சூப்பர் ணா! "ஜனநாயகன்" நாங்க சொன்னா கூட்டணியை விட்டு வெளியேற சொன்ன திமுக ஐடி விங்! மாணிக்கம் தாகூர்
சென்னை: ஜனநாயகனுக்கு ஆதரவாக காங்கிரஸ்காரர்கள் பேசினால் கூட்டணியில் இருந்து வெளியேற சொல்கிறார்கள் திமுக ஐடி விங் நிர்வாகிகள். தற்போது முதல்வரே பேசியிருக்கிறாரே என்ன செய்ய போகிறீர்கள் என காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஜனநாயகன் படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்கும் விவகாரத்தில் தணிக்கை வாரியம் தாமதப்படுத்தி வந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் ஹைகோர்ட்டுக்கு போன நிலையில் உடனடியாக U/A சான்றிதழ் வழங்க நீதிபதி ஆஷா உத்தரவிட்டிருந்தார்.

இந்த தீர்ப்பு வழங்கியதுமே தணிக்கை குழு உடனடியாக மேல்முறையீடு செய்தது. இந்த மனு தலைமை நீதிபதி ஸ்ரீவஸ்தவா, அருள் முருகன் ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள் படத் தயாரிப்பு நிறுவனத்தை கடுமையாக விமர்சித்திருந்தனர். மேலும் இந்த வழக்கின் விசாரணையை வரும் 21-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்ததால் படம் அதுவரை வெளியாக வாய்ப்பில்லை. இதனால் விஜய் ரசிகர்கள் வேதனையில் உள்ளனர்.
மத்திய அரசு அமலாக்கத் துறை, வருமான வரித்துறையை ஏவுவது போல் தணிக்கைத் துறையையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக கடும் விமர்சனங்கள் எழுந்தன. இந்த படத்திற்கு முதல் அரசியல் கட்சியாக காங்கிரஸ் ஆதரவு தந்தது.
காங்கிரஸை சேர்ந்த மாணிக்கம் தாகூர், ஜோதிமணி, கிரிஷ், பிரவீன் சக்கரவர்த்தி உள்ளிட்டோர் தணிக்கை குழுவை பிரதமர் மோடி இயக்குகிறார் என கடுமையாக விமர்சித்திருந்தனர்.
திமுக கூட்டணியில் இருந்து கொண்டு விஜய்க்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சியினர் பேசியதை அடுத்து அவர்களை கூட்டணியில் இருந்து வெளியேறுமாறு திமுகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவு சமூகவலைதளங்களில் ட்வீட்டுகளை வைரலாக்கியது.
இந்த நிலையில் நேற்றைய தினம் முதல்வர் ஸ்டாலின், #CBI, #ED, #IT வரிசையில் சென்சார் போர்டும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் புதிய ஆயுதமாக மாறியுள்ளது. கடுமையான கண்டனங்கள் என தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
இதை வரவேற்ற காங்கிரஸ் எம்பி ஜோதிமணி, "தமிழ்நாட்டின் மீது பாஜக நடத்துகிற எந்தவொரு தாக்குதலையும் நம் அரசியல் சார்புகளை, நம் கட்சிகளின் எல்லைகளைத் தாண்டி நாம் வலிமையோடு எதிர்க்க வேண்டும். அரசியல் என்பது அடிப்படையில் கொள்கை சார்ந்தது. நம் கட்சிகளை விட நமது மாநிலத்தின், மக்களின் நலனே முக்கியம். இது தான் எங்கள் நிலைப்பாடும்" என கூறியுள்ளார்.
அது போல் மாணிக்கம் தாகூர் தனது ட்விட்டர் பக்கத்தில் "சூப்பர் அண்ணன். இதை காங்கிரஸ்கார்கள் சொன்ன ஐடி விங் மேதைகள் எங்களை கூட்டணியை விட்டு வெளியேற வேண்டும் என கூறி வருகின்றனர். " என தெரிவித்திருந்தார்.












Click it and Unblock the Notifications