Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மதிமுக தலைமைக் கழகச்செயலாளராக துரை வைகோ நியமனம்... வாக்கெடுப்புக்கு பின் வைகோ அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மகன் துரை வையாபுரி என்ற துரை வைகோவு, அக்கட்சியின் தலைமைக் கழகச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மதிமுக மாவட்ட செயலாளர்கள், உயர்நிலைக் குழுவினரிடையே புதன்கிழமை மாலை நடந்த ரகசிய வாக்கெடுப்பில் 106 பேரில் 104 பேர் துரை வையாபுரிக்கு ஆதரவு அளித்ததால் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Recommended Video

    அரசியலுக்கு என்ட்ரி கொடுத்த வைகோவின் மகன் வையாபுரி!

    1990களின் தொடக்கத்தில் திமுகவில் அசைக்க முடியாத 2-ம் கட்ட தலைவர்களில் ஒருவராக அன்றைய வை.கோபால்சாமி எம்.பி (வைகோ) விஸ்வரூபமெடுத்திருந்தார். இதனை திமுக தலைவராக இருந்த கருணாநிதி ரசிக்கவில்லை.

    இது தொடர்பாக மதிமுகவின் அதிகாரப்பூர்வ இணைய பக்கத்தில்(http://mdmk.org.in/party-history), 1991 நவம்பர் 26 ஆம் தேதி கட்சியின் (திமுக) செயற்குழுவை கூட்டி வைகோவை கட்சியில் இருந்து நீக்க கருணாநிதி முடிவு செய்தார் அச்செயற்குழுவில் வைகோ மீது அபாண்டமான பழிகளைச் சுமத்தி கருணாநிதி உரையாற்றினார், அவரின் அறிவுரையின்படி வேறு சிலரும் வைகோவைப் பற்றி அவதூறு பேசினார்கள், பின்னர் வைகோ தன்னிலை விளக்கம் அளித்தார் .இவ்விளக்கத்தை கேட்ட கட்சியின் செயற்குழுவினரில் 99 விழுக்காடு உறுப்பினர்கள் வைகோவின் பக்கமே நியாயம் இருப்பதை உணர்ந்தனர் . அங்கு நிலவிய நிலைமையை உணர்ந்து கொண்டு வைகோவை அன்று கட்சியிலிருந்து நீக்குவதை கருணாநிதி ஒத்தி வைத்தார் .திமுகவின் செயற்குழுவில் தான் நினைத்ததை சாதிக்காதது கருணாநிதிக்கு அதுவே முதல்முறை .1993 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், 'வைகோவின் அரசியல் நலன்களுக்காக, விடுதலைப்புலிகள் தம்மைக் கொலை செய்யத் திட்டமிட்டு உள்ளார்கள்' என்று ஒரு கொலைப்பழியைச் சுமத்தினார் கருணாநிதி.

    உதயமான மதிமுக

    உதயமான மதிமுக

    ஆனால், கருணாநிதியின் சுயநல, குடும்ப அரசியலைக் கண்டித்தும், வைகோவைக் கட்சியில் இருந்து நீக்கக்கூடாது என்றும் வலியுறுத்தி, நொச்சிப்பட்டி தண்டபாணி, இடிமழை உதயன், கோவை காமராசபுரம் பாலன், மேலப்பாளையம் ஜஹாங்கீர், உப்பிலியாபுரம் வீரப்பன் ஆகியோர், தீக்குளித்து மடிந்தனர். உலகில் வேறு எந்த இயக்கத்திலும், கட்சித்தலைமையைக் கண்டித்து, இவ்வாறு தீக்குளித்த மடிந்ததாக வரலாறு இல்லை. ஆயினும், வைகோவைக் கட்சியில் இருந்து வெளியேற்றினார் கருணாநிதி. தி.மு.கழகத்தின் ஒன்பது மாவட்டச் செயலாளர்களும், 400 க்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்களும், கருணாநிதியின் குடும்ப அரசியலைக் கண்டித்து, வைகோவைக் கட்சியில் இருந்து நீக்கக்கூடாது என்று வலியுறுத்தியதால், அவர்கள் அனைவரையுமே கட்சியில் இருந்து வெளியேற்றினார் கருணாநிதி. எனவே, கருணாநிதியால் வெளியேற்றப்பட்டவர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து, பேரறிஞர் அண்ணா அவர்களின் கொள்கைகளைக் காப்பதற்காக, 'மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்' என்ற புதிய அரசியல் அமைப்பை உருவாக்கினர் என பதிவு செய்யப்பட்டுள்ளது.

    திமுக கூட்டணியில் மதிமுக

    திமுக கூட்டணியில் மதிமுக

    ஆனால் கடந்த 25 ஆண்டுகளில் வைகோவின் அரசியல் பயணம் எத்தனையோ திசைகளை நோக்கி பயணித்துவிட்டது. தற்போது வேறுவழியே இல்லாமல் திமுக தலைமையிலான கூட்டணியிலேயே மதிமுக இடம்பெற்றிருக்கிறது. திமுகவின் உதயசூரியன் சின்னத்திலேயே மதிமுக வேட்பாளர்கள் போட்டியிட்டு சட்டசபைக்குள் நுழைந்துள்ளனர். வைகோவும் திமுகவின் ஆதரவுடன் ராஜ்யசபா எம்.பி.யானார். சட்டசபை தேர்தலுக்கு முன்னதாகவே தேர்தல் முடிந்த பிறகு மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முக்கிய முடிவு அறிவிக்கப்படும் என பூடகமாக கூறி வந்தார் வைகோ. அதாவது மகன் துரை வையாபுரிக்கு கட்சியில் முக்கிய பதவி வழங்கப்படும் என்பதைத்தான் மறைமுகமாக கூறி வந்தார் வைகோ.

    தீர்மானம் போட்ட மதிமுக

    தீர்மானம் போட்ட மதிமுக

    அண்மையில் இது தொடர்பாக விளக்கம் அளித்த வைகோ, என் மகன் அரசியலுக்கு வருவதை நான் துளியும் விரும்பவில்லை. ஆனால் தொண்டர்கள்தான் இயக்கம்.. அவர்கள் விரும்பும் முடிவுக்கு கட்டுப்படுவேன் என்றார். இதையடுத்து மதிமுகவின் பல்வேறு மாவட்ட அமைப்புகளில் துரை வையாபுரி என்கிற துரை வைகோவுக்கு கட்சியில் பதவி வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    தலைமைக் கழகச்செயலாளர்

    தலைமைக் கழகச்செயலாளர்

    சென்னையில் புதன்கிழமை மாலை மதிமுகவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் பங்கேற்க சில நாள் முன்பே வைகோவும் துரை வைகோவும் சென்னை விமான நிலையம் வருகை தந்தனர். அப்போது இருவருக்கும் ஆளுயர மாலை அணிவித்து வீரவாள் பரிசளிக்கப்பட்டது. இதனிடையே சென்னையில் இன்று நடைபெறும் மதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடர்பான மதிமுக சுவரொட்டிகளில் வெற்றி திருமகனே துரை வைகோ என்ற அடைமொழியுடன் பிரமாண்ட போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. துரை வைகோவுக்கு மதிமுகவில் துணைப் பொதுச்செயலாளர் அல்லது பொருளாளர் பதவி அல்லது தலைமைக் கழகச்செயலாளர் பதவி வழங்கப்படலாம் என கூறப்பட்டது இது தொடர்பாக புதன்கிழமை மாலை மாவட்ட செயலாளர்கள், உயர்நிலைக் குழு உறுப்பினர்களிடையே ரகசிய வாக்கெடுப்பு நடந்தது. இதில் 106 பேர் பங்கேற்ற நிலையில் துரைவையாபுரிக்கு ஆதரவாக 104 பேர் ஆதரித்து வாக்களித்தனர். இதையடுத்து துரைவையாபுரி மதிமுக தலைமைக் கழகச்செயலாளராக நியமிக்கப்படுவதாக வைகோ அறிவித்துள்ளார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+