ஸ்தம்பித்த தாம்பரம்! பதறிப்போன போலீஸ்! கார்ப்பரேஷன் கமிஷனர் அழகு மீனா மீது மமக தொண்டர்கள் ஆத்திரம்!
சென்னை: சென்னை தாம்பரத்தில் மாநகராட்சி ஆணையர் அழகு மீனாவை கண்டித்து மனிதநேய மக்கள் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பள்ளி, கல்லூரி, அலுவலகங்கள் முடிந்து வீடு திரும்பும் நேரமான மாலை 4 மணிக்கு மேல் போராட்டத்தில் ஈடுபட்டதால் காவல்துறையினர் குவிக்கப்பட்டு அவர்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டனர். இதனால் மனிதநேய மக்கள் கட்சி தொண்டர்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே லேசான தள்ளுமுள்ளுவும் ஏற்பட்டது.

மனிதநேய மக்கள் கட்சியின் மாநில துணைச் செயலாளரும், தாம்பரம் மாநகராட்சி கவுன்சிலருமான யாக்கூப், கடந்த வாரம் நடைபெற்ற மாமன்றக் கூட்டத்தில் இடப்பிரச்சனை தொடர்பாக கேள்வி எழுப்பியதாகவும் அதற்கு மாநகராட்சி ஆணையர் அழகு மீனா அவமதிக்கும் வகையில் ஒருமையில் பேசியதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே தாம்பரம் மாநகராட்சி ஆணையர் அழகு மீனாவின் நடவடிக்கைகள் குறித்து நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு கவனத்திற்கும் மமக தலைமை கொண்டு சென்றிருக்கிறது.
ஆனாலும் இது வரை நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால், நேரடியாக நாமே களமிறங்குவோம் என முடிவெடுத்த மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகள், தாம்பரம் யாக்கூப்புக்கு ஆதரவாக இன்று மாலை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். தாம்பரம் மாநகராட்சி ஆணையர் அழகு மீனாவை கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர். மாலை வேளையில் மனிதநேய மக்கள் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் போலீஸார் குவிக்கப்பட்டு அங்கிருந்து மமகவினர் வேனில் ஏற்றப்பட்டு திருமண மண்டபத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
இந்த நிகழ்வு தாம்பரம் பகுதியில் சிறிது நேரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனிடையே மனிதநேய மக்கள் கட்சியை பொறுத்தவரை திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் முக்கியக் கட்சி என்பதும் அதன் தலைவர் ஜவாஹிருல்லா அமைச்சர் நேருவுக்கு நெருக்கமானவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனாலும் தாங்கள் முன் வைத்த புகார் மீது அமைச்சர் நேரு நடவடிக்கை எடுக்காதது திமுகவின் கூட்டணி கட்சியான மமக தரப்பை கொதிப்படைய வைத்துள்ளது. மமக நடத்திய போராட்டத்துக்கு விசிக ஆதரவு அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications