மார்ச் மாத ராசிபலன் 2022: மேஷ ராசிக்கு அதிர்ஷ்டம் தேடி வரும் அற்புத மாதம்
மார்ச் மாதம் நவகிரகங்களின் சஞ்சார கூட்டணியால் எந்த ராசிக்காரர்களுக்கு என்ன பலன் கிடைக்கும், அதிர்ஷ்டம் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.
சென்னை: சூரியபகவான் கும்ப ராசியில் பாதி நாட்களும் மீன ராசியில் பாதி நாட்களும் பயணம் செய்கிறார். சனி, செவ்வாய், சுக்கிரன்,புதன் என கிரகங்கள் மகர ராசியில் இணைந்திருக்கின்றன. ராகு ரிஷபத்திலும் கேது விருச்சிக ராசியிலும் பயணம் செய்கின்றன. கிரகங்களின் கூட்டணி பார்வையால் மேஷ ராசிக்காரர்களுக்கு என்ன மாதிரியான பலன் கிடைக்கும் அதிர்ஷ்டம் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.
மார்ச் 6 புதன் பெயர்ச்சி மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு இடப்பெயர்ச்சி. மார்ச் 24ஆம் தேதி மீன ராசிக்கு குரு பகவான் இடப்பெயர்ச்சி அடைகிறார். 15ஆம் தேதி சூரியன் மீன ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார்.
மழை காலமும் பனி காலமும் முடிந்து இன்னும் சில நாட்களில் வசந்த காலம் தொடங்கப்போகிறது. மாசி, பங்குனி இணைந்த மார்ச் மாதத்தில் மேஷ ராசிக்காரர்களுக்கு பலன்கள் எப்படி இருக்கும். பண வரவு வருமா? வேலையில் புரமோசன் கிடைக்குமா என்று பார்க்கலாம்.
மேஷம்
செவ்வாய் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மேஷ ராசிக்காரர்களே, பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி சூரியன் குரு உடன் லாப ஸ்தானத்தில் பயணம் செய்வதால் மேன்மை அதிகரிக்கும். அரசு வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு அற்புதங்கள் நிகழும். குல தெய்வத்தின் அருள் கிடைக்கும். உங்கள் ராசிக்கு ஐந்தாம் அதிபதி சூரியன் பாக்ய ஸ்தான அதிபதி குருவோடு இணைந்திருப்பதால் நன்மைகள் அதிகரிக்கும். வரவேண்டிய பணம் கைக்கு வந்து சேரும்.
பேசும் வார்த்தைகளில் கவனம்
பத்தாம் வீட்டில் சனி, செவ்வாய், சுக்கிரன், புதன் என கிரகங்கள் கூட்டணியால் சின்னச் சின்ன குழப்பங்கள் வரலாம். வேலையில் கவனமாகவும் விழிப்புணர்வோடும் இருப்பதும் அவசியம். யாரையும் எதிர்த்து பேச வேண்டாம். அவசரப்பட்டு வேலையை விட வேண்டாம். கூட இருந்தே குழிபறிப்பவர்களைப் பற்றி கவனமாக பேசுவது நல்லது. வார்த்தைகளை அவசரப்பட்டு பேசி சிக்கலில் மாட்டிக்கொள்ள வேண்டாம். அமைதியாக வேடிக்கை மட்டும் பாருங்கள்.
கடன் பிரச்சினையில் கவனம்
சூரியன் 12ஆம் வீட்டிற்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். பிள்ளைகளுக்கு நன்மைகள் நடைபெறும். சிலருக்கு வெளிநாட்டு வேலை வாய்ப்பு தேடி வரும். அரசுவேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு தேடி வரும். புதன் பகவான் லாப ஸ்தானத்திற்கும் விரைய ஸ்தானத்திற்கும் செல்கிறார். தொழில் முதலீடுகளில் கவனம் தேவை. அதிக கடன் வாங்கி அகலக்கால் வைக்க வேண்டாம்.
மகிழ்ச்சியான மாதம்
பிள்ளைகளால் சுப காரியம் நடைபெறும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். பெண்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும். பெண்களுக்கு உயர்வான கால கட்டம் நல்ல வேலை கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள் உங்களின் தெய்வ பக்தி உங்களைக் காப்பாற்றும். ஞாயிற்றுக்கிழமை சிவ ஆலயம் சென்று நெய் தீபம் ஏற்றி வணங்கலாம்.