அதிமுகவால பாஜக கெட்டுச்சு, பாஜகவால அதிமுக கெட்டுச்சு.. சொன்னா கேட்டீங்களா-மாரிதாஸ்
சென்னை: உன்னால நான் கெட்டேன் என்னால நீ கெட்ட.. இது தமிழக அதிமுக பாஜக நிலை என நாடாளுமன்ற தேர்தல் குறித்து தமிழக பாஜக தலைமையை மறைமுகமாக விமர்சித்துள்ளார் பிரபல யூட்யூபரும், பாஜக ஆதரவாளருமான மாரிதாஸ்.
இந்தியாவின் 18வது மக்களவைக்கான 543 உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக மக்களவைத் தேர்தலானது நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெற்றது. ஏப்ரல் 19ம் தேதி முதல் ஜூன் 1ஆம் தேதி வரை வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில் இன்று இந்தியா முழுவதும் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

400க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்று பாஜக மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என பிரதமர் நரேந்திர மோடியும் அந்த கட்சியின் முக்கிய தலைவருமான அமித்சாவும் சூளுரைத்தனர். ஆனால் தற்போது நிலைமை தலைகீழாக மாறி இருக்கிறது.
290க்கும் மேற்பட்ட தொகுதிகளிலேயே பாஜக கூட்டணி முன்னிலை வகிக்கிறது. கடும் போட்டி அளித்து வரும் இந்தியா கூட்டணி 220க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. இதனால் கூட்டணி கட்சிகளின் தயவிலேயே ஆட்சி அமைக்க வேண்டிய நிலைக்கு பாஜக தள்ளப்பட்டு இருக்கிறது. இதனை அந்த கட்சி நிர்வாகிகள் சற்றும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். மற்ற மாநிலங்களில் பாஜக ஓரளவு செல்வாக்கு பெற்றுள்ள நிலையில் தமிழகத்தில் நிலைமை மோசமாக உள்ளது.
தமிழகத்தை பொறுத்தவரை திமுகவின் ஆதிக்கம் அதிகமாக இருக்கிறது. தமிழ்நாடு புதுவையில் மொத்தம் இருக்கும் 40 தொகுதிகளில் 38 தொகுதிகளில் திமுக கூட்டணி முன்னிலை வகிக்கிறது. பெரிய அளவில் திமுக கூட்டணிக்கு நெருக்கடி அளிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட அதிமுக பலத்த பின்னடைவை சந்தித்து இருக்கிறது. ஒரு தொகுதியில் கூட அந்த கட்சி முன்னிலை பெற முடியவில்லை. தனி கூட்டணி அமைத்து போட்டியிட்ட பாஜகவும் ஒரு தொகுதியில் கூட முன்னிலையில் இல்லை.

இந்நிலையில் தமிழக பாஜக தலைமையை மறைமுகமாக விமர்சித்துள்ளார் பிரபல யூட்யூபரும், பாஜக ஆதரவாளருமான மாரிதாஸ். இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர்," உன்னால நான் கெட்டேன் என்னால நீ கெட்ட.. இது தமிழக அதிமுக பாஜக நிலை! TN பாஜக அதிமுக கூட்டணி உடைய கூடாது! கூடுதல் பொறுப்போடு அணுக வேண்டும் எனக் கேட்டுக் கொண்ட என் போன்றவர்களை அந்த நேரத்தில், வார் ரூம் வைத்துத் திட்டி தீர்த்த அனைவருக்கும் சொல்ல விரும்புவது "ஒரு உண்மை - அது உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றாலும் உங்கள் மனதுக்கு கசப்பாக இருந்தாலும் அது உண்மை என்பதால் அதை ஏற்று அதில் உரியத் திருத்தம் செய்து வெற்றியைச் சிந்தித்திருக்க வேண்டிய அரசியல் அவசியமாகிறது.
ஒருவேலை தெலுங்கானா அல்லது ஒடிசா கை கொடுக்கவில்லை. இன்று ஆட்சி அமைப்பதே சிரமாக அமைந்திருக்கும். 39+1 - 40 தொகுதி கொண்ட முக்கியமான மாநிலமான தமிழகத்தில் 0ல் இருந்து என்பது எந்த அரசியல்வாதியும் ஏற்க கூடிய விசயமல்ல. ஒன்று கட்டமைப்பு உருவாக்க வேண்டும் இல்லை கட்டமைப்பு உள்ள கட்சியோடு கூட்டணியை வழுவாக எடுத்து செல்வது அவசியம். இனி வரும் காலங்களில் உண்மைகளுக்கு காது கொடுங்கள். வெறும் கோஷத்திற்கு அல்ல!" என பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications