எம்எல்ஏ பதவியை தூக்கி எறிந்தார் மனோஜ் பாண்டியன்.. பாஜகவின் கிளை கழகம் அதிமுக என்று குற்றச்சாட்டு
சென்னை: பாஜகவின் கிளை கழகமாக அதிமுக உள்ளதாக திமுகவில் இணைந்த அதிமுக எம்எல்ஏ மனோஜ் பாண்டியன் குற்றம்சாட்டியுள்ளார். தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த மனோஜ் பாண்டியன், கொள்கைகளை பின்பற்றும் இயக்கமான திமுகவில் இணைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
எம்ஜிஆர் காலத்து அரசியல் தலைவர்களில் ஒருவரான முன்னாள் சபாநாயகர் பிஎச் பாண்டியனின் மகன் மனோஜ் பாண்டியன். 1993ஆ, ஆண்டு முதல் மனோஜ் பாண்டியன் அதிமுகவில் பயணித்து வருகிறார். அதிமுகவின் மாநில வழக்கறிஞர் அணி இணை செயலாளர், அதிமுக அமைப்புச் செயலாளர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்தார்.

இதன்பின் ஒபிஎஸ் ஆதரவாளராக இருந்த மனோஜ் பாண்டியன், கடந்த சில ஆண்டுகளாக எந்த அணியிலும் இணையாமல் அமைதி காத்து வந்தார். இந்த நிலையில் சட்டசபைத் தேர்தலுக்கு 6 மாதங்களுக்கு முன்பாக மனோஜ் பாண்டியன் திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார். தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தொகுதி எம்எல்ஏ-வாக இருக்கும் மனோஜ் பாண்டியன், தனது பதவியையும் ராஜினாமா செய்ய உள்ளதாக கூறியுள்ளார்.
அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் மனோஜ் பாண்டியன் தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டார். இதன்பின் செய்தியாளர்களை சந்தித்து மனோஜ் பாண்டியன் பேசுகையில், எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் ஒருநாளும் அதிமுகவை யாரிடமும் அடகு வைக்கவில்லை. அதிமுக அந்தக் காலத்தை போல் இல்லை.
இன்றைய அதிமுக என்பது வேறு ஒரு இயக்கத்தை நம்பி அந்த இயக்கத்தின் சொல்படி நடக்கக் கூடிய ஒரு நிலை உள்ளது. எம்ஜிஆர் கொள்கையை காற்றில் பறக்கவிட்டுவிட்டு பாஜகவின் கிளைக் கழகமாக செயல்படும் நிலையில் உள்ளது. இயக்கத்திற்கு உழைக்கக் கூடிய உழைப்பை வேண்டாம் என்று எடப்பாடி பழனிசாமி துரத்துகிறார்.. அவரின் நோக்கம், சிந்தனை, நடைமுறை என்ன என்பதை உணர்ந்து, திமுகவில் இணைந்துள்ளேன்.
தொண்டர், மக்களின் உணர்வை எந்த சூழலிலும் ஏற்க மாட்டேன் என்று எடப்பாடி பழனிசாமி இருக்கிறார். இன்று மாலை 4 மணிக்கு எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்கிறேன். குடும்பத்தை காப்பாற்றுவதற்காக அதிமுகவை அடகு வைத்து அங்கிருப்பவர்களோடு இருப்பதை விட, திராவிட கொள்கைகளை பாதுகாக்கக் கூடிய தலைவரோடு தொண்டனாக பணியாற்ற வந்துள்ளேன் என்றும் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications