மீண்டும் அவலம்.. முழு ஊரடங்கு பீதி.. பதறியடித்து சொந்த மாநிலங்கள் புறப்பட்ட புலம் பெயர் தொழிலாளர்கள்
சென்னை: இரவு நேர ஊரடங்கு, வாராந்திர ஊரடங்கு அறிவிப்புகளை சில மாநிலங்கள் அமலுக்கு கொண்டு வந்துள்ளன. இது தவிர, மீண்டும் நாடு முழுக்க முழு ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வரும் என்ற பயம் காரணமாக புலம்பெயர் தொழிலாளர்கள் கூட்டம்கூட்டமாக சொந்த மாநிலங்களை நோக்கி கிளம்ப ஆரம்பித்துள்ளனர்.
Recommended Video
நாடு முழுக்க தற்போது கொரோனா இரண்டாவது அலை வீசுகிறது. தமிழகத்திலும் இதன் பாதிப்பு அதிகமாக இருக்கிறது.
இந்நிலையில் தான் தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஏப்ரல் 10-ஆம் தேதி முதல் ஏப்ரல் 30ஆம் தேதி வரை இந்த கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
மோடி ஆலோசனை
இன்னொரு பக்கம் பிரதமர் நரேந்திர மோடி அனைத்து மாநில முதல்வர்களுடன் இன்று வீடியோ கான்பரன்ஸ் மூலமாக ஆலோசனை நடத்துகிறார். அப்போது கொரோனா நோயை கட்டுப்படுத்துவதற்கு, மேலும் பல்வேறு கட்டுப்பாடுகளை கொண்டு வருவது பற்றி முடிவு செய்யப்படும் என்று கூறப்படுகிறது. போக்குவரத்து முடக்கம் உள்ளிட்ட நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க கூடும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளதால் புலம்பெயர் தொழிலாளர்கள் அச்சமடைந்துள்ளனர்.
குஜராத் நிலவரம்
குஜராத் மாநிலத்தின் சூரத் மற்றும் அகமதாபாத் ஆகிய நகரங்களில் இருந்து கணிசமான புலம்பெயர் தொழிலாளர்கள் வேறு மாநிலங்களுக்கு செல்ல தொடங்கியுள்ளனர் என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னணி ஆங்கில ஊடகங்கள் இது தொடர்பான செய்தியை வெளியிட்டுள்ளன. அதேநேரம், குஜராத் அரசு இந்த செய்திக்கு மறுப்பு தெரிவித்து உள்ளது. சொந்த ஊர்களுக்கு கிளம்பிச் செல்லும் புலம்பெயர் தொழிலாளர்கள் குறைந்த அளவிலானவர்கள் மட்டும்தான். பெரிய அளவுக்கு தொழிலாளர்கள் கிளம்பிச் செல்லவில்லை. அதேநேரம், அப்படி செல்லக்கூடிய தொழிலாளர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும் என்று மாவட்ட அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளதாக குஜராத் அரசு தெரிவித்துள்ளது.
ரயில் நிலையங்கள்
அகமதாபாத் நகரில் இருக்கக்கூடிய புலம்பெயர் தொழிலாளர்கள் பலரும் உத்தரப்பிரதேசம் மற்றும் பீகார் ஆகிய மாநிலங்களில் இருந்து குடிபெயர்ந்து வந்தவர்களாகும். எனவே அகமதாபாத் நகரில் உள்ள முக்கியமான ரயில் நிலையம், இப்போது புலம்பெயர் தொழிலாளர்களால், நிரம்பி வழிகிறது. உத்தரபிரதேசம் மற்றும் பீகார் ஆகிய மாநிலங்களுக்கு செல்லக்கூடிய ரயில்களில் கூட்டம் அலைமோதுகிறது.
போக்குவரத்து
ஒருவேளை ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்து ரயில் போக்குவரத்து உள்ளிட்ட பிற போக்குவரத்து முடக்கப்பட்டால் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு நடந்து செல்ல வேண்டியிருக்கும் என்ற அச்சத்தின் காரணமாக இந்தப் புலம்பெயர் தொழிலாளர்கள் இப்போது கூட்டம் கூட்டமாக ரயில்களில் கிளம்பிச் செல்கிறார்கள். ஆனால் இவ்வாறு செல்லும் போது நோய் தொற்று எளிதில் வருவதற்கான வாய்ப்பு இருக்கிறது என்பதால் கூட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்று மருத்துவதுறை வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.
சூரத் நகரம்
சூரத் நகரில் கணிசமாக, உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், பீகார், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களை சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். அவர்கள் பேருந்துகள் மூலமாக தங்களது சொந்த மாநிலங்களுக்கு சென்று கொண்டிருக்கிறார்கள் என்று பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
டெல்லி நிலவரம்
டெல்லியில், பல புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ஆனந்த் விஹார் பஸ் முனையத்திலிருந்து தங்கள் சொந்த மாநிலங்களுக்குச் செல்வதைக் காண முடிந்தது. லாக்டவுன் அச்சத்தில் அவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பிச் செல்வதாகக் கூறியுள்ளனர். ஊரடங்கு வந்தால், தொழில் இருக்காது. எனவே, பணமும் உணவும் இல்லாமல் சிக்கிக்கொள்ள நேரிடும் என்பதால், கிளம்பிச் செல்வதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மும்பையிலும் பிரச்சினை
மும்பையில் பல புலம்பெயர்ந்த தொழிலாளர்களும் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வதைக் காண முடிந்தது. கொரோனா வைரஸின் பயத்தை விட, தொழில் இல்லாமல் சிக்கி விடக்கூடாது என்பதுதான் அவர்களின் பயமாக இருந்தது. மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், டெல்லி, பஞ்சாப் மற்றும் பல மாநிலங்கள் இரவு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ள நிலையில், தொழிலாளர்களுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது.
பொருளாதார நிலவரம்
குஜராத், மகாராஷ்டிரா, டெல்லி மாநிலங்களில் தொடங்கியுள்ள இதே போன்ற சூழ்நிலை தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் தொடர்ந்தால் கட்டிட வேலைப்பாடுகள் உள்ளிட்ட தொழில்களில் தொழிலாளர்கள் கிடைக்காத சூழ்நிலை உருவாகும். இதனால் பொருளாதாரத்தில் பாதிப்பு ஏற்படும் அச்சம் உருவாகியுள்ளது. எனவே பொதுமக்கள் அச்சப்பட்டு செல்ல வேண்டாம் என்று அரசு கேட்டுக் கொள்ள வேண்டும் என்று தொழில்முனைவோர் எதிர்பார்க்கிறார்கள்.
கடந்த வருடம் தொழிலாளர்கள் கஷ்டப்பட்டனர்
கடந்த வருடம் கொரோனா தொற்றால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கின் போது 2020 மார்ச் - ஜூன் இடைப்பட்ட மாதங்களில் 1 கோடிக்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்ததொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு நடந்தே திரும்பினர் என மத்திய அரசு செப்டம்பர் மாதம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. இன்னும் எத்தனை பேர் கணக்கில் வராமல் போயிருப்பார்கள் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. தண்ணீர், உணவு இல்லாமல் அவர்கள் தவித்தனர். நூற்றுக்கணக்கானோர் நடந்து போகும் வழியில் மரணமடைந்தனர். எனவே இப்போது போக்குவரத்து இருக்கும்போதே சொந்த ஊர் போய்விடலாம் என அவர்கள் நினைக்கிறார்கள். எனவே ஊரடங்கு அமலாகாது என்ற தகவலை மத்திய அரசு உடனடியாக உரத்துச் சொல்ல வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.