தமிழ்நாட்டில் விரைவில் பள்ளிகள் திறப்பு? எப்போது அறிவிப்பு வெளியாகும்..அமைச்சர் அன்பில் மகேஷ் பளிச்
சென்னை: பெற்றோர்கள் மத்தியில் பயம் குறைந்த பின்னர், மருத்துவ வல்லுநர்களின் ஆலோசனைக்கு பிறகே தமிழ்நாட்டில் பள்ளிகள் திறக்கப்படும் எனப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்,
கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமே பாடங்கள் கற்பிக்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் அரசுப் பள்ளி மாணவர்களுக்குப் பாடம் கற்பிக்க ஏதுவாக தமிழ்நாடு அரசுக் கல்வி தொலைக்காட்சியை நடத்தி வருகிறது.

அமைச்சர் அன்பில் மகேஷ்
இந்நிலையில், தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ள நிலையில், விரைவில் பள்ளிகள் திறக்கப்படலாம் எனத் தகவல் பரவியது. இது குறித்து பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கமளித்துள்ளார். இன்று திருச்சியில் அறநிலையத் துறை கீழ் இயங்கும் பூசாரிகள், அர்ச்சகர்கள் ஆகியோருக்கு கொரோனா நிவாரண நிதி மற்றும் நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

+2 மாணவர்கள்
இதில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கலந்து கொண்டு அர்ச்சகர்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார், அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், "+ 2 மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை நேற்று வெளியிட்டோம். அதன்படி +2 மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கும் பணி விரைவில் முடிக்கப்பட்டு வெளியிடப்படும்.

ஐசிஎம்ஆர்
இப்போது கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளதால் கல்வி தொலைக்காட்சி மூலம் மாணவர்களுக்குப் பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது. கொரோனா 3ஆம் அலை விரைவில் ஏற்படலாம் என்றும் அதில் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படலாம் என்றும் சிலர் கூறுகின்றனர். எனவே ஐசிஎம்ஆர், உலக சுகாதார அமைப்பு ஆகியவை பள்ளிகள் திறப்பு குறித்து வெளியிடும் பரிந்துரைகளை முதலில் கருத்தில் கொள்ள வேண்டும்.

கட்டுக்குள் வந்த பிறகே பள்ளிகள் திறப்பு
அதன் பிறகு முதல்வரின் ஒப்புதலுக்குப் பிறகு பள்ளிகள் திறப்பு குறித்து முடிவெடுக்கப்படும். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்ட போதிலும், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை வெளியில் அனுப்பவே அச்சப்படுகிறார்கள். எனவே,கொரோனா முற்றிலுமாக கட்டுக்குள் வந்த பிறகே தீவிர ஆலோசனைக்குப் பின்னரே பள்ளிகள் திறப்பு குறித்து முடிவெடுக்கப்படும்" என்று கூறினார். கொரோனா பாதிப்பு தமிழ்நாட்டில் தொடர்ந்து குறைந்து வரும் நிலையில் நேற்று மாநிலத்தில் 5,415 பேருக்கு மட்டுமே வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.












Click it and Unblock the Notifications