தகுதி-திறமை என்ற போலி வாதத்தால் மீண்டும் ஒரு உயிர் பலி... ஒன்றிய அரசு தான் பொறுப்பு -ஜவாஹிருல்லா
சென்னை: நீட் தேர்வு அச்சத்தால் தமிழகத்தில் மேலும் ஒரு மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதற்கு ஒன்றிய பாஜக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.
Recommended Video
நாடு முழுவதும் நீட் தேர்வு நடைபெறும் சூழலில் தமிழகத்தில் தனுஷ் என்ற மாணவன், தேர்வை எதிர்கொள்வதில் ஏற்பட்ட அச்சம் காரணமாக தனது உயிரை மாய்த்துக்கொண்டார்.

நீட் தேர்வால் அனிதாவில் தொடங்கி தனுஷ் வரை தமிழகத்தில் உயிரிழந்த மாணவச் செல்வங்கள் ஏராளம்.
இந்நிலையில் இது தொடர்பாக ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
''சேலம் மாவட்டம் மேட்டூர் அருகிலுள்ள கூழையூர் கிராமத்தை சேர்ந்த சிவக்குமார் என்கிற விவசாயியின் இரண்டாவது மகன் தனுஷ். 2019ஆம் ஆண்டு 12 வகுப்பு தேர்வை முடித்த அவர் மருத்துவர் ஆக வேண்டும் என்கிற எண்ணத்தில் இரண்டு முறை நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற இயலவில்லை.
பன்னிரெண்டாம் வகுப்பில் நல்ல மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும் நீட் தேர்வில் தேர்ச்சி பெற முடியாததால் தமது மருத்துவ கனவு தகர்ந்து போகும் என்கிற நினைப்பில் தூக்கிட்டு தற்கொலை செய்து இறந்து போய் உள்ளார்.
தனுஷை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். எந்த ஒரு பிரச்சினைக்கும் தற்கொலை தீர்வாகாது. மாணவர்கள் இதுபோன்ற செயல்களில் இனிமேலும் ஈடுபடக்கூடாது என்று வேண்டுகோள் விடுக்கின்றேன்.
தமிழகத்தில் இதுவரை நீட் தேர்வுக்கு பயந்து மாணவ மணிகள் தற்கொலை செய்து கொண்டதற்கு மத்தியில் ஆளும் ஒன்றிய அரசு முழு பொறுப்பேற்க வேண்டும். தகுதி திறமை என்ற போலித்தனமான வாதத்தால் தமிழகத்தில் மீண்டும் ஒரு உயிர் பலியாகக் கூடாது.''
இவ்வாறு தனது அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.
இதனிடையே நாடு முழுவதும் இன்று நடைபெறும் நீட் தேர்வில் 16 லட்சத்து 14 ஆயிரத்து 714 பேர் எழுதுவது குறிப்பிடத்தக்கது. இதில் தமிழகத்தை பொறுத்தவரை 40 ஆயிரத்து 376 மாணவர்களும் 70 ஆயிரத்து 594 மாணவிகளும் நீட் தேர்வை எழுதுகின்றனர். பிற்பகல் 2 மணிக்கு தொடங்கி 3 மணி நேர கால அவகாசத்துடன் மாலை 5 மணிக்கு இந்த தேர்வு நிறைவு பெறுகிறது.












Click it and Unblock the Notifications