காலை சென்னை.. மதியம் மதுரை.. மாலை ராமேஸ்வரம்.. புயல் போல் சுற்றிச் சுழலும் அமைச்சர் அன்பில் மகேஷ்!
சென்னை: ஒரே நாளில் தலைநகர் சென்னை, மதுரை, ராமநாதபுரம் என மூன்று மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் செய்து ஆய்வு நடத்தி கவனம் ஈர்த்திருக்கிறார் அமைச்சர் அன்பில் மகேஷ்.
அண்மைக் காலமாக எழுந்துள்ள தன் மீதான விமர்சனங்களுக்கு தனது செயல்பாடுகள் மூலம் பதிலடி கொடுத்து வருகிறார் அமைச்சர் அன்பில் மகேஷ்.
அமைச்சர் மகேஷின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் பலரும் தடுமாறி வருகிறார்கள்.
21 நூற்றாண்டில் இது நடக்கலாமா.. உலகில் 4 நொடிகளுக்கு ஒரு பட்டினிச்சாவு.. வெளியான பகீர் அறிக்கை
சென்னை நிகழ்ச்சி
போதை பொருள் எதிர்ப்பு பிரச்சார பயணத்தை சென்னையில் தொடங்கி வைத்த அமைச்சர் அன்பில் மகேஷ், கல்வி தொலைக்காட்சிக்கான புதிய வளாகம் கட்டும் பணிகளை ஆய்வு செய்தார். அதைத் தொடர்ந்து SCERT திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் மதிப்பீட்டு மையத்தை பார்வையிட்ட அவர் தேவையான மாற்றங்களை அதிகாரிகளுக்கு எடுத்துக் கூறினார். இப்படியாக காலை தொடங்கி நண்பகல் வரை சென்னையில் தனது துறை சார்ந்த அலுவல் பணிகளில் ஈடுபட்ட அமைச்சர் மகேஷ் அடுத்த நான்கரை மணி நேரத்தில் மதுரைக்கு சென்று நிற்கிறார்.
மதுரையில் ஆய்வு
இதனை அறிந்த பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் நடப்பது நிஜமா இல்லை கனவா என தங்களுக்குள் அமைத்திருக்கும் வாட்ஸ் அப் வட்டாரத்தில் ஆளுக்கொரு பதிவை போட்டுவிட்டு அமைச்சர் அன்பில் மகேஷ் ஆய்வு நடத்திக் கொண்டிருந்த கலைஞர் நினைவு நூலகத்திற்கு விரைந்தனர். அங்கு நூலக கட்டுமானப் பணிகள் குறித்து பொதுப்பணித்துறை பொறியாளர்களுடன் கேட்டறிந்த அமைச்சர் மகேஷ், தேவையான சில ஆலோசனைகளையும் வழங்கினார்.
ராமநாதபுரம் பயணம்
காலை சென்னை மதியம் மதுரை, சரி இதோடு அமைச்சரின் நிகழ்ச்சி முடிந்துவிடும் என பார்த்தால் அடுத்த இரண்டரை மணி நேரத்தில் அமைச்சர் அன்பில் மகேஷின் கார் ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் வந்து நின்றது. அங்கு இல்லம் தேடிக் கல்வி மையத்தில் சர்ப்ரைஸாக ஆய்வு நடத்திய அவர், தன்னார்வலரிடம் குழந்தைகளின் கற்றல் திறன் மற்றும் இல்லம் தேடிக் கல்விக்கு கிடைக்கும் வரவேற்பு பற்றி கேட்டறிந்தார். இப்படியாக ஒரே நாளில் சென்னை, மதுரை, ராமநாதபுரம் என பல நூறு கிலோ மீட்டர் தூரம் பயணித்து சக அமைச்சர்களையே புருவம் உயர்த்த வைத்திருக்கிறார்.
அன்பில் மகேஷ்
அமைச்சராக இருந்து வெறுமனே நாட்களை மட்டும் நகர்த்திச் செல்ல தமக்கு விருப்பம் இல்லை என்றும் பள்ளிக்கல்வித் துறையில் பல சாதனைகள் படைத்து வரலாற்றை உருவாக்க வேண்டும் என்பதே தனது நோக்கம் எனவும் அமைச்சர் அன்பில் மகேஷ் ஏற்கனவே அளித்த பேட்டி ஒன்றில் குறிப்பிட்டிருந்தது திரும்பிப் பார்க்கத் தக்கது.