற்கிடையே, மக்கள் நீதி மய்யத்திலிருந்து விலகி, பாஜகவில் சேர்ந்து முக்கியமான பொறுப்புகளில் இருந்த நிர்வாகிகள் அங்கிருந்து விலகி, மீண்டும் மநீம-வில் சேர்ந்து வருகின்றனர். பாஜக பொருளாதார அணியின் மாநிலத் துணைத் தலைவராக இருந்த மதுரையைச் சேர்ந்த முனியசாமி, சமீபத்தில் கமல்ஹாசனைச் சந்தித்து மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்தார். மக்கள் நீதி மய்யம் கட்சியின் முன்னாள் நிறுவன பொதுச்செயலாளர் அருணாச்சலம், கமல்ஹாசனை நேற்று நேரில் சந்தித்து மீண்டும் அக்கட்சியில் இணைந்தார். அருணாச்சலம் 2020-ஆம் ஆண்டு மக்கள் நீதி மய்யத்தில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

திமுக உடன் நெருக்கம்
கடந்த சில மாதங்களாக திமுக இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினுடன் கூடுதல் நெருக்கம் காட்டி வருகிறார். உதயநிதி, கமல் தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்கவும் ஒப்புக் கொண்டிருந்தார். ஆனால், அமைச்சரானதால், அந்தப் படத்தில் நடிக்கப்போவதில்லை என முடிவு செய்துள்ளார். உதயநிதி மூலம் திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலினுடன் நெருக்கம் ஏற்படுத்தி வருகிறார். உதயநிதி பிறந்தநாளன்று 'அன்புத் தம்பி' என்று உதயநிதியை குறிப்பிட்டிருந்தார்.

கமல் கணக்கு
திமுகவை விமர்சிப்பதை கிட்டத்தட்ட கைவிட்டுவிட்ட கமல்ஹாசன், பாஜகவையும், தமிழக ஆளுநரையும் தொடர்ந்து விமர்சித்து வருகிறார். இதனால், மக்கள் நீதி மய்யம், திமுகவுடன் கூட்டணி அமைப்பது உறுதியாகிவிட்டது என்கிறார்கள். திமுக கூட்டணியில் இணைந்து, மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் ஒருவராவது நாடாளுமன்றத்திற்குச் சென்றுவிட வேண்டும் என கமல்ஹாசன் முடிவு செய்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

அடுத்தகட்ட பணிகள்
இந்நிலையில் தான் அக்கட்சியின் அவசர நிர்வாகக் குழு, செயற்குழு மற்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை நடைபெற இருக்கிறது. இந்தக் கூட்டத்தில், கட்சியின் தலைவர் கமல்ஹாசன், அடுத்தகட்ட கட்சிப் பணிகள் பற்றி கட்சி நிர்வாகிகளிடம் தெரிவிப்பார் என்றும், பொதுக்கூட்டங்கள், சுற்றுப் பயணங்களை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளைச் செய்ய அறிவுறுத்துவார் என்றும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications