தமிழகத்தில் ஊரடங்கை மொத்தமாக தளர்த்த முடியாது.. மருத்துவ நிபுணர் குழு
சென்னை: தமிழகத்தில் ஊரடங்கை படிப்படியாகத்தான் தளர்த்த முடியும் என்று இந்திய மருத்துவ கவுன்சிலின் (ஐசிஎம்ஆர்) துணை இயக்குநர் பிரதீப் கவுர் தெரிவித்துள்ளார்.
Recommended Video
இந்தியா முழுவதும் வரும் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்த நிலையில் இந்தியாவில் பெரும்பாலான மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகமாக இருப்பதால் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என பெரும்பாலான மாநில அரசுகள் கோரிக்கை விடுத்துள்ளன.
இதுதொடர்பாக கடந்த திங்கள்கிழமை பிரதமர் நரேந்திர மோடியுடன் மாநில முதல்வர்கள் ஆலோசனை நடத்தினார். அப்போது ஊரடங்கு நீட்டிப்பு குறித்த கோரிக்கைகள் வலுத்தன. இந்த நிலையில் தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பதா வேண்டாமா என்பது குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்தினார்.
4 நாட்களுக்கு பிறகு திறந்ததால்.. சென்னை, கோவை கடைகளில் மக்கள் கூட்டம்.. காற்றில் பறந்த சமூக இடைவெளி
ஆலோசனை
இதுகுறித்து மே 2 ஆம் தேதி தமிழக அமைச்சரவை கூடுகிறது. இதனிடையே 19 பேர் கொண்ட மருத்துவ நிபுணர்கள் குழுவினர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக்கு பிறகு இந்திய மருத்துவ கவுன்சிலின் (ICMR) துணை இயக்குநர் பிரதீப் கவுர் கூறுகையில் கொரோனா பாதிப்பு அனைத்து மாவட்டங்களிலும் சம அளவு இல்லை.
ஊரடங்கு
சென்னையில் கொரோனா பாதிப்பு கடந்த இரு வாரங்களில் இரட்டிப்பாகியுள்ளது. கொரோனா வைரஸ் உடனடியாக முழுமையாக கட்டுக்குள் வராது. தமிழகத்தை பொருத்தவரை ஒரே நேரத்தில் பொது ஊரடங்கை தளர்த்த முடியாது. இங்கு ஊரடங்கை படிப்படியாகத்தான் தளர்த்த முடியும்.
வாழ்க்கை முறை
இதற்காக சில நடைமுறைகளை பின்பற்றுமாறு ஆலோசனை வழங்கியுள்ளோம். தனிமனித இடைவெளி, மாஸ்க் அணிவதை கட்டாயம் பின்பற்ற வேண்டும். புற்றுநோய், சிறுநீரக பாதிப்பு, சர்க்கரை நோய் உள்ளவர்கள் முறையாக சிகிச்சையை கடைப்பிடிக்க வேண்டும். கொரோனா தொற்று நீண்ட நாட்களாக இருக்கும் என்பதால் நமது வாழ்க்கை முறையை மாற்ற வேண்டும்.
கொரோனா
சில இடங்களில் ஊரடங்கை படிப்படியாக தளர்த்த ஆலோசனைகளை வழங்கியுள்ளோம். கடந்த வாரத்தில் பரிசோதனை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் பாதிப்பு விகிதமும் அதிகரித்துள்ளது. தனிமைப்படுத்துதல், கண்காணிப்பு போன்றவற்றை செய்தால்தான் கொரோனாவை கட்டுப்படுத்த முடியும். பொது இடங்களில் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.