மேகதாது: பேதமின்றி ஒன்று சேரும் கர்நாடக கட்சிகள்.. தமிழகத்திலும் அரசியல் தலைவர்கள் அணி திரள்வார்களா?
சென்னை: தமிழ்நாடு விவசாயிகளின் வாழ்வாதாரத்தில் மீண்டும் கைவைக்க தொடங்கியுள்ளது கர்நாடக அரசு. உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில் மேகதாது அணை விவகாரத்தை தேவையில்லாமல் கர்நாடக அரசு கையில் எடுத்துள்ளது.
டெல்டா மாவட்டங்களின் உயிர்நாடியாக காவிரி நீர் இருக்கும் நிலையில் அதனை தடுத்து நிறுத்தும் விதமாக காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டியே தீருவோம் என்று பிடிவாதமாக இருக்கிறார் கர்நாடக முதல்வர் எடியூரப்பா.

எடியூரப்பா பிடிவாதம்
இதுகுறித்து நிருபர்களிடம் எடியூரப்பா கூறியதுமே, '' தமிழ்நாடு விவசாயிகளை பாதிக்கும் மேகதாது அணை திட்டத்தை கை விடுங்கள். இது நல்லுறவுக்கு உகந்தது அல்ல'' என்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உடனடியாக கண்டன அறிக்கை விட்டார். ஆனாலும் தொடர் பிடிவாதத்தில் இருக்கும் எடியூப்பாரா '' மேகதாது அணை இரு மாநில விவசாயிகளுக்கும் நன்மை பயக்கும். பெங்களூரு குடிநீர் தேவைக்கு இந்த அணை மிகவும் முக்கியம். தேவைப்பட்டால் பேசி தீர்த்துக் கொள்வோம்'' என்று முதல்வர் ஸ்டாலினுக்கு லெட்டர் போட்டார்.

தமிழ்நாடு எதிர்ப்பு
பதிலுக்கு லெட்டர் போட்ட மு.க.ஸ்டாலின், '' மேகதாது அணை தமிழ்நாடு விவசாயிகளை கண்டிப்பாக பாதிக்கும். பெங்களூவின் சிறிதளவு குடிநீர் தேவைக்காக, தமிழ்நாடு விவசாயிகளின் வாழ்க்கையை அழிப்பது நியாயம் இல்லை. மேகதாது அணை கட்டக் கூடாது'' என்று கூறி இருந்தார். மேகதாது அணை தொடர்பாக தமிழ்நாடும் அதிகபட்ச எதிர்ப்பை பதிவு செய்துதான் வருகிறது. சமீபத்தில் நடந்த காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் எடியூபரப்பாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தது.

அணி திரளும் கர்நாடக அரசியல்வாதிகள்
தமிழ்நாடு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, துணை எதிர்க்கட்சி தலைவர் ஓ.பன்னீர் செல்வம், பா.ம.க.வின் ராமதாஸ் ஆகியோர் கர்நாடகாவுக்கு எதிராக கண்டன அறிக்கை விட்டுள்ளனர். அதை இல்லையென்று சொல்ல முடியாது. ஆனால் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தற்போது கர்நாடக அரசியல் தலைவர்கள் கட்சி பேதங்களை மறந்து ஓரணியில் நிற்க தொடங்கியுள்ளனர். கர்நாடக முன்னாள் முதல்வரும், மதசார்பற்ற ஜனதா தள தலைவருமான குமாரசாமி கட்சி பேதங்களை மறந்து பா.ஜ.க.வின் முதல்வர் எடியூரப்பாவை தனது எம்.எல்.ஏ.க்களுடன் சந்தித்து பேசியுள்ளார்.

தமிழ்நாடு என்ன செய்ய வேண்டும்?
மேகதாது விவகாரத்தில் அரசுடன் துணை நிற்பதாக எடியூரப்பாவுக்கு குமாரசாமி வாக்குறுதி அளித்துள்ளதாக தெரிகிறது. இதேபோல் முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் தலைவருமான சித்தராமையா மேகதாது விவகாரத்தில் அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு உடன்படுகிறோம் என்று கூறி இருப்பதாக கூறப்படுகிறது. இவ்வாறு தமிழ்நாட்டுக்கு எதிராக கர்நாடக அரசியல் தலைவர்கள் ஓரணியில் நிற்க தொடங்கி விட்டார்கள். தமிழ்நாட்டிலும் இதேபோல் கட்சி பேதங்களை மறந்து அரசியல் கட்சியினர் ஓரணியில் திரள வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

கட்சி பேதம் பார்க்க கூடாது
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உடனடியாக எதிர்கட்சிகளை கூட்டி மேகதாது அணை தொடர்பாக ஆலோசனை நடத்த வேண்டும். அல்லது அ.தி.மு.க, பா.ஜ.க, பா.ம.க உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் கட்சி பாகுபாடு பார்க்காமல் முதல்வர் ஸ்டாலின், துறைரீதியான அதிகாரிகளுடன் விவாதித்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்க வேண்டும். தமிழ்நாட்டில் எதிர்க்கட்சி, ஆளும் கட்சி எம்.எல்.ஏ.க்கள் ஒன்று சேர்ந்து பிரதமர் நரேந்திர மோடி, மத்திய நீர்வளத்துறை அமைச்சரை சந்தித்து கர்நாடகாவுக்கு எதிராக மனு கொடுக்கலாம் என்று தமிழ்நாடு மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

மக்கள் எதிர்பார்ப்பு இதுதான்
தமிழ்நாட்டில் எதிர்கட்சியினர் வெறும் அறிக்கையுடன் நின்று விடாமல் மேற்கண்ட அரசுடன் இணைந்து மேற்கண்ட செயல்களை செய்யும்போதுதான் பிடிவாதமாக இருக்கும் கர்நாடக அரசுக்கு மேலும் அழுத்தம் கொடுக்க முடியும். தமிழ்நாடு விவசாயிகளின் நலன் கருதி தமிழ்நாடு அரசியல் கட்சியினர் அணி திரள வேண்டும் என்பதே அனைத்து தரப்பினரின் கோரிக்கையாக இருக்கிறது.












Click it and Unblock the Notifications